மத்தியப் பிரதேச மாநிலம் சித்திரகூட மலைப் பிரதேசத்தில் ராமகிரி என்னும் இடத்தில்தான் ஷிவானி தேவி ஆலயம் உள்ளது. 21வது சக்தி பீடமாக விளங்கும் இது, அம்மனின் உடற்கூறுகளில் நாபிக்கு கீழ்ப் பகுதி விழுந்த இடமாகக் கருதப்படுகிறது. சிலர் வலது மார்புப் பகுதி விழுந்த இடம் என்பர்.
சித்திரகூட மலைப் பிரதேசத்தில் எழுந்தருளியுள்ள அன்னையின் திருநாமம் ஷிவானி என்றும், இறைவன் சண்டா என்றும் அழைக்கப்படுகின்றனர்.
ஷிவானி தேவியின் ஆலயம் தற்போது மைகர் என்னும் இடத்தில் குன்றின்மேல் அமைந்துள்ளது. இந்தக் கோயிலை சாரதாதேவி மந்திர் என்று அங்குள்ளவர்கள் அழைக்கின்றனர். நான்முகனின் மனைவி சரஸ்வதி, பூவுலகில் ஸ்ரீசாரதாம்பளாகத் தோன்றியதாக புராணங்கள் கூறுகின்றன. படைப்புத் தொழிலின் தலைவனான பிரம்ம தேவரும், தேவி சரஸ்வதியும் தங்கள் பணிகளில் ஈடுபட்டிருந்தனர். அந்நேரம் முனிவர்களும், அசுரர்களும் அங்கே கூடியிருந்தனர். பிரம்மாவின் ஆணைக்கு இணங்க மகரிஷிகள், சித்தர்கள் ஆகியோர் நான்கு வேதங்களையும் ஓதிக் கொண்டிருந்தனர்.
ஒரே ஸ்வரத்தில் சாம வேதத்தைப் பாடிக் கொண்டிருந்த போது, திடீரென வித்தியாசமான ஒலி அங்கே கேட்டது. ஒலி எழுப்பியவரைக் கண்டுபிடித்த அன்னை சரஸ்வதி, தன்நிலை மறந்து நகைத்தாள். உடனே சபை அப்படியே ஸ்தம்பித்தது. கண நேரத்தில் அந்த முனிவர் சுதாரித்தார். சரஸ்வதியை சுட்டெரிக்கும் பார்வை பார்த்தார்.
அவர் துர்வாச முனிவர். கோபத்தின் இருப்பிடமான துர்வாசர், திருச்சபையில் தன்னை அவமதித்த சரஸ்வதிக்கு சாபம் அளித்தார். வருந்திய சரஸ்வதி தேவி, தன் அற்பச் செயலை மன்னிக்கும்படி துர்வாசரிடம் கேட்டாள்.
இவ்வாறு சரஸ்வதி தேவியான சாரதாதேவியின் கதையுடன் தொடர்புடைய இந்தத் தலத்தில்தான் அன்னையின் மார்புப் பகுதி விழுந்து சக்தி பீடம் ஆனதாம்.
இவ்வாலயத்தில் உள்ள சாரதா தேவியின் சந்நிதியில் நாக்கின் சிறிய நுனிப்பகுதியை அறுத்து நேர்த்திக் கடனாக சமர்ப்பிக்கின்றனர். அறுபட்ட அப்பகுதி 24 மணி நேரத்துக்குள் வளரும் என்பது மக்களின் நம்பிக்கை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.