முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

தமிழுக்குக் கிடைத்த மரியாதை!

தமிழ் செம்மொழி என மத்திய அரசு அறிவித்த பின்னர், தமிழுக்கு சேவை செய்பவர்கள் பலர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

Updated On : 10 நவம்பர், 2013 at 8:30 AM
பகிர்:
Updated On : 4 ஜனவரி, 2024 at 12:12 AM

தமிழ் செம்மொழி என மத்திய அரசு அறிவித்த பின்னர், தமிழுக்கு சேவை செய்பவர்கள் பலர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். தமிழில் உள்ள பல நல்ல நூல்கள் பிற மொழிகளுக்கு மொழிபெயர்க்கப்பட்டு வருகின்றன. பல தமிழறிஞர்கள் பாராட்டப்படுகிறார்கள். பலருக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. தேசிய, பன்னாட்டு கருத்தரங்கங்கள் நடைபெறுகின்றன. பல ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன. மத்திய அரசின் மனித வள மேம்பாட்டுத் துறையின் கீழ் செம்மொழித் தமிழாய்வு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் சார்பில் தொல்காப்பியர் விருது, குறள்பீட விருது, இளம் அறிஞர் விருது ஆகிய விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
 சென்ற மாதம் 9 ஆம் தேதி இந்த விருதுகள் புது தில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் வழங்கப்பட்டன. இதில் 2009-2010ஆம் ஆண்டுக்கான இளம் அறிஞர் விருதை விருதுநகர் மாவட்டம், சிவகாசி அய்ய நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி தமிழ்த் துறை உதவிப் பேராசியர் சோ.முத்தமிழ்செல்வன் பெற்றுள்ளார். இவர் எழுதி 2010ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியான, "நெஞ்சொடு கிளத்தல் ஓர் உளவியல் நோக்கு' என்ற ஆய்வு நூலுக்கு விருது கிடைத்துள்ளது.
 இது குறித்து சோ.முத்தமிழ்செல்வனிடம் பேசினோம்.
 
உங்களுக்கு விருது வாங்கிக் கொடுத்த நூலைப் பற்றி?
 சங்க அகப் பாடல்களை முன்னிறுத்தி, அவை எத்தகு உள நிலையில் பாடப்பட்டுள்ளன என்பதை அடிப்படையாகக் கொண்டு இந்த நூலை நான் எழுதியிருக்கிறேன். தலைவன் தான் குறிப்பிட்டுச் சொன்ன காலத்தில் பொருள் வயிற் பிரிந்து திரும்பாதபோது, தலைவியின் நிலையும், தலைவியைச் சந்திக்க முடியவில்லையே எனக் கலங்கும் தலைவன் நிலையும் பலவேறு பகுதிகளில் காட்டப்படுள்ளது.
 இந்த நூலில் இதனை நான்கு தலைப்பில் விவரித்துள்ளேன். தலைவன் கூற்றில் நெஞ்சொடு கிளத்தல், தலைவி கூற்றில் நெஞ்சொடு கிளத்தல், பிறமாந்தர் கூற்றில் நெஞ்சொடு கிளத்தல், நெஞ்சொடு கிளத்தல் உளவியல் பார்வை ஆகியவையாகும்.
 குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியிடமிருந்து விருதுபெறும்போது உங்கள் மனநிலை எப்படி இருந்தது?
 மேடைக்கு எப்படி செல்ல வேண்டும். எங்கு நிற்கவேண்டும். விருதுபெறும்போது எப்படி இருக்க வேண்டும். விருதுபெற்ற பின்னர் மேடையை விட்டு எப்படி இறங்க வேண்டும் என மூன்று மணிநேரம் ஒத்திகை நடைபெற்றது.
 குடியரசுத் தலைவருடன் கை குலுக்க முயற்சிக்கக் கூடாது என அறிவுறுத்தியிருந்தனர். ஆனால், குடியரசுத் தலைவர் என்னுடன் கைகுலுக்கி, எனக்குப் பொன்னாடை போர்த்தி, விருதுக்கான சான்றிதழை வழங்கினார். இதைத் தமிழுக்கு கிடைத்த மரியாதை என எண்ணி மகிழ்ந்தேன். மேலும் வர்ணனையாளர் தமிழில் கூறியது மிகவும் ஆச்சரியப்பட வைத்தது.
 விருது பற்றிக் கூறுங்களேன்?
 தமிழிலும், இந்தியிலும் எழுதி, குடியரசுத் தலைவர் கையெழுத்திட்ட சான்றிதழ் கண்ணாடியால் பிரேம்போட்டு வழங்கப்பட்டது. மேலும் ஒரு லட்ச ரூபாய்க்கான காசோலையும் வழங்கப்பட்டது. விருதுபெற்ற அனைவரும் மத்திய அமைச்சர் , அதிகாரிகள் மற்றும் குடியரசுத் தலைவருடன் குரூப் போட்டோ
 எடுத்தனர்.

 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.