முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

60 வயது "மிஸ்டர் சேலம்'!

கடந்த மே மாதம் ஈரோட்டில் நடந்த 5 மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டியில் 50-வயதுக்கு மேற்பட்டோருக்கான பிரிவில் இளம் வயதுப் போட்டியாளர்களை ஆச்சரியப்பட வைத்த ஒருவர், பலத்த கரகோஷத்துடன் மேடையேறினார்.

Updated On : 9 ஜனவரி, 2024 at 6:38 AM
பகிர்:

கடந்த மே மாதம் ஈரோட்டில் நடந்த 5 மாவட்ட அளவிலான ஆணழகன் போட்டியில் 50-வயதுக்கு மேற்பட்டோருக்கான பிரிவில் இளம் வயதுப் போட்டியாளர்களை ஆச்சரியப்பட வைத்த ஒருவர், பலத்த கரகோஷத்துடன் மேடையேறினார். கலந்து கொண்ட 3 போட்டியாளர்களில் இவரின் கட்டழகைப் பார்த்து வியந்த போட்டி நடுவர்கள் இவருக்கு முதல் பரிசினை அளித்து கெüரவித்தனர். அவர்தான் சேலம் முகம்மது புறா தெருவைச் சேர்ந்த ஹனீஃபா. அவருக்கு வயது 60. சேலத்தில் உணவகம் ஒன்றை நடத்தி வரும் ஹனீஃபா, தனது அயராத வேலைப் பளுவுக்கும் மத்தியில் உடற்பயிற்சிக் கூடத்தில் கடுமையான பயிற்சிகளைச் செய்து தனது உடலைக் கட்டுக்கோப்பாக வைத்திருக்கிறார். சேலத்தின் கட்டழகுக் காளையான இவர் , தனது "சிக்ஸ் பேக்' உடலில் அனைவரையும் கவர்ந்து வருகிறார். தமிழகம் முழுவதும் நடைபெறும் பல்வேறு ஆணழகன் போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி வாகை சூடி சேலத்துக்கு பெருமை சேர்த்து வருகிறார். மனைவி ரஜியா பேகம், 4 மகள்கள், 2 மகன்களுடன் மகிழ்ச்சியாக வாழும் ஹனீஃபாவைச் சந்தித்தபோது...

""உலக ஆணழகன் போட்டிகளில் வென்ற லாரி ஸ்காட், ராஃபி ராபின்சன், அர்னால்டு உள்ளிட்டோரின் அழகான கட்டழகு உடற்கட்டைப் பார்த்து அதே போன்று எனக்கும் உடற்கட்டு அமைய வேண்டும் என்ற ஆசையில் சிறுவயது முதலே உடற்பயிற்சிகளைச் செய்ய ஆரம்பித்தேன். அப்போது எனது வீட்டில் மிகவும் கஷ்டமான சூழ்நிலை. சரியான முறையில் பயிற்சி பெற முடியவில்லை. இருப்பினும் ஆர்வம் காரணமாக தொடர்ந்து உடற்பயிற்சியினை மேற்கொண்டேன். இதற்கிடையே எனக்கு வயிற்றில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக அப்பென்டிசிட்டிஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அப்போதும் வயிற்றுப் பிரச்னை தீரவில்லை. இதைத் தொடர்ந்து எனக்கு குடலில் பெரிய அளவிலான அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. அதனால் டாக்டர்கள் என்னை உடற்பயிற்சி செய்யக் கூடாது. அப்படிச் செய்தால் பெரிய பிரச்னை ஏற்படும் எனக் கூறி தடைபோட்டனர். இதைத் தொடர்ந்து நான் கடந்த 23 ஆண்டுகளாக எந்தவித உடற்பயிற்சியும் மேற்கொள்ளவில்லை.

அதிக வலி எடுத்தாலும் பரவாயில்லை என கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் மீண்டும் பயிற்சியைத் தொடங்கினேன். வயிற்றில் வலி இருந்தாலும் 21 மாதங்களாக அயராது பயிற்சியில் ஈடுபட்டேன். 6 மாதங்களில் நல்ல உடற்கட்டு வந்தது. இதையடுத்து பயிற்சியாளர் கூறியது போன்று பயிற்சியை மேற்கொண்டு "சிக்ஸ் பேக்' வர வைத்தேன். நண்பர்கள் ஊக்குவித்ததனால், சேலத்தில் நடைபெற்ற ஆணழகன் போட்டியில் கலந்து கொண்டு, சிறப்பிடம் பெற்றேன். இதையடுத்து கடும் பயிற்சியின் மூலம் மேலும் உடலை அழகாக்கி மாவட்ட அளவில் மார்ச், மே மாதங்களில் நடைபெற்ற ஆணழகன் போட்டிகளில் பங்கேற்று "மிஸ்டர் சேலம்' பட்டம் வென்றேன். இதையடுத்து சென்னை, கோவை, ஈரோடு, கிருஷ்ணகிரி ஆகிய ஊர்களில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு சிறப்பிடங்களைப் பெற்றுள்ளேன். இதைப் பார்த்து எனது நண்பர்களும், எனது மனைவி, மகள்கள், மகன்கள், பேரன், பேத்திகள் மிகுந்த சந்தோஷத்துடன் மேலும் மேலும் ஊக்கமளித்து வருகின்றனர். இதையடுத்து ஈரோட்டில் நடைபெற்ற 5 மாவட்ட அளவிலான 300 பேர் கலந்து கொண்ட போட்டியில் பங்கேற்று முதலிடம் பெற்றேன்.

தற்போதும் கடுமையான உடற்பயிற்சி செய்து வருகிறேன். உடற்பயிற்சி செய்வதால் வயதானால் வரும் எந்த நோயும் என்னைத் தாக்கவில்லை. நல்ல உடல்நலத்துடன் வாழ்ந்து வருகிறேன். தற்போது சிறுவயது இளைஞர்கள் பலர் தொப்பையுடன் சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்களால் அவதியுற்று வருகின்றனர். அவர்களுக்கு நான் கூறுவது, நாள்தோறும் உடற்பயிற்சி செய்யுங்கள் நோய் நொடியின்றி வாழுங்கள் என்பதே'' என்றார்.

முழு கட்டுரையைப் படிக்க →