திரைத்துறைக்கு வந்து 50 ஆண்டுகள் கடந்தது மற்றும் பிறந்தநாள் விழா ஆகிய இரு நிகழ்வுகளை முன்னிட்டு செய்தியாளர்களைச் சந்தித்தார் இயக்குநர் மற்றும் நடிகர் கே. பாக்யராஜ்.
இந்த நிகழ்வில் பேசிய அவர், '10 - 20 வருடம் தான் என நினைத்தேன், ஆனால் 50 வருடங்களை கடந்துள்ளதை நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. இந்த வளர்ச்சிக்குக் காரணம் பலரும் என்னை நம்பியது தான்.
சென்னை வந்து நிறைய நாள் போராடிய பின் எங்கள் இயக்குநரின் முதல் படம் 'பதினாறு வயதினிலே'யில் பணிபுரிய வாய்ப்புக் கிடைத்தது. கமல் சாரை சந்தித்துப் பேசிக்கொண்டிருந்த போது கூட அந்தப் படம் வெளியாகி, இரண்டு வருடங்களுக்குள் எல்லோருக்கும் பெரிய வளர்ச்சி எனக் கூறினார்.
நான் வாய்ப்புத் தேடும் சமயத்தில் யாராவது என் பெயரைக் கேட்டால் நிஜ பெயரை சொல்லாமல், வித்தியாசமாக இருக்க வேண்டும் என 'கோவை ராஜா' என காலரை தூக்கிவிட்டுச் சொல்லுவேன்.
'பதினாறு வயதினிலே'யில் என் பெயரைப் போடும் போதுதான் கே. பாக்யராஜ் எனப் போடச் சொன்னேன். அதைப் பார்த்த எங்கள் இயக்குநர், 'யாருயா இவன்?' என அதிர்ச்சியானார். அதன்பின் நான்தான் அது எனக் கூறி புரிய வைத்தார்கள்.
அந்தப் பெயர் இன்றுவரை எனக்கு மரியாதையைப் பெற்றுத் தந்திருக்கிறது. ஆனால், அவர் இப்போது வரை 'ராஜன்' என்று தான் கூப்பிடுவார். 'கிழக்கே போகும் ரயில்' சமயத்தில் கூட 'எனக்குப் பிறகு பெரிய ஆளாய்வருவான்' எனக் கூறினார்.'
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.