உத்யோகம் தரும் தலம்! - ஸ்ரீரங்கம் காட்டழகிய சிங்கர்
தான் பிறவி எடுத்ததன் பலனை உலகு அடைய வேண்டும் என்பதற்காக ராமாயணத்தை எழுதி முடித்தார் கம்பர். அதனை அரங்கேற்ற வேண்டுமே! ராமாயண நாயகன் ராமனின் குலமே வழிபட்ட திருவரங்கம் பெருமாள், கம்பரின் நினைவுக்கு வந்தா
தான் பிறவி எடுத்ததன் பலனை உலகு அடைய வேண்டும் என்பதற்காக ராமாயணத்தை எழுதி முடித்தார் கம்பர். அதனை அரங்கேற்ற வேண்டுமே! ராமாயண நாயகன் ராமனின் குலமே வழிபட்ட திருவரங்கம் பெருமாள், கம்பரின் நினைவுக்கு வந்தார். பெரிய கோயிலுக்குச் சென்றார். தன் கவி அரங்கேற்றத்தை உரியவர்களிடம் சொன்னார். ஆனாலும் பல்வேறு தடங்கல்கள். அவருக்கு ஒரு கட்டளை கிடைத்தது. "நம் சடகோபனைப் பாடுக' என்று. உடனே சடகோபனாகிய நம்மாழ்வாரை போற்றி சடகோபர் அந்தாதி பாடினார்.
அடுத்து மீண்டும் ராமாயண அரங்கேற்றம். மண்டபத்தின் முன் அமர்ந்து கவி சொல்லத் தொடங்கினார். இவர் படிப்பதைக் கேட்டு, கோயிலில் சற்று மேடான இடத்தில் இருந்து சிங்கப் பெருமாளின் இடிச் சிரிப்பு வெளிப்பட்டது. அனைவரும் கேட்டு பக்திப் பரவசத்தில் ஆழ்ந்தனர். கம்பர் நினைத்தார்... நாம் சிங்கப் பெருமாளையும் பாட வேண்டும் என்று. உடனே கம்ப ராமாயணத்தில் சிங்கப் பெருமாளின் சிறப்பு உள்ளே புகுந்தது! இரணியன் வதைப் படலமாக மூல நூலான வால்மீகியில் இல்லாத ஒன்றை கம்பர் தன் கவியில் உள்ளே நுழைத்தார், அதுவும் இந்த மேட்டழகிய சிங்கருக்காக! ஸ்ரீரங்கம் கோயிலில் அருள் பாலிக்கும் மேட்டழகிய சிங்கரைப் போல் இன்னொரு சிங்கப் பெருமாளும் ஸ்ரீரங்கத்தில் அருள்பாலிக்கிறார். அவர் காட்டழகிய சிங்கர்.
காட்டுக்குள் உதித்த பெருமாள்!
பல நூற்றாண்டுகளுக்கு முன்னர்... இந்த இடம் அடர்ந்த காட்டுப் பகுதியாக இருந்தது. திருவானைக்காவில் இருந்து, திருவரங்கம் வரும் வழி எங்கும் யானைகள் கூட்டம் கூட்டமாக வந்து, விவசாயத்தைப் பாழ்படுத்தி, மக்களுக்கும் பெரும் பயத்தைத் தோற்றுவித்தன.
யானைகளின் தொல்லையில் இருந்து மக்களைப் பாதுகாக்க, பெரியாழ்வாரின் சீடராகத் திகழ்ந்த நெடுமாறன் என்ற சீர்ப் பெயர் பெற்ற வல்லபதேவ பாண்டியன், லக்ஷ்மி நரஸிம்மப் பெருமாளை இங்கே எழுந்தருளச் செய்து, கோயிலும் கட்டினான். அப்படி உருவானதே இந்த காட்டழகிய சிங்கப்பெருமாள் கோயில். இதன் பின்னர் யானைகளின் தொந்தரவு குறைந்தது. காட்டுக்குள் குடியிருந்ததால் பெருமாள் காட்டழகிய சிங்கரானார்.
கிட்டத்தட்ட பதினைந்து நூற்றாண்டுகள் பழமையான ஆலயமாகத் திகழ்கிறது. இருப்பினும், கி.பி.1297ல், வீரபாண்டியனான ஜடாவர்மன் சுந்தரபாண்டியன், இந்தக் கோயிலை எடுத்து புனர்நிர்மாணம் செய்து, கோயில் அழகுறத் திகழ வழி ஏற்படுத்தினான். இந்த மன்னனே, திருவரங்கம் சித்திரை வீதியை அமைத்து பொலிவுபடுத்தியவன். இவனுக்கு கலியுகராமன் என்றும் பெயர் உண்டு. இவன் பெயரிலேயே வேதியர் குடியிருப்பான, கலியுகராமன் சதுர்வேதிமங்கலம் இங்கே அமையப் பெற்றது.
திருவரங்கப் பெருநகரில் உபய காவேரி மத்தியில் துயிலும் அரங்கனின் திருக்கோயில் எவ்வளவு மகிமையுடன் திகழ்கிறதோ, அதற்குச் சற்றும் குறைவு இல்லாமல் திகழ்கிறது, அதே உபய காவேரி மத்தியில் ஸ்ரீமந்நாராயண அவதாரமான ஸ்ரீலக்ஷ்மி நரஸிம்மர் அமர்ந்த கோலத்தில் காட்சி தரும் காட்டழகிய சிங்கப் பெருமாள் கோயில். கோயில் ஒளிப்படங்கள்:
திருவரங்கம் பெரிய கோயிலில் தாயார் சந்நிதிக்கு அருகில் உள்ளது மேட்டழகிய சிங்கர் கோயில். திருவரங்கம் கோயிலுக்கு வரும் பக்தர்கள் இவரை தரிசிக்க வாய்ப்பு உண்டு. ஆனால், காட்டழகிய சிங்கர், பெரிய கோயிலில் இருந்து சுமார் ஒன்றரை கி.மீ தொலைவில் உள்ளதால், பலரும் அறியாத நிலை உள்ளது.
ஸ்ரீரங்கம் கோயிலின் ஆயிரம் கால் மண்டபம் இருக்கும் கிழக்கு ராஜ கோபுரத்தின் வழியாக வெளியே வந்து, கீழ அடையவளஞ்சான் தெரு வழியாக நேர் கிழக்கே செல்லும் சிறு சாலையில் சுமார் ஒரு கி.மீ. தொலைவு சென்றால் இந்தக் கோயிலை அடையலாம். கோயில் மேற்கு நோக்கி அமைந்துள்ளது. உள்ளே நுழையும்போதே இடப்புறத்தில் அழகான பெரிய மண்டபம் ஒன்றைக் காண்கிறோம். திருவரங்கம் நம்பெருமாள் விஜயதசமி அன்று பல்லக்கில் எழுந்தருளி இந்த மண்டபத்துக்கு வருகிறார். இங்கே நம்பெருமாளுக்கு திருவாராதனம், அமுதுபடிகள் ஆனபிறகு தங்கக் குதிரையில் ஏறி பார்வேட்டைக்குக் கிளம்புகிறார். இந்தக் கோயிலில் உள்ள வன்னி மரத்துக்கு திருவாராதனம் ஆனபிறகு, வேட்டை உற்ஸவம் தொடங்குகிறது. அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த மண்டபம் இது.
காட்டழகிய சிங்கர் கோயிலின் உள்ளே செல்கிறோம். பலிபீடத்தைத் தாண்டி, கோயிலின் முன் மண்டபத்துக்குள் செல்கிறோம். மேலே பார்த்தால், அழகான திருவுருவப் படங்கள். திருச்சுற்றில் வலம் வருகிறோம். முதலில் பரிவார தேவதைகளாக விஷ்வக்சேனரின் படைத்தலைவரான கஜானனர் தரிசனம். இதில் யோகஅனந்தர், யோக நரஸிம்மர் ஆகியோருடைய தரிசனமும் கிட்டுகிறது. காயத்ரி மண்டபத்தில் யோக நாராயணர், யோக வராஹர் ஆகியோரின் தரிசனம் கிடைக்கிறது.
பிராகார வலத்தில், சந்நிதியின் பின்புறம் வரிசையாக ஒன்பது துளசி மாடங்கள் உள்ளன. வலப்புறத்தில் வன்னிமரம் மற்றும் நாகப் பிரதிஷ்டையோடு கூடிய மரங்களையும் காண்கிறோம்.
உயர்ந்த விமானத்தோடு கூடிய கர்ப்பக்ருஹம். முகமண்டபம், மஹாமண்டபங்கள் பொலிவோடு திகழ்கின்றன. எதிரே கருடனுக்கு சந்நிதி உள்ளது. கர்ப்பக்ருஹம், அந்தராளம், முகமண்டபம், மஹாமண்டபம், கருடன் சந்நிதி ஆகியவை ஒன்றாக சீராக அமைந்துள்ளன. இன்னும் பல மண்டபங்கள், உத்தமநம்பி வம்சத்தில் உதித்த சக்ரராயராலும்,நாயக்க மன்னர்களாலும் அமைக்கப்பட்டுள்ளன.
மண்டபத்தின் சுவர்களில் உள்ள ஓவியங்கள் நம் உள்ளத்தைக் கொள்ளை கொள்கின்றன. பிளந்த தூணிலிருந்து நரஸிம்மர் வெளிப்படும் தோற்றம், ஹிரண்யகசிபுவுடன் போர் செய்யும் தோற்றம், உக்ர நரஸிம்மராக, ஹிரண்யகசிபுவை தன் மடியில் கிடத்தி வதம் செய்யும் கோலம், பிரஹலாதன் நரஸிம்மரிடம் வேண்டிக் கொண்டு சாந்தப் படுத்தும் தோற்றம், லக்ஷ்மி நரஸிம்மர், யோக நரஸிம்மர், அனந்த நரஸிம்மர் என்று பல்வேறு வடிவங்களில் நரஸிம்மரின் தரிசனம் இங்கே நமக்குக் கிடைக்கிறது.
குலசேகரன் திருச்சுற்றான துரை பிரதட்சிணத்தில் உள்ள தூண்களில் தசாவதார உருவங்கள் அழகுற அமைந்துள்ளன. அதிலும் ஸ்ரீநரஸிம்மரின் உருவம் அவ்வளவு அழகு, தெளிவு.
சுற்று வலம் வந்து, சந்நிதிக்குள் செல்கிறோம். பழமையின் கம்பீரம் உள் மண்டபத்தில் தெரிகிறது. சந்நிதி கருவறையில், மஹாலக்ஷ்மியை மடியில் இருத்தி, ஆலிங்கனம் செய்த கோலத்தில் லக்ஷ்மி நரஸிம்மராக காட்டழகிய சிங்கப் பெருமானை தரிசிக்கிறோம். மிகப் பெரிய அளவில் சுமார் எட்டு அடி உயர திருமேனி. திருத்தமான அமைப்பு. வெள்ளியில் அமைந்த பற்கள் அமைப்பு நரஸிம்மப் பெருமானின் தத்ரூப தரிசனத்தை மனக்கண்முன் நிறுத்துகிறது.
விசேஷங்கள்:
இந்தக் கோயிலில் மாதந்தோறும் ஸ்வாதி நட்சத்திரத்தன்று விசேஷத் திருமஞ்சனம் நடக்கிறது. அதுபோல், பிரதோஷ தினங்களிலும் சிறப்பு வழிபாடுகள் உண்டு. சிங்கப்பெருமானின் வருஷத் திருநட்சத்திரம் ஆனி மாதத்திலும், ஜ்யேஷ்டாபிஷேகம் ஆடி மாதத்திலும் நடைபெறுகிறது. இந்தக் கோயிலில் உற்ஸவ மூர்த்தி அண்மையில்தான் பிரதிஷ்டை செய்யப்பட்டார்.
இந்தக் கோயிலுக்கு இன்னொரு சிறப்பம்சமும் உண்டு. மகான் ஸ்ரீராமானுஜருக்குப் பின்னர் வந்த பிள்ளைலோகாசார்யர் ஸ்வாமி, ஸ்ரீவசனபூஷணம் என்ற அற்புத கிரந்தத்தை அருளிச் செய்தார். அப்படி அவர் அருளிச் செய்து, அதற்கான ரகசிய அர்த்தங்களையும் தம் சீடர்களுக்கு உபதேசித்த இடம் இந்தக் கோயிலே. ஆகவே, வைணவர்களுக்கு மிகவும் முக்கியமான இடமாகத் திகழ்கிறது இந்தக் கோயில்.
பிரார்த்தனைத் தலம்
சுவாதி நட்சத்திரம் சிங்கப் பெருமாளின் ஜென்ம நட்சத்திரம். அன்று பெருமாளுக்கு சிறப்பாக திருமஞ்சனம் செய்யப்படுகிறது. இந்த நாளில் வழிபடுவோர்க்கு கேட்ட வரம் கிடைக்கும், தீராத நோய் தீரும். மேலும் பக்தர்களின் வேண்டுகோளுக்கு ஏற்ப, அவர்கள் குறிப்பிடும் நாள்களிலும் பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்யப்படுகிறது.
பிரதோஷ நேரத்தில் இவரை வழிபட்டால் குழந்தை வரம் நிச்சயம் என்கிறார்கள்.
நினைத்த கோரிக்கைகளை நிறைவேற்றிவைக்கும் நரசிம்மப் பெருமாளுக்கு மிகவும் பிடித்தமான பானக நைவேத்தியம் இங்கே சிறப்பு. வெல்லம், சுக்கு, ஏலக்காய் முதலியவற்றை பெருமாள் சந்நிதியில் நைவேத்தியத்துக்குக் கொடுத்தால், சந்நிதியில் அர்ச்சகர்கள் பெருமாளுக்காக எடுத்து வைத்த தீர்த்தத்தில் பானகம் கரைத்து அதை பெருமாளுக்கு நிவேதனம் செய்து தருகிறார்கள். அந்த பானக பிரசாதத்தை பக்தர்களுக்கு வழங்கினால், பிரார்த்தனை நிறைவேறுவது கண்கூடு.
பிரதோஷ காலங்களில் வழிபாடு செய்தால் உத்யோகம், மகப்பேறு கிட்டும். திருமணத் தடை நீங்க வைக்கும் வரப் பிரசாதியாகவும் திகழ்கிறார் ஸ்ரீரங்கம் காட்டழகிய சிங்கப் பெருமாள்.