குவியும் சுற்றுலா பயணிகள்
உத்தரகண்ட் மாநிலமான ரிஷிகேஷ் அடர்ந்த காடுகள், பாய்ந்தோடும் புனித நதி போன்றவைகள் நிறைந்த பகுதிகள் ஏராளம்.
உத்தரகண்ட் மாநிலமான ரிஷிகேஷ் அடர்ந்த காடுகள், பாய்ந்தோடும் புனித நதி போன்றவைகள் நிறைந்த பகுதிகள் ஏராளம். இது உலகின் யோகா தலைநகரமாகும். ஆன்மிகம், யோகா மற்றும் மன அமைதியைத் தேடி வந்த சுற்றுலாபயணிகள் தற்போது சாகசங்கள் மற்றும் குதூகலம் நிறைந்த ஏராளமான விஷயங்களை ரிஷிகேஷில் அனுபவித்து மகிழ்கிறார்கள்.
அதிகமான செழிப்புடைய வனப்பகுதிகளைக் கொண்டுள்ள ரிஷிகேஷ் பல்வேறு டிரெக்கிங் பாதைகளைக் கொண்டுள்ளது. அதில் குறிப்பிடத்தக்கது சந்திரஷீலா ஆகும். வேலி ஆஃப் பிளவர்ஸ் மற்றும் கெளரி பாஸ் போன்ற பல்வேறு பிரபலமான டிரெக்கிங்குகளுக்கான முதன்மை மைய அடித்தளமாக ரிஷிகேஷ் திகழ்கிறது. இது வார இறுதி சுற்றுலா பயணிகளை பெரிதும் கவரும் அம்சங்களாகும்.
ரிஷிகேஷில் இருக்கும் கங்கை அமைதியானதில்லை. நதியின் இந்த துள்ளலான தன்மையை பயன்படுத்திக் கொள்ளும் வகையில், தண்ணீர் விளையாட்டுகள் இங்கு சிறப்பாக மேற்கொள்ளப்படுகின்றன. இதை நன்கு அனுபவிக்க செப்டம்பர் முதல் ஏப்ரல் வரை சிறந்த காலகட்டமாகும்.
ரிஷிகேஷின் வடக்கு பகுதியில் அற்புதமான பாறை முகப்புகள் அமைந்துள்ளன. பாறையேற்றத்தில் அனைத்து வகையிலான பாதுகாப்பு அம்சங்களும் பின்பற்றப்படுகின்றன மற்றும் நீண்ட பாறை முகப்புகள் பாறை ஏறுவதற்கும் பயன்படுகின்றன.
"ரப்பெல்லிங்' எனப்படுவது ஒரு நேரான பாறையிலிருந்து கயிற்றின் உதவியுடன் மேலிருந்து கீழாக இறங்கும் சாகச செயல்பாடாகும். ரிஷிகேஷில் சுற்றுலாப் பயணிகள் அனுபவித்து மகிழ்வதற்கான மற்றுமொரு சிறந்த சாகச நிகழ்வாக இது திகழ்கிறது. இந்தியாவின் மிக உயரமான நிலையான அடித்தளம் கொண்ட பன்ஜீ ஜம்பிங் அமைவிடமாக ரிஷிகேஷ் திகழ்கிறது. ரிஷிகேஷின் பெருமையை கேள்விப்பட்ட வெளிநாட்டினர் அங்கு அதிக அளவில் குவிந்து வருகிறார்கள்.