நம் நாட்டில் பல்லாயிரக்கணக்கான கிராமங்கள் இருக்கின்றன என்று நமக்குத் தெரியும். ஒவ்வொரு கிராம ஊராட்சிக்கும் தனிப்பட்ட வருமானங்கள் கிடைக்கின்றன. இந்த வருமானங்கள் அந்தந்த கிராமத்திலிருந்தே கிடைக்கின்றன. ஒரு கிராம ஊராட்சிக்கு எந்தெந்த வழி முறைகளில் வருமானம் வருகிறது என்பதை இப்போது நாம் பார்ப்போம்.
வீட்டு வரி வசூல் செய்வதன் மூலமாக நிறைய வருமானம் கிராம ஊராட்சிக்குக் கிடைக்கிறது. அப்புறம் தொழில் வரி மூலமாகவும் வருமானம் கிடைக்கும். அதாவது கிராமத்தில் தச்சுத் தொழில், ஆபரணத் தொழில், கடைகள், சிறு உணவகங்கள் நடத்துவார்கள் அல்லவா? அவர்களிடமிருந்து வரி வசூல் செய்வார்கள்.
அதுபோல கேபிள் தொலைக்காட்சி நடத்துபவர்களுக்கும் வரி விதிப்பார்கள்.
விவசாயம் செய்யும் நிலங்களின் மீது வரி விதிப்பார்கள்.
சிறு பேருந்து நிலையம் மற்றும் வண்டிப்பேட்டைகளிலிருந்தும் வரி வருமானம் கிடைக்கும். இன்னும் எவற்றின் மூலமாக வருமானம் கிடைக்கும்?
1. கட்டடம் கட்டுவதற்கான உரிமம் (Licence) வழங்குவதற்கான கட்டணம்.
2. சந்தையில் கடைபோடுவதற்கான கட்டணம்.
3. பொதுக் கழிப்பறைக் கட்டணம்.
4. நாய்களுக்கு உரிமம் வழங்குவதற்கான கட்டணம். (அதாவது நாயின் கழுத்தில் சதுர வடிவான சிறு தகரம் (லைசென்ஸ்) தொங்கினால் அது வீட்டு நாய். அந்த லைசென்ஸ் பட்டை கழுத்தில் இல்லாவிட்டால் அது தெரு நாய்).
5. புறம்போக்கு நிலத்தில் விவசாய சாகுபடி செய்பவர்களிடம் வசூல் செய்யப்படும் வரிக் கட்டணம். இதை "2சி' பட்டா வரி என்பார்கள்.
6. மீன் பிடிப்பவர்களுக்குக் குளங்களை ஏலத்தில் விடுவார்கள். இதிலிருந்து கிடைக்கும் குத்தகைக் கட்டணம்.
7. கிராம ஊராட்சிக்குச் சொந்தமான தென்னை மரங்களையும், மற்றும் மாமரங்களையும் குத்தகைக்கு விடுவார்கள். இதில் கிடைக்கும் கட்டணம்.
8. கிராமத்தில் திருவிழாக்கள் நடக்கும்போது அதில் பலவிதமான கடை போடுவார்கள்தானே! (பலகாரக் கடை, பொம்மைக் கடை, பூக் கடை, பழக் கடை, சர்பத் கடை, ராட்டினம் இப்படி பல வியாபாரங்கள் திருவிழாக்களில் நடக்கும்) இவர்களிடமிருந்து சிறு சிறு தொகையை வரியாக வசூல் செய்வார்கள்.
9. ஊராட்சி அமைப்பிற்குச் சொந்தமாக, சமுதாயக் கூடங்கள், திருமண மண்டபம், தங்குமிடம், ஊராட்சிக் கடைகள் இருக்குமல்லவா? இவற்றின் மூலமாக வரக்கூடிய வாடகைக் கட்டணங்கள்.
10. கடல் சார்ந்த கிராமங்களிலிருந்து கிடைக்கும் தோணித்துறைக் கட்டணம்.
11. ஊராட்சிக் குப்பைகள், சாண உரங்கள் இவற்றை விற்பதால் கிடைக்கும் வருமானம்.
12. நன்கொடைகள்.
13. சிறு கருவிகளை வாடகைக்கு விடுவதால் கிடைக்கும் வருமானம்.
14. அரசாங்கம் வழங்கும் ஊக்க நிதி.
15 மாநில மற்றும் மத்திய அரசுகள் வழங்கும் மானியங்கள்.
16. கிராமத்தில் திரையரங்கம் வைத்திருப்பவர்களிடமிருந்து வசூலிக்கப்படும் கேளிக்கை வரி.
இப்படிப் பல வழிகளிலும் கிராம ஊராட்சிக்கு வருமானங்கள் வந்துகொண்டிருக்கின்றன. இப்படிக் கிடைக்கின்ற வருமானங்களை எந்தெந்த வகையில் கணக்கு வைத்துக்கொள்கிறார்கள்?
கிராம ஊராட்சிக்கு வரிகள் மற்றும் வாடகைக் கட்டணங்கள் மூலமாக வசூலாகும் பணத்தை தேசியமயமாக்கப்பட்ட ஏதேனும் ஒரு வங்கியில் கணக்கு தொடங்கிச் சேமிக்கலாம். அல்லது அஞ்சலக சேமிப்பு வங்கியில் சேமிக்கலாம். மண்டல ஊரக வங்கியிலும்கூட சேமிக்கலாம். அந்தந்த கிராமத்தில் இருக்கும் கூட்டுறவு வங்கியிலும் சேமிக்கலாம்.
ஊராட்சி அமைப்புகள் கீழ்க்கண்டவாறு தமது கணக்குகளை வகை பிரித்து வைத்திருக்கும்.
1. ஊராட்சி நிதிக் கணக்கு, 2. மானியங்களின் நிதிக் கணக்கு, 3. ஊராட்சியின் திட்டக் கணக்கு, 4. குடி நீர் நிதிக் கணக்கு.
வங்கியிலிருந்து பணம் எடுக்க வேண்டும் என்றால், காசோலையில் ஊராட்சி மன்றத் தலைவர் மட்டும் கையொப்பம் இட்டால் வங்கியிலிருந்து பணம் தரமாட்டார்கள். அந்தக் காசோலையில் துணைத் தலைவரும் கண்டிப்பாக கையொப்பமிட்டாக வேண்டும். தலைவருக்கும் துணைத் தலைவருக்குமிடையே நல்ல உறவு இல்லையென்றால் என்ன செய்வது? ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் இருப்பார்கள் அல்லவா? அந்த உறுப்பினர்களில் யாராவது ஒருவர் தலைவருடன் சேர்ந்து கையொப்பம் இடலாம். அதன் பிறகுதான் வங்கியிலிருந்து பணம் பெற முடியும்.
ஊராட்சியின் கணக்குகளை நிர்வகிப்பதற்கு "ஊராட்சி எழுத்தர்' என்பவர் இருப்பார். இவர் ஊராட்சி நிர்வாகம் தொடர்பான பணிகளைச் செய்து ஊராட்சி மன்றத் தலைவருக்கு ஒத்துழைப்புத் தருவார்.
(இத்துடன் கிராம நிர்வாகம் பற்றிய தகவல்கள் முற்றுப் பெறுகின்றன. அடுத்த இதழில் வேறு தளத்திற்குச் செல்வோம்)
தொடரும்...
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.