மண்ணில் புதைந்த மாங்குடி நகரம்!
தமிழக வரலாற்றில் மறைந்த நாகரீகங்களும் உண்டு, வாழ்வாங்கு வாழ்ந்து,
தமிழக வரலாற்றில் மறைந்த நாகரீகங்களும் உண்டு, வாழ்வாங்கு வாழ்ந்து, கால வெள்ளத்தில் மறைந்த நகரங்களும் உண்டு. அவ்வகையில் பாண்டிய நாட்டின் பழம் பெருமையை உலகிற்கு உணர்த்திய மண்ணில் புதைந்த மாங்குடி நகரத்திற்கும் தமிழக வரலாற்றில் தனிப்பெரும் இடம் உண்டு.
மாங்குடியை அறியாதவர்கள் சங்கப்புலவர் மாங்குடி மருதனார் பிறந்த ஊர் என்று கூறினால் எளிதில் அறிந்து கொள்வார்கள். நெல்லை மாவட்டத்தின் சங்கரன்கோயிலில் இருந்து 20 கி. மீ தொலைவில் ராசபாளையம் செல்லும் வழியில் அமைந்துள்ள சிற்றூரே மாங்குடியாகும். சங்க கால மாங்குடியானது பெருமாள்பட்டி, சோலைசேரி, அருவன்குளம் போன்ற கிராமங்களை உள்ளடக்கிய நகரமாகத் திகழ்ந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையிலிருந்து உற்பத்தியாகும் தேவியாறு மாங்குடி வழியாகப் பாய்ந்து வளம் சேர்த்தது என்பார்கள்.
மாங்குடி நகரத்தைப் பற்றி வரலாற்று ஆய்வாளரும், அண்ணாமலைப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை இணைப் பேராசிரியருமான இல.கணபதிமுருகன் தெரிவித்தது:
""தமிழக அரசின் தொல்லியல் துறை கடந்த 2002-03 ஆண்டுகளில் நிகழ்த்திய அகழாய்வின் வாயிலாக மாங்குடியின் பழம் பெருமை உலகிற்குத் தெரிய வந்தது. அகழாய்வில் கி.மு 4000-ஐச் சேர்ந்த எண்ணற்ற நுண் கற்காலக்கருவிகள் (ஙண்ஸ்ரீழ்ர்ப்ண்ற்ட்ண்ஸ்ரீ டங்ழ்ண்ர்க்) கண்டறியப்பட்டன. சங்க காலத்தைச் சேர்ந்த கறுப்பு, சிவப்பு மட்பாண்ட வகைகள், செம்பிலான ஊசிகள், வளையல்கள், இரும்பிலான அம்புமுனை, களிமண் பொம்மைகள், மணிகள், சுட்ட களிமண்ணால் செய்யப்பெற்ற அகல் விளக்குகள், மான்கொம்புகள், தாயக்கட்டை போன்றவை கண்டறியப்பட்டன. இவற்றின் காலம் கி.மு 300- கி.பி 300 ஆகும்.
மாங்குடி ஒட்டியுள்ள சோலைசேரி கிராமத்தில் தேவியாற்றின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணை உள்ளது. இதனையொட்டி லிங்கத்திரடு (லிங்கத்திடல்) என்றழைக்கப்படும் பகுதி அமைந்துள்ளது. இந்த இடம் ஆவுடையார் தோட்டம் என்று கிராம மக்களால் அழைக்கப்படுகிறது. இத்தடுப்பணையில் கரையை ஒட்டி சுமார் ஒரு சதுர கி.மீ பரப்பிற்கு எண்ணற்ற தெய்வ உருவச்சிலைகள், வயிறு பெருத்த பூத கணங்களின் சிலைகள் சிதறிக் கிடக்கின்றன. இவ்விடத்தில் பல நூற்றாண்டுகளுக்கு முன்னர் பெரிய சிவாலயம் ஒன்று இருந்ததாகவும் சுற்று வட்டார மக்கள் தெரிவிக்கின்றனர்.
நுண்ணிய வேலைப்பாடுகள் அதிகம் இல்லாத, குறுகிய முகம் கொண்ட நந்தி சிலையொன்று மண்ணில் பாதியளவு புதைந்த நிலையில் காணப்படுகின்றது. இதற்கு அண்மையில் விநாயகரின் சிலை ஒன்று முகம் சிதைந்த நிலையில் உள்ளது. விநாயகர் இருகரங்களை உடையவராகவே, அமர்ந்த நிலையில் காணப்படுகிறார். விநாயகரின் தும்பிக்கை நீண்டவாறு, வலமாகவும், இடமாகவும் அல்லாமல் தொங்கியவாறு வடிக்கப்பட்டுள்ளது. இவ்விடத்திலிருந்து சற்றுத் தொலைவில் வயல் வெளிக்குள் தரையில் சாய்ந்த நிலையில் காளிதேவியின் சிலை ஒன்றும் காணப்படுகிறது. காளிதேவியின் சிலையானது ஒரு காலினை பீடத்தில் மடக்கியவாறும், மற்றொரு காலை தரையில் ஊன்றியவாறும் அழகுற வடிக்கப்பட்டுள்ளது.
