சிறுவர்மணி

மணம் வீசும் மலர்!

முதன்மைக் கல்வி அலுவலர் பள்ளி ஆய்விற்காக வந்திருந்தார்! சிறப்பு விருந்தினர் என்பதால் அவருக்கு அரங்கத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது! 

மா. பிரபாகரன்

முதன்மைக் கல்வி அலுவலர் பள்ளி ஆய்விற்காக வந்திருந்தார்! சிறப்பு விருந்தினர் என்பதால் அவருக்கு அரங்கத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது!  பின் மாணவர்களிடம் அவர்கள் நலன் பற்றி உரையாற்றினார்! பிறகு அருகிலிருந்த கரும்பலகையில் இருவரிப் பாடல் ஒன்றை எழுதியவர் ""இது என்ன வகை அணி இலக்கணத்தைச் சேர்ந்தது என்று விளக்க முடியுமா?...யாராவது முன் வாருங்கள்!'' என்று கேட்டார்.

 திவ்யாவிற்கு இந்தக் கேள்விக்கு பதில் தெரியும். அவள் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவி. எழுந்து செல்ல எத்தனித்தாள். ...எப்படி என்று விளக்கச் சொல்கிறாரே? .....,இத்தனை பேர் கூடியிருக்கும் இந்த அரங்கத்தில் என்னால் தெளிவாகப் பேச முடியுமா?..தவறாக உளறிக்கொட்டி விட்டால்...? அனைவரின் நகைப்புக்கும் ஆளாக வேண்டியிருக்குமே? திவ்யாவிற்கு பயம் வந்தது. உடல் நடுங்கியது. அவள் தயங்கிக் கொண்டிருந்த வேளையில் சித்ரா எழுந்து முன்னால் சென்றுவிட்டாள். சித்ராவும் இவள் வகுப்புதான்.

""வாரிக்களத்தடிக்கும் வந்த பின்பு கோட்டைபுகும் போரில் நின்று பொலிவாகும்!'' என்று தான் எழுதியதை உரக்க வாசித்தவர் ""எங்கே சொல் பார்க்கலாம்?'' என்றார்.

 ""இது இரட்டுற மொழிதல் அணிவகையைச் சேர்ந்தது! ஒருசொல் அல்லது ஒரு தொடரில் இருபொருட்கள் வரும்படி பாடப்படும் பாடலை இரட்டுற மொழிதல் அணி என்பர்! இப்பாடலில் கூறப்படும் இருபொருட்கள் யானை மற்றும் வைக்கோல்! இங்கே களம் என்பது யானைக்குப் போர்க்களம்! வைக்கோலுக்கு நெற்களம்! கோட்டை, யானைக்கு அரண்மனைக்கோட்டை! வைக்கோலுக்கு நெற்கோட்டை! போர்,  யானைக்குச் சண்டை! வைக்கோலுக்கு வைக்கோல்போர்! இப்பாடலின் பொருள் போர்க்களத்தில் சண்டையிடும் யானை அரண்மனைக் கோட்டையில் வைத்துப் பாதுகாக்கப்படும்! நெற்களத்தில் அடிக்கப்படும் வைக்கோல் நெற்கோட்டையில் வைக்கோல்போரில் இருத்தப்படும்! இவ்வாறு இரட்டுற மொழிதல் அணியை சிலேடை அணி என்றும் சொல்வர்!'' என்று தெளிவுபட பதில் சொன்னாள் சித்ரா!

 ""ரொம்ப நல்லா சொன்னே! உன் பேரென்ன?''

என்று அவளைப் பற்றி விவரங்களைக் கேட்டுத் தெரிந்து கொண்டார்! பின் மாணவர்கள் பக்கம் திரும்பி, ""ஓரிரு வார்த்தைகள் தாய்மொழியில் பேச, எழுதவே தடுமாறும் சூழ்நிலையில் இப்படி ஒரு தெளிவான பதிலை ஒரு சிறுமியிடம் நான் எதிர்பார்க்கவில்லை!'' என்றவர் தனது கைப்பையிலிருந்து ஒரு மசிப்பேனாவை எடுத்து அவளுக்குப் பரிசளித்தார்! அதோடு நில்லாமல் அவர் கைதட்டி ஆரம்பித்து வைக்க தலைமை ஆசிரியர் மற்ற ஆசிரியர்கள் மாணவர்கள் என்று ஒட்டு மொத்த அரங்கமும் கைதட்டி அவளுக்குப் பாராட்டுகளைத் தெரிவித்தது!

அப்பா அலுவலகம் விட்டு வந்தார். சோர்ந்த திவ்யாவின் முகத்தைப் பார்த்தார். ""என்ன விஷயம்?''

என்று கேட்டார். திவ்யா பள்ளியில் நடந்ததைச் சொன்னாள்.

""எனக்கு அவர் கேட்ட கேள்விக்கு பதில் தெரியும்பா...! இது எங்க இலக்கணப் பாடப்பகுதியில் வர்ற செய்யுள்தான்! அம்மாகிட்டே இதை நான் பலமுறை ஒப்பிச்சிருக்கேன்!''

""பிறகு ஏன் பதில் சொல்லல?''

திவ்யா அமைதியாக இருந்தாள்.

""சரி, விடு...,இதைப் பெருசா நினைச்சு வருத்தப்படாதே. அடுத்த சந்தர்ப்பத்துல பார்த்துக்கலாம்'' என்றார் அப்பா.

