முகப்பு
தமிழ்மணி

தமிழ்ச் செல்வங்கள்:  மண் - 3

நீர்ப்பூ நிலப்பூ வேறுபாடு ஒன்று! நீர்ப்பூ தண்டில் இருந்து வந்தது; தண் + து = தண்டு. தாமரைத் தண்டு; குவளைத் தண்டு. மண்ணில் செடியாயது, கொடியாயது. செடி, மல்லிகை! கொடி முல்லை!

பகிர்:

நீர்ப்பூ நிலப்பூ வேறுபாடு ஒன்று! நீர்ப்பூ தண்டில் இருந்து வந்தது; தண் + து = தண்டு. தாமரைத் தண்டு; குவளைத் தண்டு. மண்ணில் செடியாயது, கொடியாயது. செடி, மல்லிகை! கொடி முல்லை!

நீரில் இருந்து நிலத்தில் ஏறிய பயன், "மலர்மிசை ஏகி'னானுக்கு ஆயது! மலராகவே கண்ட பேருள்ளப் பெருந்தகை தாயுமானவரின், ""பனிமலர் எடுக்க மனமும் நண்ணேன்; என்னுளம் நிற்றி நீ'' என மலரை வழிபாட்டுக்காகவும் பறிக்கக்கூடாது என்னும் பேரருளாள நிலையை அனைவரும் எட்ட முடியவில்லை! முடியும் என்றால், முடியும்! முடியாது என்று எண்ணிவிட்டால், முடியவே முடியாது! முடியாமையே பெருந் தொடர்கதை.

"மணம்' விரும்புதல் இயற்கை; முற்காலத்தில் மகளிர் மட்டுமல்லர். ஆடவரும் பூச்சூடினர். அப்பூவை எண்ணினால் புரியும்! அவை மணத்திற்கே அமைந்தவை! உணவுக்கு அமிழ்தாக அமைந்த இலையை, காயை, கனியை இனப்பெருக்க வித்தை அவை தாரா! ஆதலால், வழிபாட்டுக்கும் கூந்தல் நறுமைக்கும் மட்டும் பயன்படுவன.

Advertisement

உணவுப் பயன்தரும் பூவோ, மலர்மிசை யோனுக்கோ, மகளிர், ஆடவர், குழந்தையர்க்கோ பயன்படுத்தப்படுவதில்லை! அவை ஊண்பயன் செய்து உயிர் வளம் ஊட்டுவன! என்ன அரிய கட்டமைவு!

பூவிலே ஆண் பூ; பெண் பூ! அப்படியே ஆண் மரம், பெண் மரம்! உயிர்கள் ஓரறிவு முதல் ஏறிய ஆறாம் அறிவுவரை ஆண், பெண்!

இயற்கைப் பால் உறவு, இப்பால் - அப்பால் இரண்டையும் இணைக்கும் பால் + அம் = பாலம்! பால் இல்லாமல் பாலம் உண்டா? பாலுணர்வு - இயற்கை - மரபு காக்கும் - இயற்கை இறைமை - இயங்கியல். அதனால், மண உரிமைத் தகுதியை "அரும்பு' (மீசை) காட்டியது அவனுக்கு! அவளுக்குப் பருவமடைந்தாள் என்பதன் இயற்கை வெளிப்பாடாகப் "பூப்பு' ஏற்பட்டது. அரும்பும் பூவும் (அவனும் அவளும்) முகை திரண்டு மொக்காகி விரிந்து பூவாக மணம் பரப்ப ஒருவன் - ஒருத்தி என்னும் இருமையற்று "ஒருவர்' ஆயினர். அவர்கள் மணந்துவாழ மணமாலை பூண்டனர்; மாற்றுமாலை மாற்றினர்; நின் நெஞ்சும் என் நெஞ்சும் செம்புலப் பெயர் நீராய் - நீரும் நிலமும் அல்லது விண்ணும் மண்ணும் கலந்த கலப்பாய், ஊனும் உயிருமாய் ஒன்றினோம் என உறவறிய - ஊரறிய மணவிழாக் கொண்டனர். "மலரினும் மெல்லிதாம்'' களவுக் கற்பறம் ஈதெனச் சான்றோர் வகுத்தனர்.

உடலை - உடல் உறுப்பை மலராகக் காண நம் முந்தையோர் மறந்திலர். எப்படி? முகம், தாமரை; கண், தாமரைக் கண், குவளைக் கண்; இதழ், முள் முருக்கம்பூ; பல், முல்லைப்பூ; மூக்கு, எள்பூ; காது, வள்ளைப் பூ; இதயம் அல்லது நெஞ்சம், தாமரை; கை, ஐவிரலிப்பூ அல்லது காந்தாள் பூ; அடியோ, தாமரை! அடி தாமரை; மூச்சகம் தாமரை; முகம் தாமரை! தாமரைச் சிறப்பே, திருமகள் உறைவு; தாமரைச் சிறப்பே, கலைமகள் உறைவு! முன்னது செந்தாமரை; பின்னது வெண்டாமரை? ஏன்? ""செல்வம், என்பது சிந்தையின் நிறைவு.''

கலையில் உயர் கலை, களங்கம், கறை இலாமை!

வெள்ளைக் கில்லை, கள்ளச் சிந்தை!

தொடர்வோம்...

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments