மரங்களின் வரங்கள்!: பொலிவைத் தருவேன்- பாதமி மரம்
நான்தான் பாதமி மரம் பேசுகிறேன். எனது அறிவியல் பெயர் "ப்ரூனஸ் ஆர்மீனியாகா' என்பதாகும். நான் ரோசாசியே குடும்பத்தைச் சேர்ந்தவன்.
குழந்தைகளே நலமா?
நான்தான் பாதமி மரம் பேசுகிறேன். எனது அறிவியல் பெயர் "ப்ரூனஸ் ஆர்மீனியாகா' என்பதாகும். நான் ரோசாசியே குடும்பத்தைச் சேர்ந்தவன். எனது தாயகம் ஆசியா. நான் நம் நாட்டில் ஹிமாச்சல பிரதேசம் மற்றும் ஜம்மு காஷ்மீரில் அதிகமாகக் காணப்படுகிறேன். எனக்கு "ஆப்ரிகாட்' என்ற வேறு பெயரும் உண்டு. இதில் உங்கள் உடல் நலத்திற்குத் தேவையான அனைத்து வைட்டமின், தாதுக்களும் நிறைந்துள்ளன.
பாதாமி பழம் ஆரஞ்சு மற்றும் மஞ்சள் நிறத்தில் காணப்படும். நான் 7 முதல் 10 மீட்டர் உயரம் வரை வளரும் ஒரு குறுமரமாவேன்.
Advertisement
என் பழங்களை அப்படியே சாப்பிடலாம். என் பழத்தில் வைட்டமின் ஏ, சி, ஈ, கேயும், சிலிக்கான், கால்சியம், பாஸ்பரஸ், தாமிரம், மாங்கனீசு, மெக்னீசியம், பொட்டாசியம், இரும்பு மற்றும் நியாசினும் நிறைஞ்சிருக்கு. கருவுற்ற பெண்களுக்கு என்னிடமுள்ள இந்த வைட்டமின்களும், சத்துகளும் அருமருந்து. தாய்க்கும், சேய்க்கும் எந்த நோயும் வராமல் என் பழம் காக்கும். அதோடு, நார்ச்சத்து சற்று அதிகமாகவே இருக்கு. அதனால், உங்களுக்கு செரிமான பிரச்னையே இருக்காது. உடலில் சேரும் கொழுப்பும் ஓடிவிடும்.
என் பழங்களை நீங்கள் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், உடல் பலம் பெறுவதோடு, பொலிவாக, அதான் ஸ்மார்ட்டாக, இருப்பீங்க. என் பழத்தில் கால்சியம் நிறைந்திருப்பதால் நான் எலும்புகளுக்குச் சிறந்த வலுவூட்டி. என் விதையிலிருந்து ஒருவித எண்ணெய்த் தயாரிக்கிறாங்க. இந்த எண்ணெய் அனைத்து சரும நோய்களுக்கும் அருமருந்துன்னு ஆராய்ச்சியாளர்கள் சொல்றாங்க. அதோடு, இந்த எண்ணெய்யைக் கொண்டு மசாஜ் செய்து வந்தால் ஆஸ்துமா நோயும் குணமாகும். காது வலியைப் போக்கவும் இந்த எண்ணெய்யைப் பயன்படுத்தறாங்க. அதற்குக் காரணம் என் பழத்தில் அதிக அளவில் ஆன்டிஆக்ஸிடென்ட்டுகள் இருப்பதுதான்.
என் பழத்தில் பீட்டா கரோட்டினும்,
ஆக்ஸிஜனேற்றங்களும் இருப்பதால், உங்கள் கண் பார்வையை ஆரோக்கியமாக வைக்க உதவுவதோடு, புற்றுநோய் செல்களின் வளர்ச்சியையும் தடுக்க உதவுகிறேன் என ஆராய்ச்சியாளர்கள் சொல்றாங்க.
நீங்கள் எப்போதும் சோர்வாக இருப்பதாக உணருகிறீர்களா? வருந்தாதீங்க. என் பழத்தில் இரும்பு, தாமிரம் உள்ளதால் அவை உங்கள் சோர்வைக் குறைத்து, ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கச் செய்து, சிவப்பணுக்களையும் உருவாக்கி, உங்களை புத்துணர்ச்சியுடன் எப்போதும் இருக்க உதவுது.
என் விதையில் மிக மிகக் குறைந்த அளவு"சயனைட்' இருப்பதாக விஞ்ஞானிகள் சொல்றாங்க. அளவுக்கு மீறினால் அமிழ்தமும் நஞ்சுதானே குழந்தைகளே!
அதனால், என் விதைகளை நீங்கள் குறைந்த அளவே சாப்பிட வேண்டும்.
மிக்க நன்றி குழந்தைகளே, மீண்டும்சந்திப்போம்.
(வளருவேன்)