பனைமரம்
ஊரின் உள்ளும் வெளிப்புறத்தும்உயர்ந்த மலையின் அடிப்புறத்தும்ஏரி, குளங்கள் வயற்புறத்தும்
சிறுவர்மணிபனைமரம்
ஊரின் உள்ளும் வெளிப்புறத்தும்உயர்ந்த மலையின் அடிப்புறத்தும்ஏரி, குளங்கள் வயற்புறத்தும்
ஊரின் உள்ளும் வெளிப்புறத்தும்
உயர்ந்த மலையின் அடிப்புறத்தும்
ஏரி, குளங்கள் வயற்புறத்தும்
எழிலார் சோலை வனப்புறத்தும்
ஆறு, அருவி அணைப்புறத்தும்
ஆழக் கடலின் கரைப்புறத்தும்
சேறு, செம்மண், உவர்ப்புறத்தும்
செழித்து வளர்வது பனையாகும்!
ஊறும் பதநீர், கருப்பட்டி
உறுசுவை நுங்கு, கற்கண்டு
ஏறும் பசியைத் தணிப்பதற்கு
இனிக்கும் பழங்கள் தருவதுடன்
தேறும் கிழங்கும் கொட்டையினைத்
திருகி இரண்டாய் அரிவாளால்
கீறும் பொழுதும் ஒரு பண்டம்
கிடைக்கச் செய்வது பனையாகும்!
கூரை வேய மரம் ஓலை
கூடை, பெட்டி, விசிறி, முறம்
தேரை இழுக்க வடக்கயிறு
தெருவைப் பெருக்கித் துடைப்பமுடன்
நாரில் கட்டில், பாய், தடுக்கு,
நடை மிதி, தொப்பி, கிலுகிலுப்பை
வாரி வாரிப் பல காலம்
வழங்கி வருவது பனையாகும்!
ஏரும் உழவர் பிடிக்காமல்
எவரும் விதையும் விதைக்காமல்
நீரும் உரமும் செலுத்தாமல்
நிலத்தில் சுயமாய்ச் செழித்தோங்கி
வேரில் இருந்து குருத்துவரை
விதவிதப் பயனாய் விளங்குவதன்
பேரில் கற்பகத் தருவென்னும்
பெருமை பெறுவது பனையாகும்