சொக்கனும் அவன் தம்பி எழிலனும் அருகிலுள்ள பள்ளியில் படித்துக் கொண்டிருந்தார்கள். சொக்கன் நாலாம் வகுப்பு! எழிலன் ரெண்டாம் வகுப்பு!
சொக்கன் சரியாகப் படிப்பதில்லை! பாவம்! அவனுக்கு படிப்பு ஏறவில்லை. எல்லோரும் ""மக்குப் பயல்!....மக்குப் பயல்!'' என்று ஏசிக்கொண்டிருந்தனர். அவனிடம் அன்பாயிருக்கும் மாமா கூட அவனை "எலேய்! மக்குப்பையா!' ன்னு கூப்பிட ஆரம்பிச்சுட்டார். சொக்கனின் அம்மா மிகவும் வேதனைப் பட்டாள்!
ஒரு நாள் பள்ளியிலிருந்து வரும் வழியில் இருக்கும் பிள்ளையார் கோயிலுக்குச் சென்றான் சொக்கன்! பிள்ளையாரைப் பார்த்தான்! பிறகு கண்ணை மூடிக்கொண்டு, ""பிள்ளையாரே! என்னைவிட என் தம்பி நல்லாப் படிக்கணும்! என்னைவிட நிறைய்ய மார்க் வாங்கணும்! பாஸ் ஆகணும்! அவனைக் கைவிட்டு விடாதே!'' என்று வேண்டிக்கொண்டான்.
கோயிலுக்கு வந்தவர்கள் அவனை விநோதமாகப் பார்த்தனர். அவர்கள் ஒருவர் சொக்கனிடம், ""நீ ஏன் உனக்காக வேண்டிக்காம உன் தம்பிக்காக வேண்டிக்கிட்டே? உன்னைவிட உன் தம்பி நல்லாப் படிக்கணும்....மார்க் வாங்கணும்னு வேண்டிக்கிறியே? தம்பி மேல அவ்வளவு பாசமா?''
சொக்கன் அவர்களிடம், ""ஆமாங்க,....அவன் என் தம்பியாச்சே!....கடவுள்கிட்டே என் பாரத்தை எறக்கி வெச்சுட்டேன்! எனக்குத்தான் படிப்பு ஏறல்லே! அவனும் என்னை மாதிரி மக்குன்னு பேர் வாங்கிடக்கூடாதில்லே! அண்ணன் மாதிரி தம்பியும் ஒரு மக்குப்பயல்தான்னு ஊர்ல எல்லாரும் பேசிக்கிட்டா அம்மாவுக்கு எவ்வளவு வேதனையா இருக்கும்? அம்மா வேதனைப் படக்கூடாதில்லே! அதனாலதான் அப்படி வேண்டிக்கிட்டேன்!'' என்றான் சொக்கன்!