எதையும் சாதிக்க முடியும்!
பொது முடக்கம் காரணமாக கர்நாடகாவின் பாரம்பரிய நடனக்கலையான யக்ஷ கானா பயிற்சி பெற தன்னிடம் வரும் மாணவர்களுக்கு கற்றுத்தர முடியாத நிலை ஏற்பட்டதால், மனம் தளராத 62 வயதாகும் யக்ஷகானா
பொது முடக்கம் காரணமாக கர்நாடகாவின் பாரம்பரிய நடனக்கலையான யக்ஷ கானா பயிற்சி பெற தன்னிடம் வரும் மாணவர்களுக்கு கற்றுத்தர முடியாத நிலை ஏற்பட்டதால், மனம் தளராத 62 வயதாகும் யக்ஷகானா கலைஞர் சீனிவாஸ் சாஸ்தான், இணைய தளத்தின் மூலம் பயிற்சியளிக்கும் முறையை துவங்கியுள்ளார்.
பெங்களூரு ஜே.பி நகரில் உள்ள கர்நாடகா கலா தர்ஷினி என்ற அமைப்பின் மூலம் மாணவர்களுக்கு யக்ஷகானா நடனத்தை கற்பித்து வந்த சீனிவாஸ் சாஸ்தான், கர்நாடகா யக்ஷகானா அகாதெமியில் 23 ஆண்டு கால அனுபவம் பெற்றவர்.
இந்த பாரம்பரிய கிராமிய கலை எக்காரணத்தைக் கொண்டும் அழிந்து விடக்கூடாது என்பதற்காக இணையதளம் வழியே நடத்தும் வாராந்திர பயிற்சி வகுப்புகள் உள்நாட்டில் மட்டுமின்றி அமெரிக்கா, அரபு நாடுகளில் வசிக்கும் இந்திய குடும்பங்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இவரைத் தொடர்ந்து 18 ஆண்டு கால மேடை அனுபவம் பெற்ற 32 வயதாகும் பிரசாத் செர்காடி என்கிற யக்ஷகானா கலைஞர், 20 ஆண்டுகால அனுபவம் பெற்ற பிரியங்கா மோகன் என்கிற பெண் யக்ஷகானா கலைஞரும் இணையதளம் வழியே பயிற்சி வகுப்புகளைத் தொடங்கியுள்ளனர்.
""பெரிய நகரங்களில் அவ்வளவாக வரவேற்பு இல்லை என்றாலும், கர்நாடக கடலோரப் பகுதிகளில் உள்ள நகரங்களில் பிரபலமாக உள்ள இந்த கலை கற்றுக்கொள்ள விரும்பும் மாணவர்களின் வசதிகேற்ப பகுதி பகுதியாக பயிற்சியளிக்கிறோம். பயிற்சி பெறும் மாணவர்களுக்கு பெற்றோர் உதவி செய்தால் போதும். பயிற்சி முறைகளுடன் தகவல்களையும் வீட்டிலிருந்தபடியே கற்றுக்கொள்ள இன்றைய தகவல் தொழில் நுட்ப வளர்ச்சி பெரிதும் உதவியாக இருப்பதால் எதையும் சாதிக்க முடியும்'' என்கிறார் பிரியங்கா மோகன்.