ஆனால் திவ்யாவால் அதை அத்தனை எளிதில் விட்டுவிட முடியவில்லை! அந்த நிகழ்வு அவள் மனதை அரித்துக் கொண்டிருந்தது. சித்ரா எவ்வளவு பெருமிதத்துடன் மேடையிலிருந்து இறங்கி வந்தாள்? ஒட்டு மொத்த அரங்கமும் கரவொலியில் அதிர்ந்ததே? இந்த பரிசும் பாராட்டும் எனக்குக் கிடைத்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும்? சித்ராவை வகுப்பில் பார்க்கும்போதெல்லாம் திவ்யாவின் மனதில் பொறாமைத்தீ எழுந்தது!

 திவ்யா அந்த சம்பவத்தை நினைத்து மனம் புழுங்குகிறாள் என்பதை அப்பா புரிந்து கொண்டார். தக்கசமயத்தில் நல்லது சொல்லி அவளுக்குப் புரிய வைக்கவேண்டும் என அவர் எண்ணிக்கொண்டார்.

ஒரு நாள் மாலை வீட்டு வரவேற்பறையில் அமர்ந்து அவள் அப்பாவோடு பேசிக்கொண்டிருந்தாள். அப்போது அவள் தம்பி இரண்டு காட்டு மலர்களைக் கொண்டுவந்து தந்தான்.

""இதைத் தலையில் வச்சுக்கோக்கா!'' என்று சொல்லிவிட்டுப் போனான்.

இளம் பச்சை நிறம், வெளிர் நீல நிறம் என இரண்டு பூக்களும் மிக அழகாக இருந்தன!

சற்றே பெரிய பூக்கள் என்பதால் இரண்டில் ஒன்றைமட்டும் சூடிக்கொண்டால்தான் நன்றாக இருக்கும் என்று திவ்யாவிற்குத் தோன்றியது. பச்சை வண்ணப் பூவை கீழே வைத்துவிட்டு நீல வண்ணப்பூவைச் சூடிக்கொண்டாள்.

இதை கவனித்த அப்பா, ""ஏன் அது அழகாத்தானே இருக்கு? அதை ஏன் தலையில வச்சுக்கலே?'' என்று கேட்டார்.

""அழகாத்தான் இருக்கு...,ஆனா வாசனை இல்லையே''

""என்னைத் தலையிலே வச்சுக்கலேன்னு இந்தப் பூ வருத்தப்பட்டா நீ அதை ஏத்துக்குவியா?''

""அதெப்படி பூ வருத்தப்படும்?''

""ஒரு பேச்சுக்குத்தான் கேக்கறேன்''

""இரண்டுல எது பெஸ்டோ அதைத்தான் நான் தலையிலே வச்சுக்க முடியும்?''

""அப்படீன்னா நிராகரிக்கப்பட்ட பச்சைப் பூதான் நீ!....,தலையிலே வச்சுக்கிட்ட நீலப்பூதான் சித்ரான்னு சொன்னா ஏத்துக்குவியா?''

திவ்யா திடுக்கிட்டு நிமிர்ந்தாள்.

""என்னப்பா சொல்ல வர்றீங்க நீங்க?''

""முதன்மைக் கல்வி அலுவலர் கேட்ட கேள்விக்கு உனக்கும் பதில் தெரிஞ்சுச்சு! பூக்கள் பெற்ற நிறம் மாதிரி இது நீங்கள் பெற்ற கல்வி! அவ பதில் சொன்னா..., நீ பதில் சொல்லலை! நிறத்தைப் பெற்ற பூக்கள் மணத்தால் பிறரை ஈர்ப்பது மாதிரி இது தான் கற்ற கல்வியை திறம்பட எடுத்துரைப்பது! நிறத்தோடு மணமும் இருந்த பூவை நீ தலைல வச்சுக்கிட்டே! இது பூவுக்கு நீ கொடுத்த அங்கீகாரம்! சபைக் கூச்சம் இல்லாம பதில் சொன்ன சித்ராவுக்கு பரிசும் பாராட்டும் கிடைச்சுது! இது அவளுக்குக் கிடைச்ச அங்கீகாரம்! இதுல நீ வருத்தப்படுறதுக்கு என்ன இருக்கு திவ்யா? இதுல இன்னொரு உண்மை என்னன்னா உனக்கு அந்தக் கேள்விக்குப் பதில் தெரியும் என்பதே வந்திருந்த விருந்தினருக்குத் தெரியாது!'' என்றார் அப்பா!

திவ்யா அமைதியாக இருந்தாள்.

""சபைக் கூச்சம் என்பது எல்லோருக்கும் இருக்குற விஷயம்தான்'' என்றார் அப்பா.

திவ்யா சிந்தனையில் ஆழ்ந்தாள். பிறகு, ""நான் பயிற்சி செய்வேன்..,விரைவில் மணம் வீசும் மலரைப் போன்று பிறரை எனது கல்வியால் வசீகரிப்பேன்!'' என்று மனதில் உறுதி பூண்டாள் திவ்யா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா! தென்னாப்பிரிக்காவுடன் இன்று 4-ஆவது டி20!

மூத்த குடிமக்களுக்கு ரயில்வே கட்டண சலுகையை மீண்டும் வழங்கக் கோரிக்கை

இரட்டைச் சதம்: வரலாறு படைத்தார் அபிஞான் குண்டூ! ஹாட்ரிக் வெற்றியுடன் அரையிறுதியில் இந்தியா!

மன்னிக்க முடியாத குற்றம்!

2-ஆவது மாதமாக எதிர்மறையில் மொத்த விலை பணவீக்கம்

SCROLL FOR NEXT