முகப்பு
வெள்ளிமணி

பழையபுதூரில் அருளும் ஆதிமூர்த்தி!

தன்னை நாடி வருவோருக்கு அருளை வழங்கி ஆதரிக்கும் அருளாளனாக ஆழ்வார் திருநகரியில் வீற்றிருக்கிறார் ஸ்ரீஆதிமூர்த்தி பெருமாள்.

Updated On : 27 டிசம்பர், 2012 at 5:33 PM
பகிர்:

தன்னை நாடி வருவோருக்கு அருளை வழங்கி ஆதரிக்கும் அருளாளனாக ஆழ்வார் திருநகரியில் வீற்றிருக்கிறார் ஸ்ரீஆதிமூர்த்தி பெருமாள். அதே திருநாமத்துடன் பெரியநாயக்கன்பாளையம் அருகே பழையபுதூரில் உள்ள ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஆதிமூர்த்தி பெருமாளும் வேண்டுவோருக்கு அருள்பாலித்து அரவணைக்கின்றார்.

ஏறக்குறைய முன்னூறு வருடங்களுக்கு முன்னால் ஸ்ரீரங்கத்திலிருந்து சிலர் பொதி மூட்டைகளை ஏற்றிக் கொண்டு கோவை வழியாக மைசூருக்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது பெரியநாயக்கன்பாளையம் என்ற ஊரே இல்லை. கூடலூர் கிராமம்தான் பிரதானமாக இருந்தது. இங்கு இரவில் தங்கியவர்கள், தாங்கள் உடன் கொண்டு வந்திருந்த ராமானுஜர் சிலையை வைத்துவிட்டு சென்றுவிட்டனர்.

இதனைக் கண்ட இப்பகுதி பெரியோர்கள், சிலையை வைத்து வணங்க ஆரம்பித்தனர். பின்னர் அருகிலேயே கற்களை வைத்து ஆதிமூர்த்தி பெருமாளாகவும் சேவித்து வந்தனர். பின்னர் பெரிய பாறைகளால் ஆன கருவறையும், அர்த்தமண்டபமும் எழுப்பப்பட்டன.

Advertisement

அப்போது மைசூரை ஆண்டு வந்த ஒரு முஸ்லிம் அரசர் இந்த கோயிலுக்கு மானியங்கள் அளித்து உதவினார். ஆதிமூர்த்தி பெருமாள் கோயிலுக்கு மானிய நிலம் கிடைத்தது. ஆனால் அதனை வைத்துக் கொண்டு கோயிலை பராமரிக்க இயலவில்லை. சிதிலமடைந்து கிடந்த கோயிலைக் கண்ட இந்த தலைமுறைப் பெரியோர்கள், தற்போது சிறப்பான கட்டமைப்புடன் கோயிலை உருவாக்கியுள்ளனர்.

கோயில் அமைப்பு: மிகப் பரந்த நிலப்பரப்பில் கருவறை, அர்த்தமண்டபம், மகா மண்டபம் ஆகியவை கட்டப்பட்டுள்ளன. முன்னால் கருட கம்பம் உள்ளது. மகா மண்டபத்தில் துவார பாலகர்கள் பக்தர்களை வரவேற்கின்றனர். இவர்களுக்கு முன்புறம் கருடாழ்வார் அருள்பாலிக்கின்றார். கருவறையில் ஸ்ரீóதேவி, பூதேவியுடன் ஆதிமூர்த்தி பெருமாள் வீற்றிருக்கிறார். கோயில் தென்புறத்தில் ராமாநுஜர் அமர்ந்த கோலத்திலும், வடக்கில் ஆஞ்சநேயர் நின்ற கோலத்திலும் அருள்பாலிக்கின்றனர்.

தமிழகத்தில் ஆழ்வார் திருநகரியிலுள்ள ஆதிமூர்த்தி பெருமாளை அடுத்து இக்கோயிலின் பெருமாள்தான் அதே திருநாமத்தில் சேவிக்கப்படுவது விசேஷம்.

திருவிழாக்கள்: தினமும் இருகால பூஜைகள் நடக்கின்றன. வைணவ சம்பிரதாயத்தில் உள்ள முக்கிய விசேஷங்கள் அனைத்தும் குறிப்பாக ஆழ்வார் திருநட்சத்திர தினங்கள், பெருமாள் திருக்கல்யாணம் ஆகியவை சிறப்பாகக் கொண்டாடப்படுகின்றன. சனிக்கிழமைதோறும் சிறப்பு பஜனை நடத்தப்படுகிறது.

அமைவிடம்: கோவை -மேட்டுப்பாளையம் சாலையில் உள்ளது பெரியநாயக்கன்பாளையம் பேருந்து நிறுத்தம். இதற்கு மேற்கே 2 கி.மீ. தொலைவில் உள்ள பழையபுதூரில் உள்ளது ஆலயம். காலை 8 மணியிலிருந்து 10 மணி வரையும், மாலை 6 மணிமுதல் 8 மணி வரையும் கோயில் திறந்திருக்கும்.

மேலும் தகவலுக்கு 97906 42714.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.