மரங்களின் வரங்கள்!: விஷமுறிக்கி - பிலிம்பி மரம்
நான் தான் பிலிம்பி மரம் பேசுகிறேன். எனது அறிவியல் பெயர் மாக்னோலியா அக்யூமினாட்டா அல்லது அவெர்ரோவா பிலிம்பி என்பதாகும்.
குழந்தைகளே நலமா?
நான் தான் பிலிம்பி மரம் பேசுகிறேன். எனது அறிவியல் பெயர் மாக்னோலியா அக்யூமினாட்டா அல்லது அவெர்ரோவா பிலிம்பி என்பதாகும். நான் சோரல் குடும்பத்தைச் சேர்ந்தவன். எனக்கு வெள்ளரி, விளிம்பி, கேரளா நெல்லி, சிவந்த மரம், கமியாஸ் என்ற வேறு பெயர்களும் உண்டு. எனது தாயகம் மலேசியா.
இருப்பினும் நான் இந்தியா, இந்தோனேஷியா, இலங்கை, தான்சானியா முதலிய வெப்பமண்டல நாடுகளில் அதிகமா காணப்படறேன். நான் 33 அடி உயரம் கூட வளருவேன். ஆப்பிரிக்க மக்கள் என்னை ஒரு புனித மரமா கருதறாங்க. அவர்கள் நடத்தும் அனைத்து சடங்குகளிலும் என் மரம் இடம் பெற்றிருக்கும். இது எனக்குப் பெருமையா இருக்கு.
Advertisement
இலங்கை மக்கள் புளிப்பு சுவைக்காக என் காய்களை அதிகம் பயன்படுத்தறாங்க. என் பழங்கள் கிளைகளின் முனைகளில் கொத்தாக இருக்கும். அதாவது வாழைப் பழங்கள் போல ஒன்றோடொன்று இணைந்து சிறிய சீமை சுரைக்காய் போல இருக்கும். நான் சுமார் 15 மீட்டர் உயரம் வரை வளருவேன்.
குழந்தைகளே, என் பூக்கள் மஞ்சள், பச்சை அல்லது ஊதா நிறத்தில் மணமாக இருக்கும். உங்கள் வயிறு சம்பந்தமான அனைத்து நோய்களுக்கும் என் பூக்கள் ஒரு தீர்வா அமைந்திடும். என் பூக்களை கஷாயம் போல் செய்து குடித்தால் உங்களுக்கு வயிறு தொடர்பான எந்தப் பிரச்னையும் இருக்காது.
என் பழத்தில் வைட்டமின்கள், புரதம், நார்ச் சத்து, கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ் போன்ற தாதுகள் அதிகம் இருக்கின்றன. என் காய்களை ஊறுகாய் செய்து சாப்பிட்டால் அவ்வளவு சுவையாக இருக்கும். என் இலைகளை மைய அரைத்து நமைச்சல், சொரி, பூச்சிக் கடிகளால் ஏற்பட்ட வீக்கம் மீது தடவினால் அவை இருந்த இடம் தெரியாது.
இருமலால் அவதிப்படுபவர்கள் என் பழத்தை உண்டால் இருமல் சட்டென்று நின்று விடும். பிலிம்பி பழத்தின் சாறில் அதிக அளவு ஆக்ஸலேட் உள்ளன. இது கரிம அமிலமாகும். இது தான் எனக்கு புளிப்பு சுவையை அளிக்கிறது. ஆனால், நீங்கள் அதிகமாக உட்கொள்ளாதீர்கள். ஏன்னா... இந்த ஆக்ஸ்லேட்டுகள் சிறுநீரகத்தில் கற்களை உருவாக்குவதுடன், சீறுநீரக செயலிழப்புக்கும் காரணமாகி விடும், இது என்எச்சரிக்கை.
ஆனால், அதே சமயத்தில் இதய நோய், நீரிழிவு, பக்கவாதம், புற்று நோய், கல்லீரல் பாதிப்பு ஆகியவற்றின் சிகிக்சைக்காக என் பழத்தை மருத்துவர்கள் அதிகம் பரிந்துரைக்கறாங்க.
என் இலை ஒரு விஷமுறிக்கி, உடனடியாக உயிர் காப்பாற்றப்படும். பழங்குடி மக்கள் அக்காலத்தில் பாம்புக் கடி, தேள் கடி ஆகியவற்றின் விஷம் உடலில் இறங்காமல் இருக்க, கடித்த அல்லது கொட்டிய இடத்தில் வைத்து கட்டுவார்கள், விஷம் உடலில் மேலும் பரவாது. உங்களுக்கு இருமல், சளி, மூட்டுவலி இருக்கா, கவலையை விடுங்க. என் இலையை நன்கு தண்ணீரில் அலசி, பின் வெந்நீரில் கலந்து குடித்தால் அவை ஓடிவிடும்.
குழந்தைகளே, நீங்கள் இயற்கையை எதிர்த்துப் போராடாதீர்கள். ஏன்னா, இயற்கை எதிர்த்துப் போராடுவது என்பது குளவிக் கூட்டில் கோல் வைத்தது போலாகிவிடும். மனித சமுதாயம் ஒருவரையொருவர் சார்ந்து வளருவது போல, நீங்கள் இயற்கையை சார்ந்து தான் வளர வேண்டும் என்பதை உணருங்கள். தனி மலர் மாலையாகாது, தனி மரம் தோப்பாகாது, இயற்கையோடு சார்ந்து வாழும் வாழ்வே நோயற்ற சமுதாயத்தை உருவாக்கும் என்பதை நீங்கள் அறிந்துள்ளீர்கள் அல்லவா? நன்றி குழந்தைகளே, மீண்டும் சந்திப்போம்.
(வளருவேன்)