ரோஜா மலரே! - 101: மறக்க முடியாத அùமரிக்க பயணம்! - குமாரி சச்சு
கிருஷ்ணசாமி அúஸாசியேட்ஸ் தயாரித்து நான் நடித்த தொலைக்காட்சி தொடர் "உபாசனா'. இது ஹிந்தியில் வெளியான கண்ணகியின் கதை.
கிருஷ்ணசாமி அúஸாசியேட்ஸ் தயாரித்து நான் நடித்த தொலைக்காட்சி தொடர் "உபாசனா'. இது ஹிந்தியில் வெளியான கண்ணகியின் கதை. தொடர்ந்து அதே நிறுவனத்தின் தயாரிப்பில் நடித்த நாடகம் "புத்த ஜாதகம்'. இது வேறு உலகத்தில் நடப்பது மாதிரியான கதை. வேறு ஒரு கிரகம் எப்படி இருக்கும் என்பது நம்மில் யாருக்குமே தெரியாது. அதனால் அந்த உலகத்தை நாம் நம்பும் வண்ணம் காட்டுவதற்கு அவர்களுக்கு தேவைப்பட்டது தான் பின்னணியை மாற்றும் திரையமைப்பு. கிருஷ்ணசாமி நிறுவனம் வேண்டியவைகளுக்காக தயங்காமல் செலவு செய்வார்கள். ஆனால் வீண் செலவு செய்ய மாட்டார்கள்.
இந்த பின்னணியை மாற்றும் திரையமைப்பை வைத்து காட்சிகளை எடுத்தார்கள். எடுத்த காட்சிகளை போட்டு பார்க்கும் போது பிரம்மாண்டமாக இருந்தது. "மாயா பஜார்' போன்ற படங்களை எடுத்த போது மிஷல் காமிரா இருந்தது. அந்த நாளில் பிரம்மாண்டத்தை ஒளிப்பதிவாளர்கள் எடுத்தது மிஷல் காமிரா மூலம் தான். குறிப்பாக நடிகர் எஸ்.வி. ரங்காராவ் சம்பந்தப்பட்ட காட்சிகள் எடுத்தது இந்த மிஷல் காமிராவில் தான். அப்போது இந்தியாவில் அந்த அளவுக்கு தொழில் நுட்பம் முன்னேறவில்லை. நமது ஒளிப்பதிவாளர்கள் திறமையை நம்பி மட்டுமே வேலை செய்ய வேண்டி உள்ளது.
தொலைக்காட்சி தொடர்களில் நடித்துக்கொண்டிருந்த போது சினிமா வாய்ப்புகள் தேடி வர பிஸியாகி விட்டதால் தொடர்ந்து தொடர்களில் நடிக்க முடியவில்லை. ஆனால் என் வாழ்வில் மறக்க முடியாத தொடர் "வாஷிங்டனில் திருமணம்'. இந்த கதை எழுத்தாளர் சாவி எழுதியது. அந்த காலகட்டத்தில் அமெரிக்காவில் மாப்பிள்ளை என்றால் திருமணம் நடப்பது எவ்வளவு கஷ்டம் என்பது எல்லோருக்கும் தெரியும். அதனை நகைச்சுவை மிளிர நாவலில் சொல்லியிருப்பார். அந்த கதையை பூர்ணம் விஸ்வநாதன் மேடை நாடகமாக எடுத்த போது பார்த்து ரசித்து இருக்கிறேன். அந்த நாடகத்தையே அவர் டிவி தொடராக எடுத்த போது என்னை தொடர்பு கொண்டார். தொடர்ந்து சித்ராலயா கோபுவை சந்தித்தார். நாவல் ஏராளமான பகுதிகளை கொண்டது என்பதால் அதை மெருகேற்றி தொடராக சுருக்கி இயக்கினார்.
