அனயா நடிக்கும் கொடை
நகைச்சுவை நடிகர் சிங்கமுத்து மகன் வாசன் கார்த்திக், தற்போது தனது பெயரை "கார்த்திக் சிங்கா' என்று மாற்றிக் கொண்டு வருகிறார்.
நகைச்சுவை நடிகர் சிங்கமுத்து மகன் வாசன் கார்த்திக், தற்போது தனது பெயரை "கார்த்திக் சிங்கா' என்று மாற்றிக் கொண்டு வருகிறார். இவர் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் "கொடை'. இதற்கு முன் இவரது நடிப்பில் 2007-இல் "மாமதுரை', 2011-இல் "அய்யன்' ஆகிய படங்கள் திரைக்கு வந்துள்ளன. இப்போது அவர் நடித்து வரும் படத்தை எஸ். எஸ். பிக்சர்ஸ் தயாரிக்க, ராஜசெல்வம் இயக்கியுள்ளார்.
ஜூனன் கார்த்திக் ஒளிப்பதிவு செய்கிறார். சுபாஷ் கவி இசையமைக்கிறார். மலையாள நடிகை அனயா, ரோபோ சங்கர், எம்.எஸ். பாஸ்கர், மாரிமுத்து, சிங்கமுத்து, அஜய் ரத்னம் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
இதுகுறித்து கார்த்திக் சிங்கா பேசும்போது:
""ஒரு கட்டத்தில் சினிமாவைவிட்டு விலகி இருந்தேன். மீண்டும் வாய்ப்பு வந்ததால் நடிக்கிறேன். கொடைக்கானல் நகரத்தை மையப்படுத்திய கதை என்பதால் இதற்கு கொடை என்று பெயர் வைத்துள்ளோம். அது இல்லாமல் கொடை என்பது கொடை வள்ளலை குறிக்கும். கொடைக்கானலில் பயணியர் தங்கும் அறைகளை எடுத்து நடத்தும் எனக்கு, எதிர்பாராத பிரச்னைகள் உண்டாகுகிறது. அதை சமாளித்து எவ்வாறு வெளியே வந்தேன் என்பதே திரைக்கதை'' என்றார்.
இதுகுறித்து அனயா பேசும்போது, "" மலையாளத்தில் மோகன்லால் நடித்த "ஆராட்டு' படத்தில் நடித்தேன். இப்போது மலையாளத்தில் இரு படங்களில் நடித்து வருகிறேன். இந்தப் படம் தமிழில் எனக்கு சிறப்பான அறிமுகத்தை கொடுக்கும் என நம்புகிறேன்'' என்றார்.