நடன ஆய்வுக்காக பயணம்
அமெரிக்காவின் புகழ்பெற்ற "பிராட்வே' என்கிற கலையைத் தழுவி இந்திய வடிவாக உருவான "மியூசிக்கல்' குழுவில் இருந்தவர் துளசிராம்.
அமெரிக்காவின் புகழ்பெற்ற "பிராட்வே' என்கிற கலையைத் தழுவி இந்திய வடிவாக உருவான "மியூசிக்கல்' குழுவில் இருந்தவர் துளசிராம். புதுச்சேரியைச் சேர்ந்த இவர் உலக நாடுகள் பலவற்றிலும் பயணித்து அங்குள்ள பாரம்பரிய நடனக் கலைகளை பற்றி ஆராய்ந்தவர். அது போல் பல போட்டிகளுக்கும் நடுவராக இருந்திருக்கிறார்.
இப்போது தமிழில் தனி பாடல் ஆல்பத்தை வெளியிட்டுள்ளார். "மந்திரிச்சு விட்டது போல்'... எனத் தொடங்கும் இந்தப் பாடல் செல்போன் உபயோகிப்பதால் ஏற்படும் சமூக தீங்குகள் குறித்து விழிப்புணர்வு ஊட்டுகிறது. இது குறித்து அவர் பேசும் போது...
""புதுச்சேரியில் பிறந்த நான் அமெரிக்காவில் மாணவராக மேல்படிப்பைத் தொடர்ந்தேன். அந்நாட்டில் எங்கு நடனப்போட்டி நடந்தாலும் கலந்து கொள்வேன். அப்படித்தான் எனக்கும் நடனத்துக்கும் இடையில் தொடர்பு உண்டானது. பிரபுதேவா, ஹாலிவுட் நடிகர் லாரன் காட்லிப், இசையமைப்பாளர் யுவன்ஷங்கர்ராஜா உள்ளிட்டோர் எனக்கு நெருங்கிய தொடர்பில் வந்தனர்.
Advertisement
அமெரிக்காவில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் நடிகை ஆண்ட்ரியாவுடன் நடனம் ஆடினேன். உலக நாடுகள் பலவற்றிலும் பயணித்து அங்குள்ள பாரம்பரிய நடன கலைகள் குறித்து ஆராய்ந்து கட்டுரைகள் எழுதியிருக்கிறேன். கண்டங்கள், தீவுகள், சுதந்திரம் பெறாத நாடுகள் பலவற்றிலும் சுற்றியிருக்கிறேன். கலைஞர் தொலைக்காட்சியில் வந்த நாளைய இயக்குநர் சீசன் 3-இல் இடம் பெற்ற நினைவுப் பரிசு குறும்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
இப்போது இந்த மியூசிக் ஆல்பத்தை உருவாக்கியிருக்கிறேன். என்னிடம் நடனம் கற்கும் சிறுவர், சிறுமிகளை வைத்து இந்த ஆல்பத்தை உருவாக்கியிருக்கிறேன். அடுத்து சில பட வாய்பபுகள் வந்துள்ளன. அதில் எனக்கு பொருந்துகிற படங்களில் நடிப்பேன்'' என்றார் துளசிராம்.