கோவிலின் கோபுர வேலைப்பாட்டில் காணப்படும் தோள் உறுப்புகளான கர்ணகூடு, பஞ்சரம், சாலை போன்றவை தேவியாற்றுத் தடுப்பணையின் கரையை ஒட்டியே சிதறிக் கிடப்பதைக் காணமுடிகிறது. இவற்றின் வேலைப்பாடுகளையும் அமைப்பினையும் பார்க்கும் போது கி.பி 10-11ம் நூற்றாண்டு பாண்டியர்களின் கலைப்பாணியை ஒத்ததாகத் தெரிகிறது.
மாங்குடி, பெருமாள்பட்டி மற்றும் சோலைசேரி பகுதிகளில் கிணறுகளை ஆழப்படுத்தும் போது, பல இடங்களில் எண்ணற்ற முதுமக்கள் தாழிகள் கிடைக்கப் பெற்றுள்ளன. அத்தாழியினுள் இறந்தோரின் எலும்புத்துண்டுகள், தவிடு, தானிய வகைகள் நிரம்பிய வட்டில், சிட்டிகை, போன்றவை கண்டெடுக்கப்பட்டுள்ளன. தாழியினுள் கிடைத்த நாணயங்களில் முதலாம் ராஜராஜனின் (கி.பி. 985-1013) உருவம் பொறித்த செப்பு நாணயம் குறிப்பிடத்தக்கதாகும்.
மாங்குடி பெருமாள்பட்டி அய்யனார் கோயில் அருகே தூணில் பொறிக்கப் பெற்ற தமிழ்-கிரந்த கல்வெட்டு ஒன்றும் காணப்படுகிறது. கிபி 11-12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த இக்கல்வெட்டில் பாண்டியர்களின் நிலைப்படையினைச் சேர்ந்த படை வீரர்களுக்கு விளைநிலமும், வீட்டு வசதியும் செய்து கொடுத்த செய்தி காணப்படுகிறது. இவ்வாறு வழங்கப்பட்ட தானங்கள் பரிக்கிரகம் (டஹழ்ண்ந்ழ்ஹட்ஹம்) எனப்பட்டன.
மாங்குடியின் அமைவிடம் சிறப்பு வாய்ந்ததாகும், எவ்வாறெனில் பாண்டிய நாடு- சேரநாடு பெருவழியின் இடையில் அமைந்த நகரமாக மாங்குடி திகழ்ந்தது. அரசியல் சிறப்புமிக்க, வணிக முக்கியத்துவம் வாய்ந்த காரணத்தினால் மாங்குடி அந்நியரின் படையெடுப்புகளுக்கு உள்ளான பகுதியாகவும் விளங்கியுள்ளது. மாங்குடி மருதனாரை ஆதரித்த பாண்டியன் தலையாலங்கானத்து செருவென்ற நெடுஞ்செழியன் ஆவான். இவன் சேரன், செம்பியன் (சோழன்), திதியன், எழிநி, எருமையூரான் போன்றோரை போரில் தோற்கடித்தான். நெடுஞ்செழியனின் வெற்றியைப் பாடவே மாங்குடி மருதனார் மதுரைக் காஞ்சியைப் பாடினார்.
மாங்குடியை அழித்து சோழர்களே அதன் அருகாமையில் சோழசோரி என்ற நகரை நிர்மாணித்திருக்க வேண்டும். தற்போது சோழசேரி, சோலைசேரியாக மருவியுள்ளது. இதன் அருகில் அமைந்துள்ள சோழபுரமும், சோழர்களின் குடியேற்றப் பகுதியாக இருத்திருக்கலாம். பராமரிப்பின்றி சிதைந்த ஆலயத்தின் எஞ்சிய பகுதிகள் தேவியாற்றின் குறுக்கே தடுப்பணை கட்ட பயன்படுத்தப்பட்டன. கி.பி 18-19 நூற்றாண்டுகளில் தடுப்பணை கட்டப்பட்டிருக்கலாம். எனவே மாங்குடி நகரை பாண்டிய-சோழ ஆதிக்கப் போட்டியில் அழிந்த நகரமாக கருதலாம்'' என்கிறார் வரலாற்று ஆய்வாளர் இல.கணபதிமுருகன்.