அங்கிள் ஆன்டெனா
பட்டாம்பூச்சிகள் தூங்குமா? அதன் உணவுதான் என்ன?
பட்டாம்பூச்சிகளுக்குத் தூக்கம் என்று ஒன்று இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். ஆனாலும் சுற்றிச் சுற்றி அழகாகச் சிறகை விரித்து, கண்ணைக் கவரும் வண்ணம் பறந்துகொண்டே இருக்கும் இந்தப் பூச்சிகளுக்கும் ஓய்வு தேவை அல்லவா?
ஏதாவது கிளையிலோ, இலையிலோ உட்கார்ந்து கொண்டு கண்ணை மூடிக் கொள்ளுமாம். அப்படியே மயக்கம் போட்டது போல உணர்வின்றிச் சிறிது நேரம் கிடக்குமாம். இந்தச் சமயத்தில், அதன் குட்டி உடம்பிலுள்ள சிறிய பாகங்கள் அலுப்பினால் சற்றே ஓய்வு எடுத்துக் கொள்ளுமாம். இது அத்தனையும் பெரும்பாலும் இரவு நேரங்களில்தான் நடக்கும். உணவு என்று எதையும் சாப்பிடுவதில்லை இந்தப் பூச்சிகள். ஏனெனில் இவற்றுக்குப் பற்கள் கிடையாது. ஆகவே சாப்பிட முடியாது. ஆனால், குடிக்கும். நிறைய நிறையத் தேனை. பூவிலுள்ள தேனைக் குடித்துத்தான் இவை உயிர் வாழ்கின்றன.