முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

வரலாற்றுப் பாதையைக் கண்டுபிடிப்பவர்கள்!

உலகம் முழுவதும் பல தொல்லியல் ஆய்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த ஆய்வினால் நம் முன்னோர்களின் வாழ்கைமுறைகளைத் தெரிந்து கொள்ளலாம்.

Updated On : 12 ஜூலை, 2015 at 3:00 PM
பகிர்:
Updated On : 9 ஜனவரி, 2024 at 11:27 AM

உலகம் முழுவதும் பல தொல்லியல் ஆய்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்த ஆய்வினால் நம் முன்னோர்களின் வாழ்கைமுறைகளைத் தெரிந்து கொள்ளலாம்.

விருதுநகர் மாவட்டம் திருத்தங்கலில் உள்ள ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி ஆர்.பாலசந்திரன், 1972ஆம் ஆண்டு முதல் இதுவரை சுமார் 70 இடங்களில் தொல்லியல் ஆய்வினை நடத்தியுள்ளார். இவர் தமிழக தொல்லியல் கழக வாழ்நாள் உறுப்பினராகவும், பாண்டியநாடு வரலாற்றுப் பேரவை செயற்குழு உறுப்பினராகவும் உள்ளார். இது குறித்து அவரிடம் கேட்டபோது:

""எனது தந்தை ஜி.ராமச்சந்திரன், தொல்லியல் ஆய்வு குறித்தும், வரலாறு குறித்தும் அடிக்கடி பேசுவார். அதனால் எனக்கு தொல்லியலில் ஆர்வம் ஏற்பட்டது. இது ஒரு சுவாரஸ்யமான வேலையாகும். ஆர்வத்துடன் செயல்பட்டால் மிகவும் ஆச்சரியமான விஷயங்கள் கிடைக்கும். விஞ்ஞானி புதிய கருவியைக் கண்டுபிடிப்பார். என் போன்ற தொல்லியல் ஆய்வாளர்கள் பழைய வரலாற்றுப் பாதையைக் கண்டு பிடிப்பார்கள். திருத்தங்கல் பகுதியில் ஆய்வு மேற்கொண்டபோது, கற்கால நுண்கருவிகள், பாண்டியர் கால காசு, பானை ஓடுகள், பானை ஓட்டுக் குறியீடுகள், மக்களால் பயன்படுத்தப்பட்ட காசு, பாசிமணி, வீட்டு ஓடுகள், மண் பொம்மைகள் போன்றவை மேற்பரப்பு ஆய்வில் கிடைத்தன. இவை மதுரை அரசு அருங்காட்சியத்திலும், விருதுநகரில் உள்ள அருங்காட்சியத்திலும் தற்போது உள்ளன.

Advertisement

இவை சுமார் 2000 ஆண்டுகளுக்கு முந்தையவையாகும். திருத்தங்கல் அருகே முத்துலாபுரத்தில் கல்வெட்டுச் செப்பேடு ஒன்றினைக் கண்டுபிடித்தேன். அதில் ஒருவர் கோயிலுக்கு தானமாகக் கொடுத்த தகவல் எழுதப்பட்டிருந்தது.

விருதுநகர், சிவகாசி, சாத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியில் ஆய்வு செய்துள்ளேன். இதில் சுமார் 1300 ஆண்டுகளுக்கு முன்னர் புழக்கத்தில் உள்ள பொருகள் கண்டுபிடிக்கப்பட்டன. விருதுநகர் மாவட்டம், சிவகங்கை மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் ஆய்வு செய்துள்ளேன். என்னுடைய ஆய்வுகள் மேற்பரப்பு ஆய்வுகளே.

சில இடங்களில் காடுகளில் ஓடுகள் கிடக்கும். அதன் மதிப்பு குறித்து கிராமத்தினருக்குத் தெரியாது. நான் அங்கு சென்று அவற்றைச் சேகரித்து ஆய்வு செய்வேன்.

சங்ககால இலக்கியத்தில் திருத்தங்கல் குறித்து உள்ளது. எனது ஆய்வு அதனை உறுதிப்படுத்தியுள்ளது.

எனவே தொல்லியல் ஆய்வு நாட்டு மக்களுக்கு பயனுள்ளதாகும். மேலும் கல்வெட்டுகள், செப்பேடுகள், ஓலைச்சுவடிகள், அரசகாலத்து காசுகள்,கலைப்பொருள்கள் ஆகியவற்றைப் பார்க்கும் போது, மனிதகுல நாகரிகத்தின் வெளிப்பாடு தெரியவரும்.

மகாலிங்கமலையில், குளிர்ஆட்டி என்ற இடத்தில் குகை ஓவியங்களை கண்டுபிடித்தேன். இவை சுமார் 5000 ஆண்டுகளுக்கு முந்தையவை எனத் தெரிய வந்தது. பல ஆய்வுகளைத் தொகுத்து புத்தகம் வெளியிட்டுள்ளேன்.

தமிழக தொல்லியல் கழகம் ஒவ்வோர் ஆண்டும் புதிய தொல்லியல் ஆய்வுகளைப் பதிவு செய்யும் விதமாக ஆவணம் என்ற புத்தகத்தை வெளியிட்டு வருகிறது. இதுவரை 25 புத்தகம் வெளி வந்துள்ளது.

எங்களைப் போன்ற தொல்லியல் ஆய்வாளர்களுக்கு அந்த புத்தகத்தில் பதிவு என்பது மிகவும் முக்கியமானதாகும். இந்த தொல்லியல் ஆய்வுக்கு இளைஞர்கள் ஆர்வத்துடன் முன்வர வேண்டும் என்பதே எனது விருப்பமாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.