முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

இயற்கைக்கு மரியாதை

கிராமப்புறங்களில் பயன்பாட்டுக்கு பின் குப்பையாக தூக்கி வீசப்படும் தேங்காய் ஓடு, சிரட்டை, மட்டை, நார், மரக்கட்டை, நுங்கு ஓடு உள்ளிட்ட பல கழிவுப் பொருள்களை மீண்டும் பயனுள்ளதாக்கும் அரிய பணியை இம்மாணவர்கள் செய்துள்ளனர்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 5:35 AM
பகிர்:

கிராமப்புறங்களில் பயன்பாட்டுக்கு பின் குப்பையாக தூக்கி வீசப்படும் தேங்காய் ஓடு, சிரட்டை, மட்டை, நார், மரக்கட்டை, நுங்கு ஓடு உள்ளிட்ட பல கழிவுப் பொருள்களை மீண்டும் பயனுள்ளதாக்கும் அரிய பணியை இம்மாணவர்கள் செய்துள்ளனர்.

புதுவை நகரில் இருந்து பாகூர் அருகே சேலியமேட்டில் கவிஞர் வாணிதாசன் அரசு உயர்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவர்கள்தான் இச்சாதனையை புரிந்து வருகின்றனர். பள்ளியின் ஓவிய நுண்கலை ஆசிரியரான உமாபதியால் ஏழை மாணவ, மாணவியர் சிறந்த கைவினை கலைஞர்களாக, ஓவியர்களாக மாறி வருகின்றனர்.

அழகிய விலங்குகள், சிற்பங்கள், மோட்டார் சைக்கிள், பாய்மரக்கப்பல் இசைக்கருவிகள் நகைகள் போன்று கழிவுப் பொருள்களைக் கொண்டு இந்த மாணவர்கள் உருவாக்கிய படைப்புகள் காண்போரை சட்டென கவர்ந்து விடும் வகையில் உள்ளது. சேலியமேடு பள்ளியைச் சேர்ந்த 70 மாணவ, மாணவியர் இதுபோன்ற பயிற்சியைப் பெற்று  அவர்களில் 15 பேர் சிறந்த கைவினைஞர்களாக உள்ளனர்.

இவர்களில் தமிழ்ச்செல்வன், மகேஸ்வரன், ராகேஷ் உள்ளிட்டோர் மாஸ்டர் டிரெய்னர்களாக உள்ளனர். ராகுல் காந்தி, முருகன், கெüதம், மாணவியர் ஜோக்கியா, ஆரத்தி, சரளா உள்ளிட்டோரும் பிறருக்குப் பயிற்சி அளிக்கும் வகையில் தேர்ச்சி பெற்றுள்ளனர். கைவினைப் பொருள்கள் உருவாக்கும் வழிமுறைகள் குறித்து பெரிய தனியார் பள்ளிகள், கல்லூரிகளின் மாணவ, மாணவியருக்கும் இவர்கள் நேரில் சென்று பயிற்சி அளிப்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து ஆசிரியர் உமாபதி கூறியது:  பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்தவர்கள். அவர்களின் கற்பனைத் திறன் அதிகம். சிறந்த கைவினைஞர்களாக மாறியதில் எனது பங்கு மிகக்குறைவுதான். அவர்களின் ஆர்வம்தான் காரணம். கழிவுப் பொருள்களை அவர்களே சேகரித்து கொண்டு வருவர். விலங்குகள், பல்வேறு வடிவங்களில் அவர்களே தங்கள் கற்பனைத் திறனைக் கொண்டு செய்து காண்பிப்பர். சென்னை, மதுரை, திருச்சி, கோவை உள்பட பல்வேறு பொறியியல் கல்லூரிகளில்

கட்டடவியல் துறை மாணவர்கள், தனியார் பள்ளி மாணவர்களுக்கு தமிழ்ச்செல்வன், மகேஸ்வரன், ராகேஷ் உள்ளிட்டோர் வகுப்புகளை நடத்துகின்றனர். கட்டடங்களின் உள்புறத்தை அழகுபடுத்தும்போது இவர்களின் திறமை பயன்படுகிறது.

இதுறித்து மாணவர்கள் தமிழ்ச்செல்வன், ராகேஷ், மகேஸ்வரன் ஆகியோர் கூறியது: நாங்கள் பெரும்பாலானோர் ஏழ்மை நிலையில் உள்ளவர்கள். ஆசிரியர் உமாபதி அளித்த ஊக்கத்தால், எங்கள் கற்பனைத் திறனை மேலும் பெருக்கிக் கொண்டோம். கலைப்பொருள்கள் செய்ய அதிக செலவாகும். இதனால் ஊரிலேயே இலவசமாகக் கிடைக்கும் தென்னை, பனை மரக் கழிவுப் பொருள்களை பயனுள்ள பொருள்களாக மாற்றினோம். ஆசிரியர் உமாபதி அப்பொருள்கள் மூலம் பொம்மைகள் செய்தல், ஓவியம் வரைதல்போன்றவற்றைக் கற்பித்தார். பல்வேறு ஊர்களில் எங்கள் படைப்புகளைக் கண்காட்சியில் வைத்தோம். இதற்கு நல்ல வரவேற்பு கிடைத்து. நாங்கள் சென்று படிக்க வாய்ப்பில்லாத பெரிய தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்குப் பயிற்சி தர எங்களை அழைக்கின்றனர். மேலும் பொறியியல் கல்லூரிகளில் கட்டடவியல் துறைகளில் அழகுபடுத்துதல் குறித்தும் பயிற்சி தருகிறோம்.

தொடர்ந்து ஆசிரியர் உமாபதி கூறியதாவது: மாணவர்கள் கிராமப்புறங்களைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களுக்கு ஆங்கில மொழியில் உரையாடுவது சுற்று சிரமமாக உள்ளது. இதைப் போக்க அவர்களுக்கு ஆங்கிலம் பேசும் பயிற்சி தரப்படும். மேலும் கணினி மூலம் கலைப்படைப்புகளை வடிவமைக்கும் பயிற்சியும் கற்பிக்க உளளோம். இவர்கள் உற்பத்தி செய்யும் பொருள்களை தனி கண்காட்சி வைக்கும் எண்ணமும் உள்ளது. கலைப்பொருள்கள் நல்ல விலையும் போகின்றன. இதனால் மாணவர்கள் வாழ்வாதாரமும் ஓரளவு உயருகிறது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.