சஞ்சு சாம்சனுக்கு சிறந்த வீரருக்கான ஐசிசி விருது!
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வழங்கும் மார்ச் மாதத்திற்கான சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விருது சஞ்சு சாம்சனுக்கு வழங்கப்படுகிறது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) வழங்கும் மார்ச் மாதத்திற்கான சிறந்த கிரிக்கெட் வீரருக்கான விருது சஞ்சு சாம்சனுக்கு வழங்கப்படுகிறது.
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தும் வீரர்களுக்கு, சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐசிசி) சார்பில் ஒவ்வொரு மாதமும் விருது வழங்கி கௌரவிக்கப்படுகிறது.
அதன்படி, மார்ச் மாதத்துக்கான ஐசிசியின் சிறந்த விளையாட்டு வீரராக இந்திய அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் மற்றும் விக்கெட் கீப்பரான சஞ்சு சாம்சனுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement
டி20 உலகக் கோப்பைத் தொடரின் தொடக்க ஆட்டங்களில் வாய்ப்பு கிடைக்காமல் திணறிய சஞ்சு சாம்சன், இறுதி ஆட்டங்களில் தனக்கு கிடைத்த வாய்ப்புகளைப் பயன்படுத்தி முக்கியமான நேரத்தில் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் சென்றார்.
அந்தத் தொடரில் ஜிம்பாப்வே அணிக்கு எதிராக 24 ரன்களுடன் விளையாடத் தொடங்கிய அவர், மேற்கின்ஷிய தீவுகளுக்கு எதிராக 97 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் அணியை அரையிறுதியில் விளையாடச் செய்தார்.
தொடர்ந்து, வான்கடே மைதானத்தில் நடந்த அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்துக்கு எதிராக 89 ரன்கள் குவித்து, சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
மேலும், நியூசிலாந்துக்கு எதிரான இறுதிப் போட்டியில் 89 ரன்கள் குவித்து இந்தியா அபாரமான வெற்றியைப் பெற சஞ்சு சாம்சன் உதவினார். அவர் அதிரடியாக விளையாடிய 3 முக்கியப் போட்டிகளில் 275 ரன்களுடன் அந்தத் தொடரின் சிறந்த வீரருக்கான பட்டத்தையும் பெற்றார்.
இதனைத் தொடர்ந்து, மார்ச் மாதத்திற்கான சிறந்த வீரர் விருதை சஞ்சு சாம்சனுக்கு வழங்குவதாக ஐசிசி அறிவித்துள்ளது. சாம்சன் இந்த விருதைப் பெறுவது இதுவே முதல்முறை.
இதுபற்றி சஞ்சு சாம்சன் கூறுகையில், “இந்த மாதத்திற்கான சிறந்த வீரருக்கான ஐசிசி விருதை பெறுவது மிகவும் அற்புதமான உணர்வு. எனது கிரிக்கெட் வாழ்க்கையில் மறக்கமுடியாத காலகட்டத்தில் இது கிடைத்திருப்பது இன்னும் சிறப்பாக உள்ளது.
டி20 உலகக் கோப்பையில் இந்தியாவின் வெற்றியில் பங்கெடுத்தது என்னுடைய கனவு நினைவான தருணமாக இருந்தது. அதன் மகத்துவத்தை முழுமையாக உணரவே எனக்குச் சில காலம் பிடித்தது.
இந்திய கிரிக்கெட்டிற்கு இது ஒரு உற்சாகமான காலகட்டம். நம்மிடம் மிகச்சிறந்த திறமைசாலிகள் உள்ளனர். எனக்குக் கிடைத்த வாய்ப்புகளுக்கும், நான் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த உதவிய எனது சக வீரர்கள், பயிற்சியாளர்களின் நம்பிக்கை மற்றும் ஆதரவிற்கும் நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன், என்று அவர் தெரிவித்தார்.