இந்திய இலக்கியச் சிற்பிகள்
தொல்காப்பிய ஆராய்ச்சிக் காண்டிகை உரை இவரது வாழ்நாள் சாதனை உழைப்பாகும்.
இந்திய இலக்கியச் சிற்பிகள் ச.பாலசுந்தரனார்-பா. மதிவாணன்; பக். 128; ரூ. 100; சாகித்திய அகாதெமி, சென்னை-600 018, ✆ 044-2431 1741.
பள்ளிக் கல்வியைத் தொடரமுடியாமல் (ஏழாம் வகுப்பைப் பாதியில் நிறுத்திக் கொண்டார்) உலகியலில் உழன்று ஓவியமும் சிற்பமும் சிறிதே பயின்று, கல்லுப் பட்டறையிலும், துணிக் கடையிலும் வேலை செய்து, பத்தாண்டுகளுக்குப் பிறகு, கல்லூரியில் சேர்ந்து வித்வான் ஆகி, பின்னாளில் தவிர்க்க முடியாத தமிழ் ஆளுமையாக உயர்ந்து பலருக்கும் பாடமானவர் பாலசுந்தரனார்.
பாலசுந்தரனார் பல்வேறு தளங்களில் புகழ்பெற்று விளங்கியவர். சிறந்த மரபுக் கவிஞராகவும், ஆய்வறிஞராகவும் விளங்கியவர். இவரின் இலக்கண உரைகள், இலக்கண நூலாக்கம் ஆகியவற்றுக்கு ஆய்வே அடிப்படை. கவிதைகள், கவிதைத் திறனாய்வுகள் என 50-க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார்.
'வரலாறு எழுதும் அளவுக்கு என் வாழ்வில் ஏற்றத் தாழ்வுகள் பெரிதுமில்லை. அதனால், என் வாழ்க்கையில் நேர்ந்த, மறக்கமுடியாத சம்பவங்கள் சிலவற்றை 'நினைவலைகள்' என்னும் தலைப்பில் எழுதி வைத்தேன்' என்று தன்னடக்கத்துடன் கூறும் பாலசுந்தரனார், கரந்தைப் புலவர் கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றியவர்; மாணவர்களுக்கு எடுத்துக்காட்டாக விளங்கியவர்; பல்வேறு தமிழ் இலக்கிய இதழ்களில் எழுதியவர்.
தொல்காப்பியச் செம்மல் விருது, தமிழ்ப் பேரவை செம்மல் விருது, மாமன்னன் இராசராசன் விருது, இலங்கைப் பேராசிரியர் செல்வநாயகம் நினைவு விருது உள்பட பல்வேறு விருதுகளைப் பெற்றவர். தொல்காப்பிய ஆராய்ச்சிக் காண்டிகை உரை இவரது வாழ்நாள் சாதனை உழைப்பாகும்.