ஞாயிறு கொண்டாட்டம்

கம்பு விளைச்சலில் புதுமை!

கம்புத் தானியத்தில்  இயற்கையாக இருக்கும் இரும்பு, துத்தநாக சத்துகளின் அளவைவிட,  அதிகமாகத்  தரும் கம்பு வகைகளைக் கண்டுபிடித்தற்காக அறிவியல் வேளாண்மை  யுக்தியை  வரையறுத்தவர் விஞ்ஞானி  கோவிந்தராஜ்.

பிஸ்மி பரிணாமன்

கம்புத் தானியத்தில்  இயற்கையாக இருக்கும் இரும்பு, துத்தநாக சத்துகளின் அளவைவிட,  அதிகமாகத்  தரும் கம்பு வகைகளைக் கண்டுபிடித்தற்காக அறிவியல் வேளாண்மை  யுக்தியை   வரையறுத்தவர் தமிழகத்தைச் சேர்ந்த வேளாண்மை விஞ்ஞானி  கோவிந்தராஜ்.  

இந்திய வேளாண்மைக்கான இவரது பங்களிப்பைப் பாராட்டி,   பசுமைப் புரட்சியின் பிதாமகர்  நார்மன்  இ போர்லாக்  நினைவாக   "உலக உணவுப் பரிசு அறக்கட்டளை'  உருவாக்கிய  விருதுக்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அமெரிக்காவின் அயோவா மாநிலத்த்தின் தலைநகரான டி மொயின்னில் அக். 19-இல் நடைபெறும் விழாவில், விருதைப் பெறுகிறார். இவர் ஹைதராபாத்தில் செயல்படும்  "இக்ரிஸாட்'  எனப்படும்  "அகில உலக மானாவாரி பயிர்கள் ஆராய்ச்சி' நிலையத்தில்  முதுநிலை வேளாண்   விஞ்ஞானியாக 2011-ஆம் ஆண்டிலிருந்து பணிபுரிகிறார்.

வேளாண்மையில் முதுநிலை, முனைவர் பட்டத்தை கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் பெற்றார்.   "தாவர பெருக்கம், மரபியலில் ஆய்வு' துறையில்  ஆராய்ச்சி செய்தவர். தனது ஆய்வின் ஒரு பகுதியாக 2014-இல் உலகின் முதல் வலுவூட்டப்பட்ட கம்பு பயிரை வெளியிட்டார்.

இந்தியா, ஆப்பிரிக்கா உள்ளிட்ட  நாடுகளில்  பத்துக்கும் மேற்பட்ட உயர் இரும்பு, துத்தநாக சத்து  கொண்ட கம்புப் பயிர்களை அறிமுகப்படுத்தி, பல ஆயிரம் பேரை சென்றடைய களப் பணியாற்றினார்.

இதற்காக,  இவருக்கு 2009-இல்  அமெரிக்கா ஜார்ஜியாவைச் சேர்ந்த பன்னாட்டுத் தாவர ஊட்டச்சத்து நிறுவனத்தை  "சிறந்த வேளாண்மை ஆய்வாளர்' விருது கிடைத்தது. தான் பணிபுரியும் நிறுவனத்திலேயே கோவிந்தராஜிற்கு 2016-இல்   "இளம் விஞ்ஞானி'  விருதும் கிடைத்தது.

இதுகுறித்து கோவிந்தராஜ் கூறியதாவது:

""விவசாயக் குடும்பத்தில் பிறந்தவன். எங்களது  குடும்பத்தில்  முதல் பட்டதாரி நான்.  வேளாண்மையில்  ஆராய்ச்சி செய்ய விரும்பினேன். 

தமிழகத்திலும்  நெல்தான் அதிகம் பயிரிடப்படுகிறது.  சாதாரண  மக்களுக்கு அதிக  சத்து தரும் கம்புவகைகளை  உருவாக்க விரும்பினேன். தண்ணீர் வசதி இல்லாத   வறட்சி  உள்ள நிலங்களில்  வளரும் கம்பு  உணவாக  இருக்கிறது. 

உடல் சோகையை மாற்ற  சத்து  அதிகமுள்ள  உணவு கம்புதான்.   முதன் முதலாக  உருவாக்கிய  கம்பு வகைக்கு  "தனசக்தி' என்று பெயர் வைத்தோம். இதை உருவாக்க பத்தாண்டு  ஆராய்ச்சி தேவைப்பட்டது. "தனசக்தி'  பயிரில் இயற்கை முறையில் மகரந்த சேர்க்கை நடைபெறும். இருப்பினும், விவசாயிகள்  கிக்கா மகசூல் பெற கலப்பு வீரிய  வகை  கம்புவகைகளை  விளைவிக்க விரும்புகின்றனர்.

வீரிய வகை  கம்புகளுக்கான விதைகள்  விவசாயிகளுக்குச் சென்று சேர பல்கலைக்கழகங்களின், தனியார் விதை நிறுவனங்களின் உதவிகளை நாடினோம். ஒரு ஏக்கருக்கு மூன்று கிலோ  விதை போதும்.  அறுவடைக்குத் தயாரான வீரிய கம்பு பயிரின் மணிகள்  வழக்கமான  அளவைவிடப் பெரிதாக இருக்கும்.   வீரிய வகை விளைச்சல்  "தனசக்தி' கம்பு வகையைவிட  இருபது முதல் முப்பது  சதவீதம்  அதிகமாக இருக்கும். 

விற்பனை செய்யும்போது அதிக விலையும் கிடைக்கும்.  கரோனா  காலத்தில் நோய் எதிர்ப்பு சக்திக்காக,  உடலுக்கு சத்தான உணவின்  அவசியம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு  ஏற்பட்டுள்ளது. உடலுக்கு  ஆரோக்கியம் தரும் சத்துகள்  நான் உருவாக்கிய  கம்பு வகைகளில்  உள்ளதால் விவசாயிகளிடையே   இந்த வீரிய கம்பு வகைகளைப் பயிரிட நல்ல வரவேற்பு உருவாகியுள்ளது'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேற்கு வங்கத்தில் எஸ்ஐஆா் காரணமாக அவசர வழக்குகளை கையாள 6 போ் குழு: உயா்நீதிமன்றத் தலைமை நீதிபதி நியமனம்!

நாட்டரசன்கோட்டையில் வடமாடு மஞ்சுவிரட்டு

அஸ்ஸாம் - அருணாசல் இடையே நிறுவப்பட்டது முதல் எல்லைத் தூண்!

இளைஞருக்கு மிரட்டல்: இருவா் கைது

புதுச்சேரியில் 4 மையங்களில் எஸ்.ஐ. எழுத்துத் தோ்வு! 1,284 போ் எழுதினா்!

SCROLL FOR NEXT