கோபு என்னிடம் வந்து "அமெரிக்கா போக போகிறோம் நீங்கள் தயாராக இருக்க வேண்டும்' என்றார். நானும் சம்மதித்தேன். முதன் முதலில் வெளிநாட்டுக்குச் சென்று எடுக்கப்பட்ட தமிழ் தொலைக்காட்சி தொடர் "வாஷிங்டனில் திருமணம்'. இந்த கதையின் பெரும்பகுதி அமெரிக்காவில் நடப்பதால் அங்கு படமாக்க திட்டமிட்டார் கோபு. இதற்காக 16 பேர் கொண்ட குழு அமெரிக்கா பயணமானோம். அமெரிக்காவில் முதலில் நாங்கள் சென்ற இடம் நியூயார்க். அங்கே உள்ள பிரபலமான இடங்களில் படப்பிடிப்பு நடந்தது. அமெரிக்காவில் வசித்த தயாரிப்பாளர் ஆனந்தா எல்லா ஏற்பாடுகளையும் செய்திருந்தார்.
இதில் டிராவல் ஸ்பான்சர் ஏர் இந்தியா. "ராக் பெல்லர்' பாத்திரம் இந்த கதையில் வரும். அவர்தான் இந்த கல்யாணத்தை நடத்தி வைப்பார். பெரும் பணக்காரர் அவர். மணப் பெண், அப்பாவிற்கு அவர் நெருக்கிய நண்பர் என்று கதையில் சொல்லபட்டு இருப்பார். அவர் நம்மூர் அப்பளம் நொறுக்குவது, விளையாடல் சடங்கை பார்த்து சந்தோசப்படுவது போல் காட்சிகள் இருக்கும். ஆனால் ராக் பெல்லர் என்ற பாத்திரத்தின் பெயரை நீங்கள் உபயோகபடுத்தக்கூடாது என்று சொல்லி விட்டார்கள். சாவி எழுதும் போது, ராக்பெல்லர் பெரும் புகழ் பெற்ற பணக்காராக இருத்தார். நாங்கள் செல்லும் போது அவரை விட புகழ் பெற்றவர்கள் அங்கே வந்து விட்டார்கள். அதனால் இப்படி சொல்லி விட்டார்கள் போலும்.
இயக்குநர் கோபு, உடனே ஒரு தமிழரை மணந்த பணக்கார வெள்ளைக்கார அம்மா என்று மாற்றி, சூட்டிங் நடத்தப்பட்டது. அந்த வெள்ளைக்கார பெண்மணி எங்களுடன் அன்பாக பழகி, ஒவ்வொரு தடவையும் என்ன வசனம் பேச வேண்டும் என்று கேட்டு சிறப்பாக நடித்தார்.
அமெரிக்காவில் வசித்த ஆனந்தாவின் நண்பர்கள் எல்லோரும் தொடரில் நடித்தார்கள். டாக்டர்கள், இன்ஜினியர்கள், உயர் பதவியில் இருப்பவர்கள் நிறைய பேர் இதில் நடிகர்களாக மாறினார்கள். குறிப்பாக நந்தினி, இவர் சென்னையில் இருந்து தான் அமெரிக்கா சென்றவர். அங்கேயே வேலை செய்கிறார். இந்த தொடரில் சிறப்பாக நடித்துக் கொடுத்தார். முக்கியமான பாத்திரத்தில் எல்லாம் அங்கே உள்ள நம்மவர்கள் நடித்து கொடுத்தார்கள்.
பெண்கள் மடிசார் புடவையை கட்டிக் கொண்டு படப்பிடிப்பில் பங்கேற்றார்கள். அங்கே இருக்கும் தெருவோர கடைகளில் நாங்கள் பொருள்கள் வாங்குவது போல் காட்சிகள் எடுக்கப்பட்டன. அதற்காக என்னை மேக்கப் போட்டு தயார் செய்தார்கள். அதைப் பார்த்ததும் எனக்கு ஆச்சரியம் ஏற்பட்டது.
தொடரும்...