கடமைக்கு விருது!
சுபாஷ் சந்திர போஸ் இந்திய தேசிய ராணுவத்தில் பெண்களுக்கென "ஜான்ஸி ராணி பிரிவு' என்ற பிரிவைத் தொடங்கினார். ஒருமுறை அந்தப் படை கூடாரத்திற்குள் சுபாஷ் நுழைந்தார். வேறு யாரோ என்று எண்ணி அங்கிருந்த "கோவிந்தம்மாள்' என்ற பெண்மணி சுபாஷை தடுத்து நிறுத்தினாள்! வந்தது சுபாஷ் என்று அறிந்த பலரும் பதட்டமாயினர். கோவிந்தம்மாளோ உரிய அனுமதியின்றி வந்த சுபாஷை கூடாரத்திற்குள் அனுமதிக்கவில்லை!
புன்னகைத்த சுபாஷ், அவருக்கு அப்படையின் உயரிய விருதை அளித்தார்!
ஜோ.ஜெயக்குமார்,
நாட்டரசன்கோட்டை.
கவிஞரின் குறும்பு!
புகழ்பெற்ற கவிஞர் ஜாமி, ஆண்டவனை நோக்கி, "என் நினைவெல்லாம் நீயே நிறைந்துள்ளாய்!....என் பார்வையில் படுகின்ற பொருள் யாவும் நீயாகவே எனக்குத் தெரியும்!'' என்றார். உடனே ஒரு குறும்புக்கார இளைஞன் அவரிடம், "உங்கள் முன் ஒரு கழுதை வந்தால்?'' என்று கேட்டான்.
உடனே ஜாமி அவனிடம், "அப்போதும் நீயாகவே எனக்குத் தெரியும்!'' என்று அவனைக் கை நீட்டிக் குறிப்பிட்டார்!
ஆர்.அஜிதா,
கம்பம்.
தன்னை மறந்த ஆராய்ச்சி!
ஸ்ட்ராஸ் பெர்க் நகரத்து சர்வகலாசாலையின் ரசாயன ஆசிரியர் லூயி பாஸ்டர். வெறி நாய்க்கடிக்கு மருந்து கண்டுபிடித்தவுரும் இவரே. தனது ஆராய்ச்சிக் கூடத்தில் தன்னை மறந்து மிகத் தீவிரமான ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தார். அப்போது சிலர் ஆராய்ச்சிக் கூடத்திற்கு பரபரப்புடன் விரைந்து வந்தனர். அவர்களது பரபரப்பைக் கண்ட லூயி பாஸ்டர், "என்ன விஷயம்?'' என்று கேட்டார். அதற்கு அவர்கள், "இன்று உங்களுக்குத் திருமணம்!....சர்ச்சில் எல்லோரும் உங்களைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்....சீக்கிரம் கிளம்புங்கள்!'' என்றனர்.
ராஜாரகுமான், கம்பம்.