முகப்பு
வெள்ளிமணி

கீர்த்தி தரும் கீரனூர்!

அருணகிரிநாதரின் திருப்புகழ் பாடல் பெற்ற தலங்கள் என இதுவரை கண்டறியப்பட்டுள்ள தலங்கள் மொத்தம் 206. அவற்றுள் அதிகமான திருப்புகழ் பாடல்களைப் பெற்ற தலம் என்ற பெருமையுடைய திருத்தலம் பழநி. "கலிசை சேவகன்' என்

Updated On : 28 டிசம்பர், 2023 at 4:42 PM
பகிர்:

அருணகிரிநாதரின் திருப்புகழ் பாடல் பெற்ற தலங்கள் என இதுவரை கண்டறியப்பட்டுள்ள தலங்கள் மொத்தம் 206. அவற்றுள் அதிகமான திருப்புகழ் பாடல்களைப் பெற்ற தலம் என்ற பெருமையுடைய திருத்தலம் பழநி. "கலிசை சேவகன்' என்ற குறுநில மன்னனின் ஆதரவில் பழநியில் பல நாட்கள் தங்கிப் பெருமானை வழிபட்டதோடு மட்டுமல்லாமல் அதன் அருகில் உள்ள தலங்களுக்கும் சென்று அங்குள்ள முருகன் மீதும் திருப்புகழ் பாடி மகிழ்ந்தார் அருணகிரியார். அவ்வாறு திருப்புகழ் பாடல் பெற்ற தலங்களுள் பழநிக்கு வடக்கே 16 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கீரனூரும் ஒன்று.

கொங்கு நாட்டில் உள்ள பழமையான சிவத்தலங்களில் ஒன்றான "கீரனூர் திருவாகீஸ்வரமுடையார் கோயில்' ஊருக்கு வெளியே அமைதியான சூழலில் உள்ளது. பள்ளத்தில் அமைந்துள்ள இக்கோயிலின் உள்ளே படியிறங்கிச் செல்ல வேண்டும். சோழர் காலக் கட்டிடக்கலை பாணியில் உள்ள கருவறை, அர்த்தமண்டபம், மகா மண்டபச் சுவர்கள் இவற்றோடு எங்கு பார்த்தாலும் கல்வெட்டுகள் காணப்படுகின்றன.

இந்தச் சிவாலயத்து முருகப் பெருமானே அருணகிரியாரின் அழகு தமிழால் ஆராதிக்கப்பட்ட பெருமையுடையவர். பண்டைய கல்வெட்டுகள் நிறைந்துள்ள பெருமையும் இத்தலத்திற்கு உண்டு.

வீரசோழன், வீரராஜேந்திரன், குலோத்துங்கன், விக்ரம சோழன், ரவிகண்டன், வீர பாண்டியன், குலசேகர பாண்டியன் மற்றும் விஜய நகர மன்னர்களின் கல்வெட்டுகள் இக்கோயிலில் இருந்து படியெடுக்கப்பட்டுள்ளன.

இவற்றுள் காலத்தால் முற்பட்ட கல்வெட்டு வீரசோழன் கல்வெட்டாக இருப்பதாலும், ஊரினுடைய பெயர் வீரசோழன் பெயரால் கொழுமம் கொண்ட "சோழ நல்லூர்' என்று குறிப்பிடப்பட்டுள்ளதாலும், இக்கோயில் வீரசோழன் காலத்தில் முழுதுமாகச் செப்பனிடப்பட்ட கோயிலாகக் கருதப்படுகின்றது. கொங்கு சோழனாகிய வீர ராஜேந்திரன், இத்தலத்துப் பெருமான் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டு பல்வேறு தானங்களை அளித்துள்ளான்.

இக்கோயிலில் இருக்கும் 20க்கும் மேற்பட்ட கல்வெட்டுகளில் இம்மன்னன் அளித்த தங்க ஆபரணங்கள், நந்தா விளக்குகள், வரியில்லா நிலங்கள் போன்ற தானங்களைப் பற்றிய செய்திகளே அதிக அளவில் காணப்படுகின்றன. இரண்டு கல்வெட்டுகள், ஒரு காலத்தில் இக்கோயிலில் இருந்த ஆதிநடேஸ்வர சுவாமியைப் பற்றிக் குறிப்பிடுகின்றன.

