சுதந்திர சுடரை அணையாமல் காப்போம்!: ஜவாஹர்லால் நேரு
1945-ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 15-ஆம் தேதி ஜப்பான் ஆங்கிலேய அரசிடம் சரணடைவதாக அறிவித்த நாள்.
1945-ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 15-ஆம் தேதி ஜப்பான் ஆங்கிலேய அரசிடம் சரணடைவதாக அறிவித்த நாள். அங்கு அப்போது கடற்படை தளபதியாக பணியாற்றிய மவுண்ட்பேட்டன் பிரபு இந்தியாவிற்கு சுதந்திரம் கொடுக்க அந்நாளையே தேர்ந்தெடுத்தார். ஆனால் ஜோதிடர்கள் சூர்யநாராயணன் வியாஸ், ஹர்தேவ்ஜி கணிப்புப்படி ஆகஸ்ட் 14-ஆம் தேதி இரவு 12-15 மணிக்கு சுதந்திர நிகழ்ச்சி நடத்த தீர்மானிக்கப்பட்டது.
இரவு மைய மண்டபத்தில் பாபு ராஜேந்திர பிரசாத் தலைமையில் 11 மணிக்கு கூட்டம் கூடியது. பெரும் ஆரவாரத்திற்கு மத்தியில் சுசேதா கிருபளானி "வந்தேமாதரம்' பாடலை உணர்ச்சியோடும் பெருமிதத்தோடும் பாடினார். மக்களிடையே ஆரவாரம் ஏற்பட்டது. இரண்டு நிமிடம், இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. ஜவாஹர்லால் நேரு உணர்ச்சி பொங்க பேச ஆரம்பித்தார்:
""இரவு 12 மணி அடிக்கும்போது உலகம் உறங்கி கொண்டிருக்கும் நேரத்தில் இந்தியா உயிர்த்துடிப்போடு சுதந்திரத்தில் கண் விழிக்கும்.
Advertisement
நாம் நீண்ட நெடுங்காலத்துக்கு முன் விதியோடு ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டோம். அந்த ஒப்பந்தத்திலிருந்து நம்மை விடுவித்துக்கொள்ளும் நேரம் வந்துவிட்டது.
இன்னல் பட்டு தியாகம் செய்தும் இந்திய மக்கள் சுதந்திரம் பெறும் இந்த புனிதத் தருணத்தில், நான் அரசியல் நிர்ணய சபை உறுப்பினர் என்ற முறையில் இந்த உறுதிமொழியை எடுக்கிறேன். இந்தப் பழம் பெருமை வாய்ந்த பூமி . உலக அமைதியை அடையவும் மனித சமுதாயம் நலமாக வாழவும், மக்களின் பணியில் என்னை அர்ப்பணிக்கிறேன்.
நமக்கு இருக்கும் வாய்ப்புகள் பெரியது.நாம் அதற்கான தகுதியும் திறமையும் வளர்த்துக்கொள்ள வேண்டும். உயர் பதவிகளில் ஊழல், உறவினர்களுக்கு சலுகை, அதிகார ஆசை, ஆதாயம் பெறல், கருப்புச் சந்தை ஆகியவற்றின் அடிச்சுவடுகளை அகற்றாவிடில் நிர்வாகத் திறமையும் மேம்படும்.
எதிர்காலம் என்பது சுகமாக இருப்பதற்கோ, ஓய்வெடுப்பதற்கோ அல்ல; இதுவரை நாம் எடுத்த உறுதிமொழிகளையும் இன்று எடுக்கப்போகும் உறுதிமொழிகளையும் இடையறாது பாடுபட்டு நிறைவேற்றுவதற்குத்தான். எதிர்காலம் என்பது, இந்தியாவுக்கு சேவைசெய்வது என்பது துயரத்தில் வாடும் கோடிக்கணக்கான மக்களுக்கு சேவைசெய்வதுதான். அந்த சேவை என்பது வறுமையை ஒழிப்பது, அறியாமை இருளை அகற்றுவது, நோயற்ற வாழ்வை அளிப்பது, ஏற்றத்தாழ்வுகளை நீக்கி நாட்டின் வளங்களில் அனைவருக்கும் சமவாய்ப்பை அளிப்பது.
நம்முடைய தலைமுறையைச் சேர்ந்த மிகப் பெரிய மகானின் லட்சியமே ஒவ்வொரு கண்ணிலிருந்தும் வழியும் கண்ணீர் துடைக்கப்பட வேண்டும் என்பதே. அது நம்முடைய சக்திக்கு அப்பாற்பட்டதாக இருக்கலாம் - கண்ணீர் இருக்கும்வரை, துயரங்கள் தொடரும்வரை நம்முடைய பணிகள் முற்றுப்பெறாது.
எனவே கடினமாக உழைக்க வேண்டும், பாடுபட வேண்டும், நம்முடைய கனவுகள் நனவுகளாக வேண்டும். அந்தக் கனவுகள் இந்தியாவுக்காக மட்டுமல்ல, அவை உலகத்துக்காகவும் கூட; எல்லா நாடுகளும் எல்லா மக்களும் நெருக்கமாகப் பின்னி பிணைக்கப் பட்டுள்ளனர்; யாராவது ஒரு தேசத்தவரை விட்டுவிட்டு உலகை நினைத்துப்பார்க்க முடியாது.
சமாதானம் என்பதை உடைக்க முடியாது என்பார்கள்; அதைப் போலத்தான் சுதந்திரமும், அதைப் போலத்தான் வளமும், அதைப் போலத்தான் பேரிடர்களும்! இந்த ஒரே உலகைப் பல துண்டுகளாக இனி உடைக்க முடியாது.
எதிர்பார்த்த அந்த நாள் வந்துவிட்டது காலத்தால் நிர்ணயிக்கப்பட்ட நாள் இது. நீண்ட கால உறக்கத்துக்குப் பிறகு, போராட்டங்களுக்குப் பிறகு, விழிப்புற்று, வலுவேறி, சுதந்திரமாக, தளைகளை அறுத்துக்கொண்டு இந்தியா நிமிர்ந்து நிற்கிறது.
கடந்த காலம் நம்மை ஏதோ ஒரு வகையில் இன்னும் பற்றிக்கொண்டிருக்கிறது. அதனால் நாம், கடந்த காலத்தில் அடிக்கடி எடுத்துக்கொண்ட உறுதிமொழிகளுக்குச் செயல்வடிவம் கொடுத்தாக வேண்டும். வரலாறு நமக்குப் புதிதாகத் தொடங்குகிறது; இனி நாம் வாழ்ந்து செயல்படப்போவதுதான் வரலாறு, அதை வருங்காலத்தில் மற்றவர்கள் எழுதப்
போகிறார்கள்.
இந்தியாவின் தொன்மையான உணர்வுகளுக்கு இலக்கணமாகத் திகழும் சுதந்திர தீபத்தையேற்றி, நம்மைச் சுற்றியிருந்த அடிமை இருளைப் போக்குவோம். எப்படிப்பட்ட காற்று வீசினாலும் எப்படிப்பட்ட சூறாவளி தாக்கினாலும் சுதந்திரம் என்ற சுடரை அணையாமல் காப்போம்'' என்றார்.