ஆஸ்திரேயாவில் சிலப்பதிகார விழா!
ஆஸ்திரேலியாவில் எப்படி சிலப்பதிகார முழக்கம்?
சிலப்பதிகாரம் இன்றைக்கும் பொருந்தக் கூடியது. அரசியல் பிழைத்தோர்க்கு அறம் கூற்றாவது அந்தக் காலத்துக்கு மட்டுமா பொருந்தும்? இந்தக் காலத்திற்கும் பொருந்துமல்லவா?'' அந்த அரங்கத்தில் தமிழ் முழக்கம் கேட்டுக் கொண்டிருந்தது. அரங்கில் உள்ள பார்வையாளர்கள் - பலர் குடும்பத்தோடு வந்திருந்தனர் - ஆர்வமாக அந்த இலக்கியப் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தனர்.
இதிலென்ன ஆச்சரியம் என்கிறீர்களா? இந்த நிகழ்ச்சி நடந்தது தமிழ்நாட்டில் அல்ல; ஆஸ்திரேலியாவில். ஆஸ்திரேலியாவில் சிலப்பதிகாரத்தைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தவர் நமது தமிழ்நாட்டுக்காரர். சிலம்பொலி செல்லப்பன்.
ஆஸ்திரேலியாவில் எப்படி சிலப்பதிகார முழக்கம்? சிலம்பொலி சொல்கிறார்:
""ஆஸ்திரேலியாவில் சிட்னியில் இருந்து "தமிழ் ஓசை' என்ற இலவச மாத இதழ் ஒன்று கடந்த நான்காண்டுகளாக வெளிவந்து கொண்டிருக்கிறது. அதன் ஆசிரியர் மாத்தளை சோமு. அவர் ஆஸ்திரேலியாவில் சிலப்பதிகார விழாவை நடத்தினார். அதன் சிறப்பு அழைப்பாளராகச் சென்னையிலிருந்து நான் போனேன். கூடவே என் மகள் மணிமேகலையும் வந்திருந்தார்.
சொந்த நாட்டைவிட்டு, சொந்த,பந்தங்களைவிட்டு வேறு நாடுகளில் வாழும் சூழ்நிலைக்குத் தமிழ் மக்கள் இன்று தள்ளப்பட்டுள்ளனர். அப்படிப் புலம் பெயர்ந்த தமிழர்கள் ஆஸ்திரேலியாவில் அதிகம் உள்ளனர். வேறு மண்ணில் அவர்கள் வாழ்ந்தாலும் தமிழ் மீது அவர்களுக்கு மாளாக் காதல் இருக்கிறது.
கம்பர் விழா, சேக்கிழார் விழா போன்றவை பரவலாக எல்லா இடங்களிலும் நடக்கின்றன. ஆனால் சிலப்பதிகார விழா மிகவும் குறைவாகவே நடக்கிறது. அதனால் சிலப்பதிகார விழாவை நடத்த முடிவு செய்ததாக விழாவை நடத்திய மாத்தளை சோமு என்னிடம் சொன்னார். அடுத்த ஆண்டு ஏப்ரலில் திருக்குறள் விழாவை நடத்தப் போவதாகவும் சொன்னார்.
நான், மலேசியாவில் இருந்து முரசு நெடுமாறன், ப.கு.சண்முகம் ஆகியோர் கலந்து கொண்டோம்.
சிட்னியில் உள்ள துர்க்கை அம்மன் கலாசார மண்டபத்தில் நடந்த இந்த விழாவில் பங்கேற்கும் பார்வையாளருக்குக் கட்டணம் வசூலிக்கப்பட்டது. தனிநபருக்குப் ஆஸ்திரேலிய டாலர், குடும்பத்துக்கு 25 ஆஸ்திரேலிய டாலர் எனக் கட்டணம் வசூலித்தும் கூட கூட்டம் கட்டுக்கடங்கவில்லை. அந்த மண்டபம் நிரம்பி வழிந்தது. தமிழ் இலக்கியக் கூட்டம் கேட்பதற்கு இவ்வளவு ஆர்வமா? என்று நினைத்தபோது எனக்கு மகிழ்ச்சியில் கண்ணீரே வந்துவிட்டது.
முதலில் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. சிலப்பதிகார குறுநாடகம், பாடல்கள், நாட்டியம் என நிகழ்ச்சிகளை அமைத்திருந்தார்கள். மாணிக்கம் அருச்சுனமணி, இரா.முத்துகிருஷ்ணன், காவலூர் ராசதுரை, கவிஞர் அம்பி ஆகிய நால்வருக்கும் இந்த ஆண்டுக்கான தமிழ் ஓசை இதழ் விருது வழங்கப்பட்டது. சு.ஸ்ரீகந்தராஜா எழுதிய நூல் ஒன்றும் வெளியிடப்பட்டது.
அங்குள்ள தமிழ் மக்கள் தமிழ் இலக்கியங்களைப் பற்றித் தெரிந்து கொள்ள மிகவும் ஆர்வத்துடன் இருக்கிறார்கள். என்னுடைய ஒன்றரை மணி நேரப் பேச்சை மிகவும் ஆர்வமாகக் கேட்டார்கள். அதுபோதாதென்று இன்னோர் இடத்திலும் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்து பேசச் சொன்னார்கள். அங்கே இரண்டரை மணி நேரம்
பேசினேன்.
"சிலப்பதிகாரம் எக்காலத்துக்கும் பொருந்தக் கூடிய பல கருத்துகளைக் கொண்டிருக்கிறது. ஆடல், பாடல், நாடகம் போன்றவை முழுமையாக உள்ள காப்பியம் சிலப்பதிகாரம். அரங்கேற்று காதையிலும் ஆய்ச்சியர் குரவையிலும் இந்தக் கலைகளைப் பற்றிய செய்திகள் இடம் பெற்றிருக்கிருக்கின்றன' என்று அங்கு பேசினேன்.
ஆஸ்திரேலியாவில் 20 நாட்கள் தங்கியிருந்தோம். ஒன்றைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டும். செல்லுமிடமெல்லாம் தமிழர்களின் விருந்தோம்பல் எங்களைத் திக்குமுக்காட வைத்தது; மெய் சிலிர்க்க வைத்தது'' என்றார்.