புத்தாண்டில் அசத்திய ஆசிரியை..!
ஆங்கிலப் புத்தாண்டு பிறந்தாலே காலண்டர்களைத் தங்களது வாடிக்கையாளர்களுக்கு வியாபாரிகள், தொழில் நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் வழங்குவார்கள்.
ஆங்கிலப் புத்தாண்டு பிறந்தாலே காலண்டர்களைத் தங்களது வாடிக்கையாளர்களுக்கு வியாபாரிகள், தொழில் நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள் வழங்குவார்கள். ஆனால், அரசுப் பள்ளி ஒன்றின் தலைமை ஆசிரியை தனது பள்ளியில் படிக்கும் மாணவ, மாணவிகளைக் குழுவாகப் புகைப்படம் எடுத்து, கிராமத்தில் உள்ள 435 வீடுகளுக்கும் சென்று வீடுவீடாக வழங்கி அசத்தினார்.
திருவாரூர் அருகேயுள்ள பழையவலம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியை ஆர்.கலைவாணி என்பவர்தான் கல்விக்காக அர்ப்பணிப்பு உணர்வோடு, இந்த அளப்பரிய பணியைச் செய்துள்ளார். திருத்துறைப்பூண்டியைச் சேர்ந்தவர் இவர். இவரது கணவர் கே.கண்ணதாசன் காவல் துறையில் உதவி ஆய்வாளராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவர்களது இரு மகன்கள் ஸ்ரீதரசெல்வன், பாலமுரளி ஆகிய இருவரும் திருவாரூர் மாவட்டக் காவல் துறையில் காவலர்களாகப் பணிபுரிந்துவருகின்றனர்.
இந்த வித்தியாசமான முயற்சியை நிகழ்த்தியது குறித்து, கலைவாணியிடம் கேட்டபோது:
""நான் 1997-இல் பழையவலம் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் ஆசிரியையாகப் பணியில் சேர்ந்தேன். 13 ஆண்டுகள் இங்கேயே பணிபுரிந்தவுடன், 2009-இல் தலைமை ஆசிரியையாகப் பதவி உயர்வு பெற்று, பணியிட மாறுதல் பெற்றேன்.
குறும்பேரி, கொச்சக்குடி கிராமங்களில் உள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளிகளில் தலைமை ஆசிரியையாகப் பணிபுரிந்தேன். 2022-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில், பழைய வலம் பள்ளிக்கே தலைமை ஆசிரியராகப் பணியிட மாறுதலில் வந்தேன். நான் முதலில் பணிபுரிந்தபோது, 600 மாணவர்கள் பள்ளியில் படித்து வந்தனர். ஆனால், இப்போது 60 மாணவர்களே படிக்கின்றனர். நான் முன்பு பணிபுரிந்தபோது, நடுநிலைப் பள்ளியாக இருந்தது. இப்போது ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியாகத் தரம் குறைந்தது, மாணவர்களின் எண்ணிக்கையும் ஆண்டுக்கு ஆண்டு குறைந்துவந்தது. இது எனக்கு வேதனையை அளித்தது.
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அனுபவமிக்க ஆசிரியர்கள், கட்டணமில்லா கல்வி, விலையில்லா பாட நூல்கள், சீருடைகள், பாட நூல்கள், புத்தகப் பை, வண்ண பென்சில், பெண் கல்வி ஊக்கத் தொகை, மதிய உணவு என்று அரசு பல்வேறு நலத் திட்ட உதவிகளை வழங்குகிறது. அரசுப் பள்ளியில் படித்தவர்களுக்கு அரசுப் பணிகளில் முன்னுரிமை கிடைக்கிறது. மருத்துவம் போன்ற உயர்கல்வியில் அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு இட ஒதுக்கீடு இருக்கிறது. இருப்பினும், மக்கள் தனியார் ஆங்கிலப் பள்ளிகளை நாடி தங்களது குழந்தைகளைச் சேர்க்கின்றனர்.
இந்த நிலை மாற வேண்டும். அரசுப் பள்ளிகளில் சேர்க்கை அதிகரிக்க வேண்டும் என்பதை மனதில் கொண்டு, அர்ப்பணிப்பு உணர்வோடு நான் பணிபுரிந்துவருகிறேன்.
இந்தச் சூழ்நிலையில், நான் பலஆண்டுகள் பணிபுரிந்த பழையவலம் கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் பெருமளவு மாணவர் சேர்க்கை குறைந்ததை அறிந்து மன வேதனை அடைந்தேன். இதற்காக, வித்தியாசமான முயற்சியில் ஈடுபட்டேன்.
பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவர்களையும் ஒருசேர குழுப் புகைப்படமாக எடுத்து, அவர்களை மையப்படுத்தியே 600 காலண்டர்களை எனது சொந்த செலவில் அச்சிட்டேன். பழையவலம் கிராமத்தில் உள்ள 425 வீடுகளுக்கும் வீடு, வீடாகச் சென்று நானும், பள்ளியின் சக ஆசிரியர்களும் வழங்கினோம். மீதமுள்ள காலண்டர்களை அரசு அலுவலகங்கள், கல்வி அலுவலகங்கள், பிற பள்ளிகள், முக்கிய பிரமுகர்களுக்கு வழங்கினோம்''என்றார்.