வீட்டை மட்டுமல்ல; நாட்டையும் உயர்த்த..!
பெண்கள் சுயதொழில் புரிந்து தங்களது வீடுகளை மட்டுமல்ல; பொருளாதாரத்தில் நம் நாட்டையும் உயர்த்த முன்வர வேண்டும்'' என்கிறார் உழைக்கும் பெண்கள் அமைப்பு.
"பெண்கள் சுயதொழில் புரிந்து தங்களது வீடுகளை மட்டுமல்ல; பொருளாதாரத்தில் நம் நாட்டையும் உயர்த்த முன்வர வேண்டும்'' என்கிறார் உழைக்கும் பெண்கள் அமைப்பு (டபிள்யூ. டபிள்யூ. எஃப்.) , இந்திய கூட்டுறவு பெண்கள் அமைப்புகளின் தலைவர் டாக்டர் நந்தினி ஆசாத்.
சென்னை மயிலாப்பரில் 40 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கிவருகிறது. பல்லாயிரக்கணக்கான பெண்கள் வாழ்வில் ஒளியேற்றியுள்ள இந்த அமைப்பில், சிறந்த சமூகத் தொண்டாற்றிவரும் அவருடனான சந்திப்பு:
பெண்கள் முன்னேற்றத்துக்குத் தடைக் கற்கள் எவை?
பெரும்பாலான இளம்பெண்கள் 30 ஆண்டுகளுக்குப் பிறகு, தாமதமாகத் தொழில் தொடங்குபவர்களாக உள்ளனர். அதாவது திருமணம், குழந்தைகள் பெற்றவுடனேதான் தொழில் தொடங்கும் முயற்சிக்கு வருகை தருகின்றனர்.
வீட்டு நிர்வாகம், குழந்தைகளை கவனித்துக் கொள்ள வேண்டியிருப்பதால், சிலர் படித்தாலும் வேலைக்குச் செல்ல முடியவில்லை. சுமார் 25 வயதுக்குள்பட்டவர்கள் பணி செய்யவே வருகை தருகின்றனர். தொழில் தொடங்க, பெற்றோரின் ஆதரவு கிடைப்பதில்லை.
வறுமையைக் குறைப்பதில் பெரும் பங்கு வகிக்கும் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் மட்டுமே இது சாத்தியமாகும். இளைய, ஏழ்மையான, குறைந்த கல்வியறிவு பெற்ற பெண்களும் கூட கூட்டுறவுச் சங்கங்களின் வாயிலாக, கடன் பெற்று நிறுவனங்களை நிர்வகிக்கலாம்; நடத்தலாம்.
உங்கள் அமைப்பை பற்றி...?
உழைக்கும் மகளிர் சங்கம் ( இந்திய மகளிர் கூட்டுறவு இணைப்பு மையம்) என்பது தென் இந்தியாவில் 6.20 லட்சம் பெண் உறுப்பினர்களைக் கொண்ட சமூக இயக்கமாகும். 285 தொழில்களில் ஈடுபட்டுள்ள முறைசாரா துறை ஏழைப் பெண்களுக்கு சிறு கடன்களை அளித்தல், நிதி உள்ளடக்கத்தை முக்கியமாகப் பயன்படுத்துதல், கடன் குழுக்கள் மூலம் ஏழைப் பெண் தொழிலாளர்களை ஒழுங்கமைத்தல், தொடர்ச்சியான கடன் வழங்குதல், அதிகாரமளித்தல், பாலின விழிப்புணர்வு, திறன் மேம்பாடு ஆகியவற்றில் ஆலோசனைகளும், பயிற்சிகளையும் வழங்கிவருகிறேன்.
அழகு நிலையத்தில் பணிபுரிந்த கிரேசி என்ற 29 வயது இளம்பெண் பி.காம். பட்டதாரி. ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர். கடன் பெற்று தொழில் தொடங்கியும், போதிய வருமானம் இல்லாததால், அதிக வட்டி கட்ட முடியவில்லை. உழைக்கும் மகளிர் கூட்டுறவுச் சங்கத்தில் இருந்து பெற்ற நிதியுதவியின் மூலம் கடன் பெற்றார். சொந்தமாக சலூனைத் தொடங்கவும், குடும்பத்தை நடத்தி சில ஊழியர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கிவருகிறார்.
மோனிஷா என்ற 24 வயது இளம்பெண் தனது பாட்டி மூலம் வெங்காய வியாபாரத்தைத் தொடங்கினார், தொடர்ச்சியான கடன்களைப் பெற்று, திரும்ப அடைத்து பொருளாதார நிலையில் உயர்ந்துள்ளார். இவ்வாறாக, நூற்றுக்கணக்கான பெண்கள் தொழில் தொடங்க உதவி செய்துள்ளோம்.
பெண்கள் முன்னேற என்ன வழி..?
சங்க நிறுவனத் தலைவரும் பத்மஸ்ரீ விருது பெற்றவருமான டாக்டர் ஜெயா அருணாசலத்தின் 91-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு , "2030 உலகளாவிய நிகழ்ச்சி நிரலை நோக்கி. உற்பத்தித்திறனை மேம்படுத்துவதில், சமத்துவமின்மையை எதிர்ப்பதில் கூட்டுறவு நிறுவனங்களில் இளம்பெண்களின் பங்கு' என்ற கருத்தரங்கை நடத்தினோம்.
கடந்த 27 ஆண்டுகளில் சிறந்த முறையில் செயல்பட்டமைக்காக, அமெரிக்கா நாட்டின் பொருளாதார, சமூக கவுன்சில் சார்பில்2-ஆவது முறையாக தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே பெண் கூட்டுறவுச் சங்கம் இளம் பெண்கள், பெண் தொழிலாளர்கள் கூட்டுறவுச்சங்கங்களில் பங்கேற்று, தங்களையும், குடும்பத்தையும் உயர்த்திக் கொள்ள வேண்டும்; இதோடு மட்டுமல்லாமல் நாட்டையும் உயர்த்த முன்வர வேண்டும்.
ஏழை இளம்பெண்கள் பொருளாதாரத்தில் முன்னேற வேண்டும். ஆண்களுக்கு நிகராக, சம பணிகளில் ஈடுபட வேண்டும். அப்போதுதான் உலகப் பொருளாதாரத்தை வலுப்படுத்த முடியும்.