முகப்பு
ஞாயிறு கொண்டாட்டம்

வழிகாட்டி

'ஆள் பாதி; ஆடை பாதி' என்பார்கள். சீருடைப் பணியில் இருப்போர் அணியும் ஆடை கம்பீரத்தை அளிப்பதோடு, தன்னம்பிக்கையையும் துணிச்சலையும் விதைக்கும்.

Updated On : 15 பிப்ரவரி, 2026 at 10:40 AM
பகிர்:

தமிழானவன்

'ஆள் பாதி; ஆடை பாதி' என்பார்கள். சீருடைப் பணியில் இருப்போர் அணியும் ஆடை கம்பீரத்தை அளிப்பதோடு, தன்னம்பிக்கையையும் துணிச்சலையும் விதைக்கும். இருப்பினும், அதிக நேரப் பணி போன்றவையெல்லாம் அவர்கள் சந்திக்கும் சவால்கள் சொல்லி மாளாது. அந்தச் சூழ்நிலையெல்லாம் தாக்குப் பிடிக்கும் மனநிலைக்கு வருவோரை நல்வழிப்படுத்த, இலவசமாக உடல்தகுதிப் பெறுமளவுக்குத் தயார்படுத்தி வருகிறார் முன்னாள் ராணுவ வீரர் மு.பெரியசாமி.

புதுச்சேரி கோரிமேடு அருகேயுள்ள ராமராஜா நகரில் வசிக்கும் இவர், சின்னசேலம் அருகேயுள்ள பெரியேரி கிராமத்தைப் பூர்விகமாகக் கொண்டவர். நாற்பத்து நான்கு வயதாகிறது. ஜிப்மர் மருத்துவமனையில் செவிலியராகப் பணியாற்றும் இவருக்கு மனைவி, ஒரு மகள், ஒரு மகன் உள்ளனர்.

Advertisement

அவரிடம் பேசியபோது:

'ராணுவத்தில் சிப்பாயாகப் பணியில் சேர்ந்து 17 ஆண்டுகள் 1 மாதம் பணியாற்றி ஓய்வு பெற்றேன்.

என்னுடைய ஓய்வூதியத்தில் இருந்து ஒரு பகுதியை ஒதுக்குகிறேன். அதில் இருந்து புதுச்சேரி கோரிமேடு காவலர் பயிற்சி மைதானத்தில் காவல்படை, கப்பற்படை, விமானப்படைகளில் இளையத் தலைமுறையினர் சேர வழிகாட்டுவதற்கான காவலர் உடல் தகுதித் தேர்வுக்கான எல்லா வகையான பயிற்சிகளையும் அளித்து வருகிறேன்.

நானும் ஏழை விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவன். அதனால் வேலைத் தேடும் இளைஞர்களின் கஷ்டங்கள் எனக்குப் புரியும். அதனால் இந்தப் பணியை இலவசமாக அளித்துவருகிறேன். பல்வேறு தொண்டு நிறுவனங்களும் இப்போது எனக்கு உதவி செய்கின்றன. சீருடைப் பணியில் சேரும் இளைஞர்கள் நாட்டுக்குச் சேவை செய்பவர்களாக மாறுகின்றனர். அதில் ஒரு திருப்தி கிடைக்கிறது.

வாரம் முழுவதும் ஓட்டப் பந்தயம், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட பயிற்சிகளைத் தொடர்ந்து அளிப்பேன். வாரத்தில் ஒருநாள் உடல்தகுதிக்கான தேர்வைத் தொடர்ந்து நடத்தி வருகிறேன். மாதிரித் தேர்வு என்பது சீருடைப் பணிக்காக நடத்தப்படும் உண்மையான தேர்வைப் போல் இருக்கும். அவர்களைத் தயார்படுத்தும். இலக்கை நோக்கி அழைத்துச் செல்லும்.

ஊக்கப்படுத்தும் வகுப்பை என் குரு ஆர். ஸ்ரீநிவாஸராகவன் எடுப்பார். அவருடைய வகுப்புக்குப் பிறகு இந்த இளைஞர்கள் இலக்கை அடையப் போராடிக் கொண்டே இருப்பார்கள். உடல் தகுதித் தேர்வு முடிந்ததும் இளைஞர்கள் வழித்தடம் மாறாமல் இருக்கும் வகையில் தொடர்பில் இருக்கிறோம்.

தற்போது புதுச்சேரி காவல்துறையில் சப்-இன்ஸ்பெக்டர், காவலர் பணிக்கு உடல் தகுதித் தேர்வு நடைபெற்று முடிந்துள்ளது. இதில் என்னிடம் பயிற்சி பெற்றவர்களில் உதவி ஆய்வாளருக்கான உடல் தகுதித் தேர்வில் 23 பேரும், காவலர் பணிக்கு 52 பேரும் என 75 பேர் உடல் தகுதித் தேர்வுக்குத் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் 39 பேர் பெண்கள். இதில் நானும் உதவி ஆய்வாளருக்கான உடல் தகுதித் தேர்வுக்குத் தேர்ச்சி பெற்றுள்ளேன்'' என்கிறார் ராணுவச் சீருடையில் இருந்து காவல் சீருடைக்கு மாறத் தயாராகிவிட்ட பெரியசாமி.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments