மக்கள் கணக்கெடுப்பு பற்றிய குறிப்புகள் ரிக் வேதத்திலும் அர்த்த சாஸ்திரத்திலும் இருக்கின்றன என்றும் வரிவிதிப்பிற்காகப் பழைய கிரேக்கத்திலும் இந்தியாவில் முகமதியர் ஆட்சிக் காலத்திலும் கணக்கெடுப்புகள் நடத்தப்பட்டுள்ளன என்றும் கணக்கெடுப்பின் வரலாறு சொல்கிறது.
அப்படித் தேடிப் பார்த்தால் தமிழே ஒரு கணக்கெடுப்பாக இருக்கிறது. தமிழ் எழுத்துகள் நெடுங்கணக்கு என்றும் இலக்கியங்கள் பதினெண் மேல்கணக்கு, பதினெண் கீழ்க்கணக்கு என்றும் கணக்கெடுத்து வகைப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, அகநானூறு, புறநானூறு, நாலடியார், பன்னிரு திருமுறை, நாலாயிர திவ்வியப் பிரபந்தம் எல்லாம் எண்ணிக்கைக் கணக்கிலேயே இருக்கின்றன.
தொல்காப்பியத்தில் கூறப்பட்டுள்ள முதல் பொருளில் ஐந்திணையும் அவற்றிற்குரிய காடு, மலை, வயல், கடல், பாலை ஆகிய இடங்களும் அவற்றிற்கு உரிய பெரும் பொழுதுகளும் சிறு பொழுதுகளும் கணக்கெடுப்புத் தகவல்களாகவே இருக்கின்றன.
கணக்கெடுப்பிற்கான வினாப்பட்டியல் ஒன்றைத் தொல்காப்பியக் கருப்பொருள் பற்றிய நூற்பாவில் காண முடிகிறது. அதன்படி ஒவ்வொரு நிலத்திலும் வாழும் மக்கள், வழிபடும் தெய்வம், உணவு, விலங்குகள், இருக்கும் மரம், செடி, கொடிகள், பறவைகள், மக்கள் பயன்படுத்தும் இசைக்கருவிகள், அவர்களின் தொழில்கள் ஆகியவை பற்றிய கணக்கெடுப்பாகக் கருப்பொருளைப் பார்க்க முடிகிறது. மேலும் அவர்களின் வாழ்க்கை முறையின் கணக்கெடுப்பாக உரிப்பொருள் உள்ளது. ஆனால் மக்களின் எண்ணிக்கை பற்றிய குறிப்புகள் தரப்படவில்லை.
மக்கள்தொகை கணக்கெடுப்பில் மக்களின் எண்ணிக்கை மட்டுமின்றி விலங்குகள், வாகனங்கள் போன்றவற்றின் விவரங்களும் தொகுக்கப்பட்டு வருகின்றன. அப்படியானால் தமிழில் தொல்காப்பியர் காலத்திலேயே ஒரு கணக்கெடுப்பு நடந்திருப்பதாகவும் கருதலாம்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.