மத்தியப் பிரதேசத்தில், உஜ்ஜயினி மாவட்டத்தில் புகழ்பெற்ற கோயில்களில் பைரவ பர்வதமும் ஒன்று. அம்மனின் 51 சக்தி பீடங்களில் 10வது பீடமாக பர்வதம் விளங்குகிறது. அம்மனின் உடற்கூறுகளில் இப்பூவுலகில் மேல் உதடு விழுந்த இடமாகக் கருதப்படுகிறது.
இத்தலத்தில் உள்ள இறைவியின் திருப்பெயர் அவந்தி தேதி. மா அவந்திகா என்று பக்தர்கள் அன்புடன் அழைக்கின்றனர். இறைவன் லம்பகர்ன பைரவர் (மாகா காலேஸ்வர்) என்ற திருப்பெயரில் தரிசனம் தருகிறார். அம்மனின் சக்தி பீடங்களில் இது மகோத்பலா பீடம் என்று சிறப்புடன் போற்றப்படுகிறது.
உஜ்ஜயினி நகரிலிருந்து சுமார் 7 கி.மீ தொலைவில் உள்ளது பைரவகர்ஹ் கிராமம். ஷிப்ரா நதியை ஒட்டிய இந்தச் சிறு குன்றின் மீதுதான் அம்மனின் மேல் உதடு விழுந்ததாகக் கருதப்படுகிறது. இங்கே அம்மனுக்கு என்று தனிக் கோவில் எதுவும் இல்லை. மகாசக்திபீடேஸ்வரி இங்கே அருவமாகவே திகழ்கிறாள். ஆனால் அவந்தி தேவி எனும் நாமம் கொண்ட சிறிய சந்நிதி, நகரிலுள்ள மகா காலேஸ்வரர் ஆலய பிராகாரத்தின் வடமேற்குக் கோடியில் புஷ்கரணியை ஒட்டிக் காணப்படுகிறது. இங்கே அவந்தி தேவி சிலா ரூபமாகக் காட்சியளிக்கிறாள்.
இந்நகரில் பைரவருக்கு எட்டுக் கோயில்கள் உள்ளன. அவற்றில் ஒரு கோயில், பைரவ கிரியின் உச்சியில் காணப்படும் கால பைரவர் கோயில். இவை தவிர, அங்குள்ள சில தேவி ஆலயங்களிலும் பைரவர் காட்சியளிக்கிறார்.
விக்ரமாதித்தன், சாலிவாஹனன், காளிதாஸன், தண்டி, பவபூதி, ராஜா பர்த்ரு ஹரி ஆகியோர் பிறந்ததும் இந்த உஜ்ஜயினியில்தான். இங்குள்ள மாகா காளருக்கு அதிகாலையில் மயானச் சாம்பலால் அபிஷேகம் நிகழ்கிறது. இதையே பிரசாதமாகவும் வழங்குகின்றனர். கார்த்திகை மாதத்தில் பாங் எனப்படும் அபின் காப்பும், வெந்நீர் அபிஷேகமும் இங்கே சிறப்பு
பல்வேறு வரலாற்று நிகழ்வுகள் அன்னையின் இவ்வாலயத்தில் நடந்துள்ளன. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் இன்னொரு திருவிழாவை ஸிம்ஹஸ்த் மேளா என்பர். சில நேரம் கும்பமேளாவும் ஸிம்ஹஸ்த் மேளாவும் ஒருங்கே இணைந்து நிகழ்வதும் உண்டு. அந்நேரத்தில், இங்குள்ள ஷிப்ரா நதியில் நீராடும் பக்தர்களுக்கு மோட்சம் நிச்சயம் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.