கோயில் சுவரில் உள்ள ஏராளமான கல்வெட்டுகளைப் பார்த்தபடியே வலம் வருகின்றோம். ஈசான்ய மூலையில் உள்ள பைரவரை வணங்கி உள்ளே நுழைந்தால், மண்டபத்தில் கீசகனுடைய உருவம் காணப்படுகின்றது. "மகாபாரதத்தில் பஞ்ச பாண்டவர்களின் அஞ்ஞாத வாச காலத்தில்' பீமனால் கொல்லப்பட்ட விராட தேசத்து மன்னனின் மைத்துனனாகிய கீசகனின் சொந்த ஊர் இது; ஆதலால் "கீசகனூர்' என்று அழைக்கப்பட்டு பின் "கீரனூர்' ஆயிற்று என்றொரு செவி வழிச் செய்தியிங்கு புழங்குகின்றது.  பஞ்ச பாண்டவர்கள் தங்கியிருந்த மலை, பழநி அருகே உள்ள "ஐவர் மலை' என்றும் கூறப்படுகின்றது. இச்செய்திகள், கொங்கு நாட்டைப் பற்றிய பழைய நாட்டுக் கதைகளில் காணப்படுகின்றன.

ஆறுமுகன்

மகாமண்டபத்தில் திருப்புகழ் பாடல் பெற்ற குமரன் ஆறுதிருமுகங்களும், பன்னிரண்டு கரங்களும் கொண்டு, மயிலுடன் கிழக்கு நோக்கிக்  காட்சியளிக்கின்றார்.

அமிர்தகர வல்லி

அம்பாள் சந்நிதி தனியே உள்ளது. மேல் இரு கைகளில் நீலோத்பலமும், தாமரை மலரும் கொண்டு அபய, வரத கரங்களுடன் தெற்கு வாயிலை நோக்கியபடி உள்ளாள். சோழர் காலத்தைச் சேர்ந்த அழகிய திருவுருவம் கொண்ட இந்த அம்பாளின் பெயர் அமிர்தகரவல்லி. அதனால்தானோ என்னவோ இத்தல முருகனைப் பாடிய அருணகிரிநாதர்,

 ""பார மேருப ருப்பத மத்தென

நேரிதாக எடுத்துட னட்டுமை

பாக ராரபடப் பணி சுற்றிடு கயிறாகக்

கீரவாரிதி யைக்கடை வித்ததி

காரியாய் அமுதத்தை யளித்த க்ரு பாளுவாகிய பச்சுரு வச்சுதன் மருகோனே

கீரனூர் உறை சக்தி தரித்தருள் பெருமாளே''

  என்று  பாற்கடலைக் கடைந்த நிகழ்ச்சியைத் திருப்புகழில் குறிப்பிட்டுள்ளார் போலும்.

வாக்கு வன்மை தரும் வள்ளல்!

கருவறையில் இத்தலத்து நாயகரான "வாகீஸ்வரர்' சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியுள்ளார். சிறிய லிங்க பாணத்துடன், இரு பிரிவுகளுடன் கூடிய சதுர வடிவ ஆவுடையாருடன் சற்று வித்தியாசமாகக் காணப்படுகின்றார். வாக்குக்கு ஈஸ்வரர் இவர்.  வாக்கு வன்மையும் அதனால் கீர்த்தியும் பெற இப்பெருமானை வழிபடுதல் சிறப்பு.

நடை திறந்திருக்கும் நேரம்:

பழநி திருக்கோயில் நிர்வாகத்தின் கீழ் உள்ள இக்கோயில் காலை 9 மணி முதல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் 7 மணி வரையிலும் திறந்திருக்கும். தினசரி பூஜைகள் சிறப்பான முறையில் நடைபெற்ற போதிலும் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட கும்பாபிஷேகத் திருப்பணிகள் நிறைவு பெறாமல் இருப்பதற்கான காரணம் தெரியவில்லை.

பழநி முருகனை தரிசிக்கச் செல்லும்போது இத்தலத்துப் பெருமானையும் வழிபட்டுப் பெயரும், புகழும், வாக்கு வன்மையும் பெற்று வளமோடு வாழ்வோமாக!

முழு கட்டுரையைப் படிக்க →