அம்மா நட்ட முல்லைக்கு
அப்பா அமைத்த பந்தலிலே
ஆகாயத்தின் மீன்கள் போல்
ஆயிரம் பூக்கள் சிரித்திருக்கும்!
தாத்தா நட்ட தக்காளி
தகதக என்றே பழங்கள் தரும்!
பாட்டி நட்ட பப்பாளி
பழுத்துத் தொங்கும் குலைகுலையாய்!
மாமா நட்ட தேமாவோ
மல்கோவாப் பழங்கள் தரும்!
அத்தை நட்ட அத்திமரம்
அழகாய்ச் சிவந்த பழங்கள் தரும்!
சித்தி நட்ட செவ்வாழை
சீப்புச் சீப்பாய் பழங்கள் தரும்!
அண்ணன் வைத்த அன்னாசி
அரண்போல் வேலியில் மடல் விரிக்கும்!
அக்காள் நட்ட மல்லிகைதான்
அந்தியில் மலர்ந்து மணம் வீசும்!
பிஞ்சுக் கரத்தால் நான் வைத்த
பிச்சிப் பூவும் உடன் மணக்கும்!
காலையில் தண்ணீர் பாய்ச்சிடுவோம்!
களைகள்போக்கிக் காத்திடுவோம்!
சோலை போலத் தோன்றிடுதே!
சொந்தங்கள் வைத்த தோட்டமிது!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.