தொடரும் இசை
திரை இசை பயணத்தில் 25 ஆண்டுகளை நிறைவு செய்கிறார் யுவன்ஷங்கர்ராஜா.
திரை இசை பயணத்தில் 25 ஆண்டுகளை நிறைவு செய்கிறார் யுவன்ஷங்கர் ராஜா. 1996-ஆம் ஆண்டு "அரவிந்தன்' படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான யுவன் இசையமைக்க ஆரம்பித்த கடந்த 25 வருடங்களாக தனக்கான தனிப்பாதையில் பயணமாகி வருகிறார். இவரின் சோகப் பாடல்கள் தனித்துவமாக இருக்கும். யுவனின் மெட்டுக்கள் "துன்பத்திலும் இன்பம்' தருவதாக இருக்கும். காதல் சோகப் பாடல்களால் கண்ணீர் துளிர்க்கும். ஆனால், அதே பாடல்கள்தான் மீண்டும் காதலிக்கவும் தூண்டும்.
"இத்தனை ஆண்டு காலம் என்னுடன் பயணித்த அனைவருக்கும் நன்றிகள். எப்போதும் போலவே என் இசை உங்களை பின் தொடர்ந்து வரும். காதலாக, அன்பும் செலுத்தும் விதமாக, நட்பாக என எல்லா தருணங்களிலும் என் இசை உங்களுடன் பயணிக்கும். ரசனைகள் மாற மாற, காலம் மாற மாற எப்போதும் அனைவருக்கும் பிடித்த மாதிரியான பாடல்களை, ஹிட் பாடல்களை தந்து கொண்டே இருப்பேன். அப்பா, மனைவி உள்ளிட்ட குடும்பத்தார் அனைவருக்கும் இந்த நேரத்தில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். தரமான படத் தயாரிப்புகள் எப்போதும் போலவே தொடரும். தொடர்ந்து உங்களுடனே இருப்பேன்'' என்றார் யுவன்ஷங்கர் ராஜா.