திருவாரூர் தியாகராஜர் கோயிலில் 63 நாயன்மார்கள் சிலைகள் இருந்தன. அவற்றில் 2 சிலைகளை நாகராஜநம்பி என்பவர் அபகரித்துச் சென்று விற்றுவிட்டார். கோயில் பணியாளர்கள் இச்செய்தியை மன்னரிடம் தெரிவிக்க எண்ணினர். ஆனால், நாகராஜ நம்பிக்குப் பயந்து சொல்லாமல் விட்டுவிட்டனர்.
சிலைகளை வாங்கியவன் அவற்றைக் கொல்லன் உலைக்களத்திற்கு அனுப்பினான். இதையறிந்த புலவர் ஒருவர், சிலைகளைக் கொல்லன் சிதைத்துவிடும் முன்னர் இச்செய்தியை எந்த விதத்திலாவது மன்னன் கிருஷ்ணதேவராயரிடம் தெரிவித்துவிட வேண்டும் என முடிவு
செய்தார்.
புலவர், பேசும் திறனுடைய ஒரு பஞ்சவர்ணக் கிளியை வளர்த்து வந்தார். அக்கிளியைப் பயன்படுத்தி, செய்தியை மன்னனுக்குத் தெரிவிக்க எண்ணினார். சிலைகள் களவாடப்பட்ட செய்தியை ஒரு பாடலாக இயற்றி, அப்பாடலைப் பாடுவதற்கு கிளியைப் பழக்கினார். கிளி அப்பாடலை முழுவதுமாகக் கற்றுக்கொண்ட பின், புலவர் அந்தப் பஞ்சவர்ணக் கிளியைக் கூண்டில் வைத்து கோயில் மண்டபத்தில் கட்டிவிட்டார்.
மாத வழிபாட்டிற்காக மன்னர் கோயிலுக்குச் சென்றார். அங்கு கூண்டில் அடைபட்டிருந்த பஞ்சவர்ணக் கிளியைக் கண்டு அதனருகில் சென்றார். அப்போது கிளி அவரைப் பார்த்து,
""முன்னால் அறுபத்துமூவர் இருந்தா ரவரில்
இன்னாள் இரண்டு பேரேகினர் - கன்னான்
நறுக்குகின்றான் விற்றுவிட்ட நாகராச நம்பி
இருக்கின்றான் கிருட்டிண ராயர்''
என்று பாடியது. கிளியின் பாடலிலிருந்து செய்தியறிந்த மன்னன், சிலைகள் களவாடப்பட்டதைப் பற்றி விசாரித்து, உண்மையைக் கண்டறிந்து சிலைகளை மீட்டான். இச்சுவையான நிகழ்வு "திருவாரூர் திருக்கோயில்' என்ற நூலில் "தமிழ் நாவலர் சரிதையும் பெருந்தொகை கூறும் சுவையான கதையும்' என்ற தலைப்பில் பதிவாகியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.