செய்திச் சிட்டு!
பிள்ளைகள் எல்லோரும் பூங்காவில் காத்திருந்தனர். வேகமாகப் பறந்து வந்த சிட்டு, ஃப்ளப் என்று
ஐஸ் ஹோட்டல்!
பிள்ளைகள் எல்லோரும் பூங்காவில் காத்திருந்தனர். வேகமாகப் பறந்து வந்த சிட்டு, ஃப்ளப் என்று தன் இறக்கையால் பாலுவை தீண்டிவிட்டு, மரத்தில் அமர்ந்து தன் குரலை செருமிக்கொண்டது!
சற்று திடுக்கிட்ட பாலு சுதாரித்துக் கொண்டான். பிள்ளைகள் ஆர்வத்துடன் சிட்டை கவனித்தனர்.
"ஜில்லுன்னு ஒரு செய்தி... ஸ்வீடனில் தற்போது தவிர்க்க முடியாத சுற்றுலாத்தலமாகி விட்டது "ஜுக்காஸ் ஜார்வி' என்னும் இடம். இந்த இடத்தில் "டோர்ன்' என்னும் நதி ஓடுகிறது. இந்த நதி குளிர்காலத்தில் முழுக்க உறைந்துவிடும்! இதைப் பார்ப்பதற்காக சுற்றுலாப் பயணிகள் சிலர் இங்கு வருவர். அவர்களைக் கவரும் விதத்தில் "இங்வி பெரர்க்விஸ்ட்' என்பவர் இங்கு முழுக்க முழுக்க பனிக்கட்டியாலான ஒரு கட்டுமானத்தை உருவாக்க எண்ணிணார். முதலில் சிறு அறையாகவும், பின்பு இக்ளூ போன்ற அமைப்புடன் இந்தக் கட்டுமானங்களை உருவாக்கினார். நல்ல வரவேற்பு இருந்தது.
பிறகுதான் பெரிய அளவில் ஒவ்வொரு ஆண்டும் பழைய பனி விடுதியை இடித்துவிட்டு, புதிய பனி விடுதியை உருவாக்கினார். நதியைப் பார்வையிட ஆவலுடன் வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இந்தப் புதிய பனி விடுதியைப் பார்வையிடும் ஆவலும் பெருக ஆரம்பித்தது.
தற்போது தவிர்க்க முடியாத சுற்றுலாத் தலமாகிவிட்டது இந்தப் பனி விடுதி! அறைகள், சுவர்கள் அனைத்தும் பனிக்கட்டி மற்றும் பனிப்பொழிவுகள் கலந்த கலவையாலேயே வடிவமைத்திருக்கிறார்கள்''
"குளிராதா?'' என்று கேட்டான் பாலு.
"உறங்குவதற்கு தெர்மாகோலால் தயாரிக்கப்பட்ட போர்வை, குளிர்கால உடை, தொப்பி அனைத்தும் தருகிறார்கள்! இப்போ இந்த ஹோட்டலை எவ்வளவு பெரியதாகக் கட்டியிருக்கிறார்கள் தெரியுமா?''
"எவ்வளவு பெருசு.... சொல்லு!'' என்றான் ராமு.
"59, 200 சதுர அடியில் கட்டியிருக்கிறார்கள். இதைக் கட்ட சுமார் 1,000 டன் பனிக்கட்டியும், 30,000 டன் பனிப்பொழிவும் உபயோகப் படுத்தப்படுகின்றன. விடுதியின் உள்ளே அற்புதமான கலைநயம் நிறைந்த வேலைப்பாடுகள் உள்ளன. இந்தப் பனி விடுதி கட்டும் பணியில் சுமார் 100 பேர் ஈடுபடுத்தப்படுகிறார்கள். விடுதியில் 36 அறைகள் உள்ளன. மேலும் 12 தொகுப்பறைகளும் உள்ளன. சாதாரண அறைகளுக்கு சுமார் இந்திய மதிப்பில் 25,000 ரூபாயும், சிறப்பு அறைகளுக்கு 50,000 ஆயிரம் ரூபாயும் வசூலிக்கிறார்கள்...''
"உள்ளே குளிர்காய்வதற்கான இடம் இருக்கா?'' என்று கேட்டாள் மாலா.
"ஓ... அதற்கென்றே ஓர் அறையிருக்கிறது. குளிர் தாங்க முடியாதவர்கள் அங்கு சென்று சற்று உடலை சூடேற்றிக் கொள்ளலாம். முழுக்க சூரிய சக்தியால் மின்சாரத்தை பாட்டரிகளில் சேமித்து அதைக்கொண்டு 5 டிகிரி செல்ஷியஸில் ஹோட்டலை எப்போதும் குளிர்ச்சியாக வைத்திருக்கிறார்கள்.''
"விடுதியில் ஐஸ்க்ரீம் கிடைக்குமா?'' என்று கேட்ட பாலாவை முறைத்துப் பார்த்தது சிட்டு.
பிள்ளைகள் எல்லோரும், "வெரிகுட்... கோடை ஆரம்பித்து விட்டது! ஜில்லுனு ஒரு செய்தி சொல்லியிருக்கே சிட்டு. தேங்க் யூ!'' என்றனர்.
"பை... பை!'' என்று கூறிவிட்டு வானை நோக்கிப் பறந்து செல்லும் சிட்டுக்குக் கைகளை அசைத்து விடையளித்தனர் பிள்ளைகள்!