தமிழ், தெலுங்கு, மலையாளம் என பிஸியாக வலம் வரும் அமலா பால் கொச்சியில் ரூ.1 கோடி மதிப்பில் ஒரு பிரம்மாண்டமான பங்களாவை வாங்கியுள்ளார்.
"ரா ஒன்' படத்தில் சம்பளம் வாங்காமல் ஒரு சிறிய காட்சியில் நடித்த ரஜினிகாந்துக்குப் பரிசளிப்பதற்காக படத்தின் நாயகன் ஷாருக் கான் விலையுயர்ந்த பிஎம்டபிள்யூ கார் ஒன்றை வாங்கியிருக்கிறார்.
நடிகை ரோகிணி "பம்பரம்' என்ற படத்தின் மூலம் இயக்குநர் ஆகிறார். இதற்காக நெல்லையிலும் தூத்துக்குடியிலும் ஒரு பிரமாண்டமான அரங்கில் - நடிக்க விரும்பும் பலரையும் வரவழைத்து நடிகர், நடிகையருக்கான தேர்வை நடத்தியிருக்கிறார்.
லண்டனில் உள்ள மேடம் டுஸôட்ஸ் அருங்காட்சியகத்தில் உலகின் பிரபலமானவர்களுக்கு மெழுகுச் சிலை வடிவமைக்கப்படுவதுண்டு. இந்தியாவிலிருந்து மிகக் குறைந்த வயதில் மெழுகுச் சிலை வைக்கப்பட்ட பெருமை பாலிவுட் நடிகர் ஹிரித்திக் ரோஷனையே சேரும். எந்த மெழுகுச் சிலைகளை பார்வையாளர்கள் அதிகமாக முத்தமிடுகிறார்கள் என ஆண்டுதோறும் ஒரு பட்டியல் தயாரிக்கப்படும். அதில் அதிக முத்தம் பெற்ற மெழுகுச் சிலைக்குச் சொந்தக்காரர் என்ற பெருமையையும் பெற்றிருக்கிறார் ஹிரித்திக் ரோஷன்.
1961-ம் ஆண்டு நவம்பர் 14-ம் தேதி சமூக சீர்திருத்தவாதியும் யோகியுமான ஸ்ரீநாராயண குருவின் பெருமைகள் குறித்த பாடல்களை "கல்ப்பாடுகள்' என்ற திரைப்படத்துக்காக எம்.பி.சீனிவாசன் இசையில் பாடத் துவங்கிய கே.ஜே.ஜேசுதாஸ், தன்னுடைய இசைப் பயணத்தில் 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, பெங்காலி, ஒடியா, மராத்தி, பஞ்சாபி, துளு, சமஸ்கிருதம், மலாய், அராபிக், லத்தீன், ஆங்கிலம், ரஷிய மொழிகளில் 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியுள்ளார். 71 வயது ஜேசுதாஸ் சிறந்த பாடகருக்கான தேசிய விருதை 7 முறையும், இசைத்துறை தொடர்பாக 30-க்கும் மேற்பட்ட தேசிய அளவிலான விருதுகளையும் பெற்றுள்ளார். ஜேசுதாஸின் இசைப் பொன்விழாவையொட்டி அவருக்குப் பிரமாண்டமான பாராட்டு விழாவை நடத்தத் திரையுலகினர் திட்டமிட்டுள்ளனர்.
மோகன்லால், மம்முட்டி போன்ற சூப்பர் ஸ்டார்களால்தான் மலையாளத் திரையுலகம் நாளுக்கு நாள் சீரழிந்து வருகிறது என அங்குள்ள பத்திரிகைகளும் பல அமைப்புகளும் தங்களுடைய கருத்துகளைத் தெரிவித்து வருகின்றன. இதனால் "என்னுடைய ரசிகர்களும் என்னை விரும்புபவர்களும் இனி என்னை சூப்பர் ஸ்டார் என அழைக்க வேண்டாம்' என்று கேட்டுக் கொண்டுள்ளார் நடிகர் மம்முட்டி.
தான் இயக்கும் "வட சென்னை' படத்தில் நடிக்க தெலுங்கின் இளம் நடிகர் ராணாவுக்கு அழைப்பு விடுத்திருக்கிறார் வெற்றிமாறன். கதையைக் கேட்ட அவருக்கும் பிடித்துவிட்டது. "இன்னொரு வேடத்தில் நடிப்பது யார்?' எனக் கேட்டிருக்கிறார். நாயகன் சிம்பு என்று கூறியிருக்கிறார் வெற்றிமாறன். உடனே, "அவருடன் நடிக்க விருப்பமில்லை' எனக் கூறிவிட்டாராம். தான் நடிக்கும் படங்களில் உடன் நடிப்பவர்களை விளம்பரங்களில் இருட்டடிப்பு செய்துவிடுவார் சிம்பு என ராணாவுக்குக் கிடைத்த தகவல்தான் இதற்குக் காரணமாம்.
"ஆடுகளம்', "வந்தான் வென்றான்' படங்களில் நடித்த டாப்ஸிக்கு தமிழை விட தெலுங்கில் வாய்ப்புகள் குவிகின்றன. இந்நிலையில் அவருக்கு வீட்டில் வரன் பார்த்து வருகிறார்கள். இதுபற்றி கேட்டால்... ""ஆமாம்... உண்மைதான். திருமணம் என்பது தவறான விஷயம் இல்லையே. மாப்பிள்ளையை எனக்குப் பிடித்திருந்தால் திருமணம் செய்துகொள்வேன். ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். ஏராளமான நகைகள், காஸ்ட்லியான ஆடைகள் அணிந்து பல மணி நேரம் மண மேடையில் அமருவதும் ஏராளமானோரை அழைத்து ஆடம்பரமாகத் திருமணம் செய்வதும் எனக்குப் பிடிக்காது. எளிமையாக பதிவுத் திருமணம்தான் செய்துகொள்வேன்'' என்கிறார்.
இந்தியாவில் பேட்மின்ட்டன் விளையாட்டைப் பிரபலப்படுத்தியவர் என் தந்தை பிரகாஷ் படுகோனேதான். "ஆல் இங்கிலாந்து சாம்பியன்ஷிப்' பட்டம் வென்ற முதல் இந்தியரும் என் தந்தைதான். அதற்காக அவருக்கு நாட்டின் உயரிய விருதான "பாரத ரத்னா' விருதை அரசு வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார் பிரபல நடிகை தீபிகா படுகோனே.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.