மரங்களின் வரங்கள்!: ஜம்போ ஓடி வா ! நீர்க்குமளி மரம்
நான்தான் நீர்க்குமளி மரம் பேசுகிறேன். எனது தாவரவியல் பெயர் "சிஸிஜியம் சமரன்ஜென்ஸ்' என்பதாகும். நான் மிர்ட்டாசியே குடும்பத்தைச் சேர்ந்தவன்.
குழந்தைகளே நலமா?
நான்தான் நீர்க்குமளி மரம் பேசுகிறேன். எனது தாவரவியல் பெயர் "சிஸிஜியம் சமரன்ஜென்ஸ்' என்பதாகும். நான் மிர்ட்டாசியே குடும்பத்தைச் சேர்ந்தவன். என்னை ஆங்கிலத்தில் "ரோஸ் வாட்டர் ஆப்பிள்ன்னு' அன்பா அழைப்பாங்க. எனக்கு "ஜம்பு மரம்' என்ற வேறு பெயரும் உண்டு.
நான் சுந்தா தீவுகள், மலாய் தீபகற்பம், அந்தமான் நிகோபார் தீவுகள் ஆகிய இடங்களைத் தாயகமாகக் கொண்டிருக்கிறேன். நான் அதிகக் கிளைகளுடன் 20 முதல் 20 அடி உயரம் வரைகூட வளருவேன். என்னை நீங்கள் தமிழ்நாட்டில் 1500 அடி உயரத்திற்கு மேலுள்ள ஏலகிரி, ஏற்காடு போன்ற மலைப் பகுதிகளில் காணலாம்.
Advertisement
என் இலை வாசனைமிக்கது. அது எதிரடுக்கில் 10 20 செ.மீ. அளவில் முட்டை வடிவில் பார்ப்பதற்கு அழகாக இருக்கும். என் பூக்கள் நான்கு இதழ்களுடன் இளமஞ்சள் நிறத்தில் கொத்தாகப் பூக்கும், நறுமணமும் மிக்கது. என் பழங்கள் சுவையாக இருக்கும்.
அதோடு குழந்தைகளே, என் பழங்கள் இளஞ்சிவப்பு அல்லது வெள்ளை நிறத்தில் பளபளப்பாக, முன்கோண வடிவத்தில் அடிபாகத்தைக் கொண்டு, முந்திரிப் பழ வடிவத்தில், ரோஜா இதழ்களின் நிறத்தில், கண்ணைப் பறிக்கும் வகையில், பஞ்சு போன்ற சதைப் பகுதியுடன் இருக்கும்.
நோய் எதிர்ப்பு சக்தி என் பழத்தில் அதிகமாயிருக்கு. குழந்தைகளே, நான் தரும் பழம் மிகவும் சத்துமிக்கது. என் பழச்சாறு குளிர்ச்சிமிக்கது. நார்ச்சத்து நிறைந்தது. என் பழத்தில் 93 சதவீத நீர்ச்சத்துகள், புரோட்டீன், கால்சியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், விட்டமின்கள் சி, ஏ. சாம்பல் சத்து, சிட்ரிக் அமிலம் முதலிய நுண்ணூட்ட சத்துகள் அதிகமாகயிருக்கின்றன. அதோடு இப்பழம் மறைமுகமாக மார்பகப் புற்று நோய் ஏற்படுவதைத் தடுப்பதாகவும், என் பூக்களிலிருந்து எடுக்கப்படும் சாறு காய்ச்சலைக் குறைப்பதாகவும், இலைகளிலிருந்து பெறப்படும் சாறு இருமல், மூட்டு வலிக்குப் பயன்படுவதாகவும், சிறுநீரின் அளவை அதிகரிப்பதாகவும் ஆராய்ச்சியாளர்கள் சொல்றாங்க.
உங்கள் ரத்தத்தில் மாவு சர்க்கரையாக மாறும் அளவை என் பழம் குறைப்பதால், மருத்துவர்கள் சர்க்கரை நோய்க்கு மருந்தாக இப்போதெல்லாம் என் பழத்தைத்தான் பரிந்துரைக்கிறார்களாமே! அது மட்டுமல்ல குழந்தைகளே, உங்கள் ரத்தத்தில் சேரும் கொழுப்பின் அளவைக் குறைக்கவும், செரிமான சக்தியை அதிகரிக்கவும் நான் பயன்படுகிறேன். அதோடு, காய்ச்சலை ஏற்படுத்தும் வைரஸ் தொற்றுகளுக்கு எதிராகவும் செயல்படுகிறேன். அதனால், உங்களைத் தாக்க வரும் காய்ச்சல் என்னைக் கண்டால் காததூரம் ஓடும். என் பழம் அதிகமான அமிலச் சுவை இல்லாதிருப்பதால் உங்களுக்கு ரொம்பவும் பிடிக்கும். என் பழத்திலிருந்து பானம் செய்து அருந்தலாம். இது மூளை மற்றும் ஈரல்களுக்கு நல்லது.
மரம் உங்களின் மூன்றவாது கரம் என்பதை உணர்ந்து கொண்டீர்களாக குழந்தைகளே? ஒரு மரம் வருடத்திற்கு 118 கிலோ பிராண வாயுவை வெளியிடுகிறது. நிழல் தரும் ஒரு மரம் வெயில்காலத்தில் 20 டிகிரி அளவுக்கு வெயிலின் தாக்கத்தைக் குறைக்குமாமே...
மரம் வளர்த்தால் மழை பொழியும், மழை பொழிந்தால், ஏழை, எளிய மக்களின் வறுமை ஒழியும். நன்றி குழந்தைகளே, மீண்டும் சந்திப்போம்.
(வளருவேன்)