முகப்பு
சிறுவர்மணி

ஷீலாவும் தவளையும்

குட்டிப் பெண் ஷீலாவுக்கு மலர்கள் என்றால் ரொம்பப் பிடிக்கும்! மலர்களை அவற்றின் கிளைகளோடு வெட்டியபோது அவை வாடிவிடுவதை அவள் கண்டாள்.

Updated On : 25 ஏப்ரல், 2020 at 7:14 PM
கதைக்குப் படம் வரைந்தோர் (பூங்கொத்து) - வி.சுவாதி, 5-ஆம் வகுப்பு, பஞ்சாயத்து யூனியன் பிரைமரி பள்ளி, குடியாத்தம்-602. (தவளையுடன் ஷீலா) ஆர்.ஐஸ்வர்யா, 6-ஆம் வகுப்பு, அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளி, திருத்
பகிர்:
Updated On : 27 ஜனவரி, 2024 at 10:01 PM

குட்டிப் பெண் ஷீலாவுக்கு மலர்கள் என்றால் ரொம்பப் பிடிக்கும்! மலர்களை அவற்றின் கிளைகளோடு வெட்டியபோது அவை வாடிவிடுவதை அவள் கண்டாள். அவளுக்கு வருத்தமாகப் போய்விட்டது! செடிகளை வேருடன் பிடுங்கி உடனே அவற்றை நல்ல மண் இருக்குமிடத்தில் புதைத்து வைத்துத் தண்ணீர் விட்டு வளர்த்தால் அவை மீண்டும் நன்றாகத் துளிர்த்து பூக்களைக் கொடுக்கும் என்று அவள் தாத்தா சொல்லியிருந்தார். அத்துடன் அவளுக்கு ஒரு பூந்தொட்டியையும் பரிசாக அவர் கொடுத்தார். 

அவள் வீட்டிற்கு அருகில் இருந்த ஆற்றங்கரையில் செக்கச் செவேல் என்று கொத்துக்கொத்தாய் மலர்கள் பூத்திருந்தன. அந்த மலர்ச்செடியை வேரோடு பிடுங்கி எடுத்துக்கொண்டு வந்து தன் வீட்டுத் தோட்டத்தில் வைக்க வேண்டும் என்று அவள் ஆசைப்பட்டாள்!  அதற்காக தாத்தா கொடுத்த சின்னத் தொட்டியை  எடுத்துக்கொண்டு ஆற்றுக்குக் கிளம்பினாள்.
அவள் புறப்படும்போது ஷீலாவின் அம்மா எதையோ தேடிக்கொண்டிருந்தாள். 
""என்னம்மா தேடறே?'' 

""என்னோட  ஒற்றைக் கல் மூக்குத்தியை எங்கேயோ தொலைச்சுட்டேன்... அதைத்தான் தேடிக்கிட்டு இருக்கேன்!'' 

Advertisement

ஆற்றங்கரைக்குச் சென்றாள் ஷீலா. அங்கு இருந்த சிவப்பு மலர்ச் செடியை அவள் வேருடன் பிடுங்கி தன் தொட்டியில் வைத்தாள். பிறகு தொட்டியில் ஆற்றுமண்ணை இட்டு நிரப்பினாள். கையெல்லாம் மண்ணாகிவிடவே ஆற்று நீரில் கைகளைக் கழுவிக்கொண்டாள். அப்போது அவள் கையில் ஒரு பச்சைத் தவளை படக்கென்று வந்து அமர்ந்தது! அவளுக்கு அது ஆச்சரியமாகப் போய்விட்டது! 

தவளையால் பேசவோ கத்தவோ முடியவில்லை. அது வாயைத் திறந்து காட்டியது. வாய்க்குள் ஏதோ மினுமினுவென்று தங்கம் போல் மின்னியது. அது தொண்டையை அடைத்துக்கொண்டிருந்தது. ஷீலாவுக்கு தவளை படும் வேதனையைப் பார்த்தாள். அவளுக்கு மனசு இரங்கிவிட்டது. தவளையின் தோள் பகுதியை மெல்ல அழுத்தினாள்! 

தொண்டையில் மின்னிக்கொண்டிருந்த அந்தத் தங்கத் துண்டு வெளியில் வந்து விழுந்தது! ஷீலாவுக்கு ஆச்சரியமாகப் போய்விட்டது. தவளையைக் கீழே விட்டாள். அது சந்தோஷமாகக் கத்திக்கொண்டு ஆற்றில் துள்ளிக்குதித்து நீந்தியது!

கீழே விழுந்த அந்தச் சிறிய தங்கம் அம்மாவின் மூக்குத்திதான் என்பதை ஷீலா தெரிந்துகொண்டாள்! அவளுக்கு சந்தோஷமாக இருந்தது. ஆனால் இந்த மூக்குத்தி தவளையின் வாயில் எப்படி வந்தது? அவளுக்குப் புதிராக இருந்தது.
பூந்தொட்டியையும், அம்மாவின் மூக்குத்தியையும் எடுத்துக்கொண்டு வீட்டிற்குப் போனாள் ஷீலா. நடந்த எல்லாவற்றையும் சொல்லி அம்மாவிடம் மூக்குத்தியைக் கொடுத்தாள்.  

அம்மாவுக்கு மூக்குத்தி கிடைத்ததில் ரொம்ப சந்தோஷம்! 

""இது எப்படிம்மா தவளையின் வாய்க்குள் வந்தது?''

""காலையிலே ஆற்றுக்குக் குளிக்கப் போனேன்.  மூக்குத்தியைக் கழற்றாமலே குளித்தேன். முங்கிக் குளித்துவிட்டு முகத்தைத் தேய்க்கும்போது அது ஆற்று நீரில் விழுந்திருக்கும். அதை ஏதோ பூச்சி என்று தின்ன முயற்சி செய்யும் போது அது தவளையின் தொண்டையில் மாட்டியிருக்கும்!.... ஆனால் இந்த மூக்குத்தி கிடைச்சது என்னோட அதிருஷ்டம்தான்! அதிலே சந்தேகமே இல்லை!'' என்றாள் அம்மா உற்சாகமாய்!

""எல்லாம் அந்த சிவப்புப் பூ நம்ம வீட்டுக்கு வந்த அதிருஷ்டம்!'' என்று கூறிக்கொண்டு அதை தோட்டத்தில் நட்டுவைக்க தாத்தாவுடன் சென்றாள் ஷீலா.

""தவளையின் துன்பத்தை நீக்கினதுக்குக் கிடைத்த பரிசாகக்கூட இருக்கலாம்!'' என்றாள் அம்மா.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.