பாடல்கள் இல்லாத கதை
போலீஸ் அதிகாரியாக தர்ஷன் நடிக்கும் படத்துக்கு 'சரண்டர்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
போலீஸ் அதிகாரியாக தர்ஷன் நடிக்கும் படத்துக்கு 'சரண்டர்' என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில் பாடினி குமார், லால், சுஜித் சங்கர், முனிஷ்காந்த், மன்சூர் அலிகான் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். விகாஸ் பதீசா இசை அமைத்துள்ளார்.
அப்பீட் பிக்சர் சார்பாக விஆர்வி குமார் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு மெய்யேந்திரன் ஒளிப்பதிவு செய்துள்ளார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தை இயக்கியுள்ளார் கவுதமன் கணபதி. இவர் இயக்குநர் அறிவழகனிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர். படம் குறித்து அவர் பேசும் போது... ''க்ரைம் டிராமா கதையைக் கொண்ட படம் இது. தேர்தலுக்கு 4 நாட்கள் இருக்கும் போது நடப்பது போல இதன் கதை அமைக்கப்பட்டுள்ளது.
முக்கியமான பொருள் ஒன்று தொலைந்து விடுகிறது. அதை போலீஸ் அதிகாரி தர்ஷன் கண்டுபிடிக்க முயற்சிக்கிறார். மற்றொரு பக்கம் சுஜித் சங்கர் தலைமையிலான 'கேங்ஸ்டர்ஸ்' செயல்பட்டு வருகின்றனர்.
இவர்களும் போலீஸ் அதிகாரியும் சந்திக்க வேண்டி வருகிறது. பிறகு என்ன நடக்கிறது என்று கதை செல்லும். நல்லவனுக்கு நல்லது நடக்கும் என்பது தான் மெசேஜ். படத்துக்காகக் கலை இயக்குநர் மனோஜ், போலீஸ் ஸ்டேஷன் செட் ஒன்றை அமைத்தார்.
செட் என்று சொல்லவே முடியாதபடி அது இருக்கும். படத்தில் பாடல்கள் இல்லை. கல்லூரி மாணவர்கள், ஆட்டோ டிரைவர்கள், மருத்துவர்கள், இல்லத்தரசிகள் என சுமார் 50 பேருக்கு படத்தைத் திரையிட்டுக் காண்பித்தோம். அவர்கள் அனைவருமே பாராட்டிச் சென்றனர். இது எங்களுக்கு நம்பிக்கையை அளித்திருக்கிறது. விரைவில் திரைக்கு வருகிறது படம்'' என்றார்.