முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

கோவையைச் சிறைப்பிடித்த மாணவர்கள்!

கோவை நகரம். சென்ற மாதத்தில் பள்ளி மாணவர்கள் சிலர் கையில் கேமராவை வைத்துக் கொண்டு நகரம் முழுக்கச் சுற்றி வந்தார்கள். கண்களில் அகப்பட்ட நல்ல காட்சிகளை எல்லாம் அவர்களுடைய கேமரா விழுங்கிக் கொண்டிருந்தது.

Updated On : 2 ஜனவரி, 2024 at 4:39 PM
பகிர்:

கோவை நகரம். சென்ற மாதத்தில் பள்ளி மாணவர்கள் சிலர் கையில் கேமராவை வைத்துக் கொண்டு நகரம் முழுக்கச் சுற்றி வந்தார்கள். கண்களில் அகப்பட்ட நல்ல காட்சிகளை எல்லாம் அவர்களுடைய கேமரா விழுங்கிக் கொண்டிருந்தது. மாணவர்கள் இவ்வளவு ஆர்வத்துடன் புகைப்படங்களை எடுத்துத் தள்ளியது, ஒரு புகைப்படப் போட்டிக்காக. இந்தப் போட்டியை நடத்தியது கோவை துடியலூரில் உள்ள "ச நாஸியா' என்ற அறக்கட்டளை.

புகைப்படம் எடுக்கும் போட்டிக்கான தலைப்பு: நம்ம கோயம்புத்தூர். அதனால்தான் "நம்ம கோயம்புத்தூரை' கேமராவுக்குள் எப்படியாவது மடக்கிப் பிடித்துவிட வேண்டும் என்ற துடிப்புடன் மாணவர்கள் வெறியோடு அலைந்து திரிந்தனர். "ச நாஸியா' அறக்கட்டளையைச் சேர்ந்த சாய்ரா நூர் முகமதுவிடம் புகைப்படப் போட்டி குறித்துப் பேசினோம்.

ம்மால் முடிந்த சேவையைச் சமூகத்துக்குச் செய்ய வேண்டும். அதற்காக இந்த அறக்கட்டளையை ஆரம்பித்தோம். முதியோர் இல்லம், அனாதை இல்லம் போன்றவற்றுக்குச் சென்று அங்குள்ளவர்களுக்கு உதவ வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். அது நிறைவேற இந்த அறக்கட்டளையைப் பற்றி நிறையப் பேருக்குத் தெரிய வேண்டும். அதற்கு என்ன செய்யலாம் என்று தீவிரமாக யோசித்துக் கொண்டிருந்தேன். அப்போது என் மகன் முகமது நக்காஸ் சொன்ன ஐடியாதான் இது. என் மகனும், அவனுடைய நண்பர்களும் புகைப்படக் கலையில் ஆர்வமுடையவர்கள்.

கோவை நகரில் உள்ள பள்ளிகளுக்குச் சென்று நாங்கள் மாணவர்களுக்குப் புகைப்படப் போட்டி நடத்தப் போவதாகச் சொன்னோம். அதைக் கேட்டதும் முதலில் ஆச்சரியப்பட்டார்கள்.

பொதுவாக, பள்ளிகளில் நடக்கும் கலை விழாக்களில் நடனம் ஆடுவார்கள். பாட்டுப் பாடுவார்கள். பேச்சுப் போட்டி, கவிதை, கட்டுரைப் போட்டி, ஓவியப் போட்டி எல்லாம் நடத்துவார்கள். புகைப்படம் எடுக்கும் போட்டிகள் நடத்துவதில்லை.

இப்போது செல்போனிலேயே புகைப்படம் எடுக்க முடிகிறது. மாணவர்கள் புகைப்படம் எடுப்பதில் ஆர்வமாக இருக்கிறார்கள். ஆனால் அவர்களுடைய ஆர்வத்தைத் தூண்டுவிதமாகப் புகைப்படம் எடுக்கும் போட்டிகள் நடத்தப்படுவதில்லை. அதனால்தான் புகைப்படம் எடுக்கும் போட்டியை அறிவித்தோம்.

கோவையில் உள்ள 15 பள்ளிகளில் இருந்து 150 பேர் கலந்து கொள்வதாகச் சொன்னார்கள். ஆனால் 60 பேர்தான் கலந்து கொண்டனர். அதில் மூவருக்குப் பரிசுகள் கொடுத்தோம்.

முதல் பரிசு யுவபாரதி பள்ளியைச் சேர்ந்த 11 ஆம் வகுப்புப் படிக்கும் மாணவன் வருணுக்குக் கிடைத்தது. இரண்டாம் பரிசு நரேந்திரனுக்கு. மூன்றாம் பரிசும் பிரகாஷுக்கு. இவர்கள் இருவரும் பிரிமியர் வித்யா விகாஸ் பள்ளி மாணவர்கள்.

ஐந்தாம் வகுப்புப் படிக்கும் மாணவி ஸ்ருதி, இந்தப் போட்டியில் கலந்து கொண்டு எல்லாரையும் கவர்ந்துவிட்டாள். அவளுடைய அப்பாவை அழைத்துக் கொண்டு கோவை நகர் முழுவதும் சுற்றித் திரிந்து அவள் சுட்டுத் தள்ளிய படங்கள் நிறைய.

பரிசு கொடுத்த அன்று போட்டியில் பங்கேற்ற மாணவர்கள் அனைவருக்கும் புகைப்படம் எடுப்பது எப்படி? என்று பயிலரங்கம் ஒன்றையும் நடத்தினோம். திவ்யா மேனன் என்ற புகைப்பட நிபுணர் பெங்களூருவிலிருந்து வந்து மாணவர்களுக்குப் புகைப்படம் எடுக்கக் கற்றுக் கொடுத்தார்.

அதோடு மட்டுமல்ல, புகைப்படக் கலையைக் கற்றுக் கொண்டால் எந்தெந்தத் துறைகளில் வேலைவாய்ப்புகள் உள்ளன? என்பதையும் விளக்கமாக எடுத்துச் சொன்னார். எதிர்காலத்தில் அவர்கள் தங்களுக்கு விருப்பமான படிப்பைத் தேர்ந்து எடுத்துப் படிக்கலாம் அல்லவா?'' என்கிறார் சாய்ரா நூர் முகமது.

முழு கட்டுரையைப் படிக்க →