இந்தியாவிலேயே முதல் முறையாக பல்கலைக்கழகச் சான்றிதழுடன் காது கேளாதோர் மற்றும் வாய்பேச முடியாதோருக்கு திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகம் சார்பில் கணினிப் பயிற்சி அளித்து வருகிறது.
இப் பயிற்சி திருச்சி காஜாமலை வளாகத்தில் செயல்பட்டு வரும் பாரதிதாசன் பல்கலைக்கழகத் தொழில்முனைவோர் சுயவேலை மேம்பாட்டு நிறுவனத்தால் நிகழ்த்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு 30 மாணவ, மாணவிகளுக்கு கணினிப் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
கடந்தாண்டு இங்கு பயிற்சி பெற்ற 43 பேரில் பலர் தற்போது நல்ல வேலையில் சேர்ந்து தங்களாலும் பணம் சம்பாதிக்க முடியும் என்று நிரூபிக்கும் வகையில் சிறப்பாகப் பணியாற்றி வருகின்றனர். சிலர் சொந்தமாகக் கணினி மையங்கள் அமைத்து டி.டி.பி. பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதே இலவசப் பயிற்சி வகுப்பில் கலந்து கொண்டு 7 மாதப் பயிற்சி முடித்த உதயகுமார் என்ற காதுகேளாத மாணவர் தற்போது இங்கேயே பயிற்சியாளராகப் பணியாற்றி வருகிறார். இவரின் பயிற்சி புதிதாக வந்த மாணவ, மாணவிகளுக்கு ஒரு வரப்பிரசாதமாகவே உள்ளது.
""அனைத்துப் புலன்களும் சரியாக இருப்பவர்கள்கூட கணினியைப் பற்றி தெரிந்து கொள்ள ஈடுபாடு இல்லாமல் இருந்து வரும் நிலையில், காது கேளாத மற்றும் வாய்பேச முடியாத மாணவ, மாணவிகள் காட்டி வரும் ஆர்வம் பிரமிக்க வைக்கிறது'' என்றார் பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணைவேந்தர் மு. பொன்னவைக்கோ.
இந்தப் பயிற்சி குறித்து, பாரதிதாசன் பல்கலைக்கழக தொழில்முனைவோர் சுயவேலை மேம்பாட்டு நிறுவன இயக்குநர் கோ. பார்த்தசாரதி கூறியது:
""காது கேட்காத, வாய் பேச முடியாத குழந்தைகளைக் கொண்ட பெற்றோர் ஒருவித தாழ்வு மனப்பான்மைக்கு உள்ளாகி தங்களது குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புவதை இடையில் நிறுத்திவிடுகின்றனர். அத்தகையவர்கள் அதிக ஆர்வத்துடன் கலந்து கொண்டு பயிற்சியைச் சிறப்பாக முடித்து, அவர்களில் பலர் இன்று நல்ல நிலையில் உள்ளனர் என்பது எங்கள் முயற்சிக்கு கிடைத்த வெற்றியாகும்'' என்றார் பார்த்தசாரதி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.