சிந்தை கவர்ந்த திருவிழாக்கள் - 67: இலவச பயிற்சிகள் ஏராளம்
கத்திரி வெயிலுக்கு குன்றத்தூரில் செண்டை மேள வாத்தியங்களின் ஓசையை கேட்டு சென்ற போது வேட்டி கட்டிக்கொண்டு நெற்றி, மார்பு, கைகளில் சந்தன திலகமிட்டு வாசித்துக் கொண்டிருந்த நூற்றுக்கணக்கான
கத்திரி வெயிலுக்கு குன்றத்தூரில் செண்டை மேள வாத்தியங்களின் ஓசையை கேட்டு சென்ற போது வேட்டி கட்டிக்கொண்டு நெற்றி, மார்பு, கைகளில் சந்தன திலகமிட்டு வாசித்துக் கொண்டிருந்த நூற்றுக்கணக்கான மாணவர்களை கண்ட போது வியப்பு. அந்த வியப்பு அடங்கும் முன் இஸ்லாமிய, கிறிஸ்துவ மாணவர்களும் அதில் அடக்கம் என்பது மேலும் வியப்பை ஏற்படுத்தியது.
மேற்கொண்டு பேச முற்பட்ட போது மாணவர்கள் காட்டிய திசையை பார்த்தால் சாமியாரை போன்ற உருவம் நம்மை புன்முறுவலுடன் வரவேற்றது. அவர் தான் அப்பள்ளியின் தாளாளர் கே.ராஜசேகரன்.
இவர் உலக வங்கியில் ஆலோசகராக பணிபுரிந்தவர். திருமணம் ஆகாதவர். ""திண்டிவனம் அருகேயுள்ள சாதாரண விவசாய குடும்பத்தில் வளர்ந்த நான், பாட்டி ரங்கநாயகியின் நினைவாக சென்னை கே.கே.நகரில் ஸ்ரீ ரங்க நாயகி மெமோரியல் பள்ளி நடத்தி வருகிறேன். குன்றத்தூர் நந்தம்பாக்கத்தில் மேல்நிலைப்பள்ளி ஒன்றை நடத்தி வருகிறேன். எங்கள் பள்ளியில் வெள்ளிக்கிழமை மதியம் 2 மணி முதல் 3 மணி வரை பஜனை கட்டாயம் நடைபெறும். சத்ய சாய் அறக்கட்டளையில் இருந்து வந்து மாதம் ஒரு முறை மருத்துவ முகாம் தொடர்ந்து நடைபெறுகிறது.
இது மட்டுமா தற்காப்பு கலையான கராத்தே, சிலம்பம் மற்றும் ட்ரம்ஸ், பரதநாட்டியம், கீ போர்டு, வாய்ப்பாட்டு என சிறப்பு வகுப்புகளுக்கு விருப்பமுள்ளவர்கள் சேரலாம். எவ்வித கட்டணமும் கிடையாது . பொருளாதாரத்தை கொண்டு மாணவர்களிடையே ஏற்றத்தாழ்வு உருவாகி விடக்கூடாதென்பதால் பயிற்சிகள் அனைத்தும் இலவசம்.
இந்தப் பயிற்சிகளை அளிப்பதற்காக 50-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். இப்பள்ளியில் மாற்றுத்திறனாளிகள், சிறப்பு குழந்தைகளும் மற்ற மாணவர்களுடன் கலந்து படிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சிறப்பு குழந்தைகளை தனி பள்ளியில் போடவேண்டாம். பொதுப்பள்ளிகளில் படிக்க வைக்க வேண்டுமென 2 ஆண்டுகளுக்கு முன் அரசு ஆணை பிறப்பித்துள்ளது. ஆனால், அதற்கு முன்னே எங்கள் பள்ளியில் படிக்க வைத்துள்ளோம்.
குடியரசுத் தலைவர் அப்துல்கலாமிடம் 2 முறை விருது பெற்ற திரைப்படத்துறை கலை இயக்குநர் ஜனார்த்தனன் இப்பள்ளி மாணவர். அவருக்கு இரண்டு கைகளும், ஒரு காலும் கிடையாது.
எங்கள் பள்ளி மாணவர்கள் அணியும் சீருடையில் உள்ள இலச்சினையில் "கல்வி உலக அமைதிக்காக' என்று பொறிக்கப்பட்டிருக்கும் . அதை நோக்கிய பயணம் தான் எங்களுடையது'' என்கிறார் ராஜசேகரன்.