முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

எறிவது பந்து; கிடைப்பது வெற்றி

சுவரில் அடித்த பந்து போல்' நாம் செய்யும் முயற்சிகள் திரும்ப வருகின்றன... என்பார்கள் சிலர். ஆனால் சாந்தினிக்குக் கிடைத்திருக்கும் அனுபவமோ வேறுவிதம். இவர் எதிரணியின் கோல் போஸ்ட்டை நோக்கி எறிந்த பந்துகள்

ஞாயிறு கொண்டாட்டம்

எறிவது பந்து; கிடைப்பது வெற்றி

சுவரில் அடித்த பந்து போல்' நாம் செய்யும் முயற்சிகள் திரும்ப வருகின்றன... என்பார்கள் சிலர். ஆனால் சாந்தினிக்குக் கிடைத்திருக்கும் அனுபவமோ வேறுவிதம். இவர் எதிரணியின் கோல் போஸ்ட்டை நோக்கி எறிந்த பந்துகள்

Updated On : 28 டிசம்பர், 2023 at 6:41 PM
பகிர்:

சுவரில் அடித்த பந்து போல்' நாம் செய்யும் முயற்சிகள் திரும்ப வருகின்றன... என்பார்கள் சிலர். ஆனால் சாந்தினிக்குக் கிடைத்திருக்கும் அனுபவமோ வேறுவிதம். இவர் எதிரணியின் கோல் போஸ்ட்டை நோக்கி எறிந்த பந்துகள் எல்லாம் இவருக்கு வெற்றிக் கனிகளைப் பறித்துத் தந்திருக்கின்றன!

இந்தியாவில் வெகுவேகமாக வளர்ந்து வரும் விளையாட்டுகளில் முக்கியமானதாக த்ரோபால் (எறிபந்து) விளையாட்டைச் சொல்லலாம். வாலிபால், கூடைப்பந்து விளையாட்டுகளின் கலவையாக இருக்கும் த்ரோபால் விளையாட்டில் தேசிய அளவில் ஜொலித்து வருகிறார் சென்னை வீராங்கனை சாந்தினி.

சென்னை, அசோக் நகர் ஜிஆர்டி பள்ளியில் 10-ம் வகுப்பு படிக்கிறார். வரவிருக்கும் ஃபெடரேஷன் கோப்பை த்ரோபால் போட்டிக்காக சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் பயிற்சியில் இருந்த அவரைச் சந்தித்தோம்.

""நான் 5-வது படிக்கும்போதே த்ரோபால் விளையாடத் துவங்கிவிட்டேன். எனது தாய் தேவி, தந்தை ஸ்ரீநிவாசுலு ஆகியோரின் ஊக்கத்தால்தான் த்ரோபால் இப்போது சிறப்பாக விளையாடி வருகிறேன். பள்ளியில் நான் படிக்கும்போது எங்கள் பள்ளி உடற்கல்வி ஆசிரியை ஜெயப்பிரியா உள்ளிட்டோர் கொடுத்த பயிற்சியால் த்ரோபால் விளையாட்டை நன்கு கற்றுக்கொண்டேன். தமிழக த்ரோபால் சங்கத் தலைவர் சைலேந்திரபாபு, பொதுச் செயலர் பாலவிநாயகம், ஜிஆர்டி பள்ளித் தாளாளர் ஜெயஸ்ரீ ராஜேஷ், முதல்வர் வைதேகி கிருஷ்ணன் ஆகியோரும் எனது வெற்றிக்கு அதிகம் துணை நிற்கின்றனர்.

வாலிபால் விளையாட்டு விளையாடும் மைதானத்தில்தான் த்ரோபால் விளையாட்டு நடத்தப்படும். வாலிபாலை கைகளால் எடுக்கவேண்டும். ஆனால் த்ரோபால் விளையாட்டில் பந்தை எறிவார்கள். அதைப் பிடித்து எதிர்ப்பக்கம் எறிந்து புள்ளிகளைப் பெறவேண்டும்.

இது ஒரு வித்தியாசமான விளையாட்டாக இருப்பதால்தான் இந்த விளையாட்டைத் தேர்வு செய்தேன். மேலும் இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் விளையாட்டுகளில் இதுவும் ஒன்று. கடந்த ஆண்டு த்ரோபால் விளையாட்டில் சாம்பியனாக இருந்த 12 வீரர், வீராங்கனைகளுக்கு மெடிக்கல், என்ஜினியரிங் கல்லூரிகளில், விளையாட்டு ஒதுக்கீட்டில் ஃப்ரீ சீட் கிடைத்தது என்றால் நம்பமுடிகிறதா? அந்த அளவுக்கு பிரபலமாகி வருகிறது.

தமிழக த்ரோபால் சங்கப் பயிற்சியாளர்களான இளையராஜா, பிரபு, அருண் பரத் ஆகியோரிடம் பயிற்சி பெற்றுவருகிறேன்.

த்ரோபால் விளையாட்டில் நான் 7-வது நிலையில் (செவன்த் பிளேயர்) விளையாடுவேன். மேலும் சர்வீஸ் பிளேயராகவும் செயல்படுவேன்.

சமீபத்தில் நடைபெற்ற 22-வது தேசிய ஜூனியர் த்ரோபால் போட்டியில் தமிழக அணிக்காக விளையாடி தேசிய சாம்பியன் பட்டத்தை வென்றோம். தேசிய பள்ளிகள் விளையாட்டில் 3-வது இடத்தையும், மாநில த்ரோபால் போட்டியில் வெள்ளிக் கோப்பையையும் வென்றுள்ளேன்.

பள்ளி அளவிலான மண்டல விளையாட்டில் நான் படிக்கின்ற ஜிஆர்டி மகாலட்சுமி வித்யாலயா மேல்நிலைப்பள்ளி அணிக்குக் கேப்டன் பொறுப்பேற்று விளையாடினேன். இதில் சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றினோம். எங்கள் பள்ளியிலிருந்து த்ரோபால் விளையாட்டில் சர்வதேச வீராங்கனைகளாக உருவாகியிருக்கும் சுப்ரியா ரவி, ஸ்ரீதேவி ஆகியோரை எனக்கு முன்மாதிரிகளாக நினைக்கிறேன். அவர்களைப் போல் நானும் எதிர்காலத்தில் சாதிப்பேன்..'' என்றார் கண்களில் நம்பிக்கை பிரகாசிக்க சாந்தினி!

முழு கட்டுரையைப் படிக்க →