திருவருள் புரியும் ஸ்ரீதிருமலைராயர்!
கோவை மாவட்டம், பெரியநாயக்கன் பாளையத்திற்கு அருகே வீரபாண்டிப் பிரிவிலிருந்து கிழக்கே 7 கி.மீ. தொலைவில் உள்ளது காளிபாளையம்.
கோவை மாவட்டம், பெரியநாயக்கன் பாளையத்திற்கு அருகே வீரபாண்டிப் பிரிவிலிருந்து கிழக்கே 7 கி.மீ. தொலைவில் உள்ளது காளிபாளையம். முன்பு இக்கிராமத்தில் கள்ளிச் செடிகள் நிறைந்திருந்தன. இம்மாவட்டத்தின் பல பகுதிகளைச் சேர்ந்த மக்கள், காரமடை ரங்கநாதர் கோயில் திருவிழாவிற்கு இக்கிராமத்தின் வழியே நடந்து செல்வர்.
கிருஷ்ண தேவராயரின் தளபதியாக இருந்த நாகம்மநாயக்கன் தமிழகப் பகுதிக்கு தனது படைகளுடன் வந்தார். அப்போது அந்தப் படைகளுக்கு சேவை செய்ய வந்த ஒரு பிரிவினர் காளிபாளையம் கிராமத்திலேயே தங்கிவிட்டனர். அவர்களில் சிலர் மாவுலிங்க மரத்தடியில் கற்சிலை வைத்து திருமலைராயப் பெருமாளாக எண்ணி வணங்கினர். வைணவ பூஜை வழிமுறைகள் தெரியவில்லை என்றாலும் "கோவிந்தா' என்ற மந்திரத்தை உச்சரித்தபடி, தாங்கள் உண்பதற்காக சமைக்கும் உணவையே நைவேத்தியமாகப் படைத்து வழிபட்டனர். அவர்களின் 4ஆம் தலைமுறையினர் மாவுலிங்க மரத்தடியில் மேடை அமைத்து அந்த சிலையை பிரதிஷ்டை செய்து பூஜித்தனர்.
தற்போது 5ஆம் தலைமுறையைச் சேர்ந்தவர்கள் ஊர் மக்களின் ஒத்துழைப்புடன் மண்மேடையை அகற்றிவிட்டு சிறப்புற கோயில் எழுப்பியுள்ளனர். இந்தக் கோயிலில் ஸ்ரீதேவி - பூதேவி சமேத திருமலைராயப் பெருமாள் கிழக்கு நோக்கிய திருமுகத்துடன் அருள்பாலிக்கிறார்.
Advertisement
ஆண்டுதோறும் புரட்டாசி மாதம், கடைசி சனிக்கிழமை பொதுமக்கள் திரளாகக் கூடி வில்வ மாலை அணிவித்து பெருமாளை சேவிக்கின்றனர். வில்வ மரம் தல விருட்சம். வைணவ திருநாட்கள் அனைத்திலும் சிறப்பு பூஜைகள் நடப்பதோடு தினமும் இரண்டு கால பூஜைகளும் நடக்கின்றன. உற்ஸவ மூர்த்தியும் உண்டு.
இத்தகைய சிறப்பு வாய்ந்த இக்கோயிலில் தற்போது முன் மண்டபக் கட்டுமானப் பணிகள் நடக்கின்றன.
விவரங்களுக்கு: 94434 72753