முகப்பு
வெள்ளிமணி

கோகர்ண நாயகி

அன்னை பராசக்தியின் உடற்கூறுகள் விழுந்த சக்திபீடங்களில் ஒன்றாகத் திகழ்கிறது கோகர்ணம்.

Updated On : 25 ஏப்ரல், 2013 at 3:31 PM
பகிர்:
Updated On : 3 ஜனவரி, 2024 at 4:57 PM

அன்னை பராசக்தியின் உடற்கூறுகள் விழுந்த சக்திபீடங்களில் ஒன்றாகத் திகழ்கிறது கோகர்ணம். அன்னையின் காது விழுந்த தலமாக விளங்கும் இத்தலம் சக்தி பீடங்களில் சிறப்பான இடத்தை வகிக்கிறது. "கோ' என்றால் பூமி. "கர்ணம்' என்றால் காது. இதுவே கோகர்ணம் எனப்பட்டது. இங்கே பூமி தேவியின் காது வழியே பரமசிவனார் வெளிப்பட்டு கோயில்கொண்டார் என்று கூறப்படுகிறது.

இக்கலியுகத்தின் துவக்கத்தில் அனைத்து உலகங்களும் தண்ணீரால் சூழப்பட்டு பிரளய மயமாக இருந்தபோது, பிரம்மதேவன் மீண்டும் தனது படைப்புத் தொழிலைத் துவக்கும் பொருட்டு, கடும் தவத்தை மேற்கொண்டார். அதன் காரணமாக பிரம்மாவின் முகத்தில் இருந்து ருத்திரன் தோன்றினார். படைப்புத் தொழிலை மேற்கொள்ளும்படி பிரம்மதேவர் அவரிடம் வேண்டினார். அதனை ஏற்ற ருத்திரர் பாதாள உலகத்தில் இருந்தபடி சிருஷ்டியினை செய்யத் தொடங்கினார். அவருடைய படைப்புகள் எல்லாம் மிகவும் தூய்மை உடையவையாகவே திகழ்ந்தன. உலக நடைமுறைக்கு இவ்விதப் படைப்புகள் ஏற்புடையதாக இருக்காது என்று கருதிய பிரம்ம தேவர் சத்வ, ரஜோ, தமோ குணங்கள் கலந்த உயிர்களைப் படைக்கத் தொடங்கினார்.

தன் படைப்புகளுக்கு முற்றிலும் மாறானதாக இந்த பிரம்ம தேவன் படைப்புத் தொழிலைச் செய்கிறாரே என்று கோபம் கொண்டார் ருத்திரர். எனவே, ருத்திரன் பூமியினைப் பிளந்து கொண்டு பாதாள உலகில் இருந்து பூமியின் மேலே வருவதற்கு முயன்றார்.
 அப்போது பூமிதேவி பரமசிவனாரிடம் வேண்டிக் கொண்டாள்... ""ஸ்வாமி, என்னை வருந்தச் செய்யாமல், காது வழியாக வெளியே வாருங்கள்'' என்று! பூமாதேவியின் வேண்டுகோளை ஏற்று, பூமியின் காது வழியே வெளிவந்தார் சிவபெருமான். காது வழியாக அவர் வெளியேறியதால் இந்த இடம் கோகர்ணம் எனப் பெயர் பெற்றதாம்.

Advertisement

அதன்பின்னர், பரமசிவன் கணங்களை உற்பத்தி செய்து பிரம்மன் செய்த சிருஷ்டிகளை அழிக்கத் தொடங்கினார். அந்த இடத்துக்கு வந்த மஹாவிஷ்ணு ""யுக முடிவில் வருகின்ற பிரளய காலத்திலே இவற்றையெல்லாம் அழிக்கலாம், அதுவரை பொறுத்திருங்கள்'' என்றார். அதனை ஏற்ற சிவபெருமானும் இந்தக் கோகர்ணத்திலே கோயில் கொண்டார். எனவே இந்தத் தலத்தில் சிவபெருமானுக்கு கோகர்ணேஸ்வரர் என்றும் இறைவிக்கு கோகர்ணநாயகி என்றும் பெயர் ஏற்பட்டது.

இருப்பிடம்: பெங்களூர் சாகரில் இருந்து சுமார் 96 கி.மீ. பயணித்து சீர்சியை அடைந்து அங்கிருந்து கும்டா வழியாகச் சென்றால் 96 கி.மீ. தொலைவில் இந்தத் தலத்தை அடையலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.