முகப்பு
சிறுவர்மணி

14 வயது ஆன்லைன் கம்ப்யூட்டர் வாத்தியார்!

அப்போது அந்தச் சிறுவன் நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான். அவனுக்கு கணினி (கம்ப்யூட்டர்) அறிமுகப்பட்டது. கணினியைப் பார்த்த சிறுவனுக்கு ஒரே கொண்டாட்டம்! ஒரு நாளில் தனக்குக் கிடைத்த ஓய்வு நேரத்தி

Updated On : 28 டிசம்பர், 2023 at 3:53 PM
பகிர்:

அப்போது அந்தச் சிறுவன் நான்காம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான். அவனுக்கு கணினி (கம்ப்யூட்டர்) அறிமுகப்பட்டது. கணினியைப் பார்த்த சிறுவனுக்கு ஒரே கொண்டாட்டம்! ஒரு நாளில் தனக்குக் கிடைத்த ஓய்வு நேரத்தில் பெரும்பகுதியைக் கணினியுடன் செலவழிக்க ஆரம்பித்தான்.

 ஆரம்பத்தில் உங்கள் எல்லோரையும் போல வீடியோ விளையாட்டுகளில்தான் அவனுடைய ஆர்வம் இருந்தது. ஆனால் சில மாதங்களில் கணினியின் நுணுக்கங்களைக் கற்றுத் தேர்வதில் அவனுடைய கவனம் திசை திரும்பியது. அது அவனது வாழ்வில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியது!

 சாப்ட்வேர் என்ஜினியர் அல்லது ஆன்லைனில் பாடம் எடுப்பவர்கள் யார்? குறைந்தபட்சம் ஒரு முதுநிலை பட்டமோ, கணினி மென்பொருள் துறையில் பல படிப்புகளை முடித்தவர்களாகவோ இருப்பார்கள். அவர்களுக்கும் குறைந்தபட்சம் 25 வயதுக்கு மேல் இருக்கும்! ஆனால் சென்னை அடையாறைச் சேர்ந்த 14-வயதேயான அவினாஷ் மகாராஜ் கணினி ஆன்லைன் படிப்பில் ஏறத்தாழ 34 தேர்வுகளை எழுதி அதில் முதல் தர மாணவனாக தேர்ச்சி பெற்று சாதனை புரிந்துள்ளார்.

Advertisement

 இது போதாதென்று, அமெரிக்கா, இங்கிலாந்து போன்று பல வெளிநாடுகளில் படிக்கும் மாணவர்களுக்கு ஆன்லைனில் பாடமும் எடுத்து வருகிறார்.

 தற்போது 9-ம் வகுப்பு படித்து வரும் அவினாஷ், அல்காரிதம் எனப்படும் சாப்ட்வேர் கட்டளைகளையும் எழுதி வருகிறார். ஆனால் இவற்றை எழுதுவதற்கு அவர் எந்த நிறுவனத்திலும் பயிற்சி பெறவில்லை என்பதுதான் ஆச்சரியம்!

 எப்படி இந்த அளவுக்கு சாதனை புரிய முடிந்தது என்று கேட்டால் அதற்கு அவினாஷின் பதில்:

 "உலகின் முன்னணி சாப்ட்வேர் நிறுவனமான மைக்ரோசாஃப்ட் ஆன்லைன் புரொஃபஷனல் என்ற பெயரில் தேர்வுகளை அறிமுகப்படுத்தியது. இது எனக்குத் தெரிய வந்தது. தேர்வுகளை எழுதிப் பார்க்கலாமே என்று நினைத்து அதற்கான முயற்சியில் இறங்கினேன்.

 முதல் முயற்சியிலேயே அனைத்து தேர்வுகளிலும் தேர்ச்சி பெற்றேன். தேர்ச்சிக்குப் பிறகு "மைக்ரோசாப்ஃட் ஆன்லைன் நிபுணர்' என்ற அங்கீகாரமும் சான்றிதழும் கிடைத்தது. மைக்ரோசாப்ஃட் அல்லது ஆரக்கிள் நிறுவனம் நடத்திய தேர்விலும் வெற்றிபெற்றேன். பி.இ. உள்ளிட்ட பொறியியல் படிப்புகளில் சேர்வதற்கு வயது வரம்பு உள்ளது. என்னுடைய ஆசையெல்லாம், என்னைப் போன்றவர்களுக்காக அரசு இந்த வயது வரம்பை தளர்த்தினால் நன்றாக இருக்கும். இதனால் இளம் வயதில் பொறியியல் படிப்பை முடித்து சாதனை புரிய முடியும் என்று நினைக்கிறேன். கல்வித்துறையினரும் ஒத்துழைத்தால் என்னைப் போல சாதிக்கத் துடிக்கும் சிறுவர்களுக்குத் தூண்டுகோலாக இருக்கும்!'

 சிஸ்கோ மற்றும் எளிதில் தேர்வாக முடியாது எனக் கூறப்படும் லினக்ஸ் தேர்விலும் அவினாஷ் வெற்றி பெற்றிருக்கிறார்.

 "ஆன்லைனில் 3 பாடங்களில் தேர்வு பெறுவதே சிரமமாக உள்ள நிலையில் 32 தேர்வுகளிலும் அவினாஷ் தேர்ச்சி பெற்றிருப்பது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது' என்கிறார் அவினாஷின் தந்தை டாக்டர் ஜி.ஆர்.ரத்னவேல்.

 தற்போது திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டையில் 9-ம் வகுப்பு படித்து வரும் அவினாஷின் எதிர்கால லட்சியம் - புதிய மென்பொருள் கண்டுபிடிப்பதும், மென்பொருள் ஆராய்ச்சித் துறையில் ஈடுபடுவதும்தான்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments