ராகுல் டிராவிட், மிதாலி ராஜ், ரோஜர் பின்னி ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது!
பிசிசிஐ வழங்கும் நாமன் விருது விழா பற்றி...
ராகுல் டிராவிட், மிதாலி ராஜ், ரோஜர் பின்னி ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கி பிசிசிஐ கௌரவிக்கவுள்ளது.
பிசிசிஐ நடத்தும் கிரிக்கெட் வீரர்களுக்கான நாமன் விருதுகள் வழங்கும் விழாவிற்கான விருது பெறுபவர்கள் பட்டியல் இன்று வெளியாகியுள்ளது.
இதில் ராகுல் டிராவிட், மிதால் ராஜ், ரோஜர் பின்னி ஆகியோருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்படவுள்ளது.
நாமன் விருது விழா 2026-ன் சிறப்பம்சமாக சமீபத்தில் ஐசிசி கிரிக்கெட் கோப்பைகளை வென்ற இந்தியாவின் ஐந்து அணிகளைப் பாராட்டி கௌரவிக்கும் வரலாற்று சிறப்புமிக்க விழாவாக இது நடைபெறும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.
கௌதம் கம்பீர் பயிற்சியின் கீழ் விளையாடிய இந்திய அணி கடந்த வாரம் டி20 உலகக் கோப்பையை ஏந்தி 3 முறை வெற்றி கோப்பையைப் பெற்ற அணி என்ற சிறப்பைப் பெற்றது. அதேபோல, கடந்தாண்டு பெண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை (2025) வென்ற இந்தியப் பெண்கள் அணி, ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை 2025-ஐ வென்ற ஆண்கள் அணி, 19 வயதுக்குள்பட்ட உலகக் கோப்பை 2026-ஐ வென்ற ஆண்கள் அணி மற்றும் 19 வயதுக்குள்பட்ட டி20 உலகக் கோப்பை 2025-ஐ வென்ற பெண்கள் அணி ஆகியோர் இந்த விழாவில் கௌரவிக்கப்படவுள்ளனர்.
மேலும், பல தனிப்பட்ட வீரர்களுக்கும் விருது வழங்கி கௌரவிக்கவுள்ளதாக பிசிசிஐ தெரிவித்திருந்தது.
அதில், இந்திய டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணி கேப்டன் (2024-25 போட்டிகளுக்காக) சுப்மன் கில் ஆண்கள் பிரிவில் சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரராக பாலி உம்ரிகர் விருதைப் பெறுகிறார். அதேபோல, ஸ்மிருதி மந்தனா பெண்கள் பிரிவில் சிறந்த சர்வதேச கிரிக்கெட் வீரர் விருதைத் தொடர்ந்து 5-வது முறையாகப் பெறுகிறார்.
முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவன்களான ரோஜர் பின்னி, ராகுல் டிராவிட், முன்னாள் இந்தியப் பெண்கள் அணி கேப்டன் மிதாலி ராஜ் ஆகியோர் சி.கே.நாயுடு பெயரில் வழங்கப்படும் வாழ்நாள் சாதனையாளர் விருதைப் பெறுகின்றனர்.
ரோஜர் பின்னி, 1983 உலகக் கோப்பை வென்ற இந்திய அணியின் அதிக விக்கெட் வீழ்த்திய வீரராவார். பின்னர் தேர்வாளர், பயிற்சியாளராக இருந்த அவர் பிசிசிஐ தலைவராக 2022 - 2025 வரை பதவி வகித்தார்.
ராகுல் டிராவிட், 24,000 ரன்களைக் கடந்த இந்தியாவின் சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவர். அடுத்த தலைமுறை வீரர்களை போட்டிகளுக்குச் சிறந்த முறையில் தயார்படுத்தும் பணியில் இருந்த இவர் முந்தைய டி20 உலகக் கோப்பைப் போட்டி 2024 வரை இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக இருந்தார்.
இந்த நிகழ்வில் பல பிரிவுகளின் கீழ் கிரிக்கெட் வீரர்களுக்கு விருதுகள் வழங்கப்படவுள்ளது. நாமன் விருது வழங்கும் விழா நாளை நடைபெறும் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.